அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 24, 2010

வரலாறு - தோழர்கள்

தோழர்கள் - 3 print Email

அகழிப்போர்நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)

அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.

அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: "யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்".

அந்த நள்ளிரவில் முற்றுகை இட்டிருந்த மக்கத்துப் படைப்பிரிவிலிருந்து ஒருவர் அவசரமாய் நழுவி முஸ்லிம்களின் கூடாரத்தின் பக்கம்வர, அவரை நபியவர்கள் பார்த்து விட்டார்கள். அடையாளம் தெரிந்துவிட ஆச்சரியத்துடன், "நுஐம் பின் மஸ்ஊத்!"

"ஆமாம், நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் நுஐம்.

"இந்த இரவு நேரத்தில் இங்கு உன்னை அழைத்து வந்தது எது?" என்று கேட்டார்கள்.

"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்?"

எதிரித் தரப்பிலிருந்து நழுவி வந்தவரிடமிருந்து வந்த ஆச்சரியமான பதில் அது - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக. முஹம்மதை அல்லாஹ்வின் தூதர் என ஒப்புக் கொண்டதாக!

இறைவனின் இரண்டு அற்புதங்கள் வெளிப்பட்ட போர் அது. அதிலொன்று நுஐம் பின் மஸ்ஊத். அவரது புத்தி சாதுரியமான போர் உத்தி!

கத்தஃபான் (بنو غطفان) எனும் கோத்திரத்தினர் நஜ்துப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். நஜ்துப் பிரதேசம் மதீனா நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. நுஐம், அந்த கத்தஃபான் கோத்திரத்தைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர், மிகுந்த புத்திசாலி. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவல்ல புத்திசாதுர்யம் இயற்கையாய் அவரிடம் அமைந்திருந்தது. வரம், இறைவனளித்த வரம். ஆனால் அவரிடம் ஒரு பலவீனம் இருந்தது.

இதெல்லாம் ஒரு பலவீனமா? என்று ஆச்சரியத்துடன் யாரும் முறைக்கலாம். என்ன செய்ய? அந்தளவு முற்றிப்போன நாகரீகம் நம்முடைய நிகழ்காலம். நுஐம் உல்லாசப் பேர்வழி. அதுதான் அவரது பலவீனம். புறம்பான உல்லாசம் தேடிப்போவது அவர் வாடிக்கை. அவருக்குப் பிடித்த மாதிரி யத்ரிப் நகரில் கிடைத்தது அத்தகைய உல்லாசம். மதீனாவின் தொட்டில் பெயர் யத்ரிப் (يثرب).

யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். பனூ கைனுக்கா (بنو قينقاع), பனூ நதீர் (بنو النظير), பனூ குரைளா (بنو قريظة). இதில் பனூ குரைளா கோத்திரத்தினரின் சகவாசம் நுஐமுக்கு அமைந்தது. அவர் குஷியடையும் விதமான உல்லாசம், பாடல்கள், மதுபானங்கள் அவர்களிடம் அவருக்கு ஏகமாய்க் கிடைத்தன. யூதர்களுக்கு நுஐமால் கொழுத்த வருமானம். மனம் நாடும் போதெல்லாம் நஜ்திலிருந்து குதிரையோ, ஒட்டகமோ ஏறி யத்ரிபுக்கு வந்து விடுவார் நுஐம். மதுபானக் கடைகளில் பணம் தண்ணீராய்க் கரையும். பனூ குரைளாவினருக்கு நுஐம் தடையின்றிப் பொன் முட்டையிடும் வாத்து. எனவே, நுஐமின் நெருக்கமான சகவாசம் குரைளாவினருக்கு அமைந்து விட்டது. அதுவே அவர்களுக்கு ஒரு பாதகமாய் அமைந்துவிடப் போவதை அப்பொழுது அவர்களும் அறியவில்லை; நுஐமும் நினைத்திருக்கவில்லை.

குடி, விபச்சாரம், அனாச்சாரம் என்பதெல்லாம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் இருந்தவர்களிடையே மேட்டிமையை வெளிப்படுத்தும் செயல்கள். இந்நிலையில் புத்தெழுச்சியுடன் இஸ்லாம் மக்காவில் புறப்பட்டதும் அந்தச் செய்தி அப்படி-இப்படியென்று நுஐம் காதிலும் வந்து விழுத்தான் செய்தது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருந்தது கேளிக்கை உலகம்; உல்லாச உலகம். அதனால் அந்தச் செய்தி அவருக்குப் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை. ஓரளவு புரிந்த வகையில் இஸ்லாமும் தனது கேளிக்கையும் பல காத தூரம் இடைவெளி கொண்டவை என்று தெரிந்ததாலும், தனது உல்லாசத்திற்கு இஸ்லாம் மாபாதக இடைஞ்சலாய் அமைந்து விடும் என்று அவர் யூகித்து விட்டதாலும், "அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது" என்று நிராகரித்து விட்டார். தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

யத்ரிப் நகரில் மூன்று யூதக் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தார்களல்லவா? அவர்கள் ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோவெல்லாம் அரேபியாவிற்குள் - குறிப்பாக யத்ரிபுக்குள் - வந்து சேர்ந்து குடியேறி, அரபு மொழி பேசி, அரபியர்களுடன் வாழ்ந்து வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர்களது வேதம் அறுதியிட்டுச் சொல்லியிருந்தது. வருவார் ஓர் இறுதித் தூதர், அவர் இன்னன்ன மாதிரியுள்ள ஒரு பிரதேசத்தில் தோன்றுவார்; உங்களையெல்லாம் உய்விப்பார் என்று. அதன்படி அவர்கள் கண்டறிந்து கொண்டது மதீனா பிரதேசத்தை. அதனால் காத்திருந்தார்கள் - தலைமுறை தலைமுறைகளாக!

அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, வேத வாக்கும் பொய்யாகவில்லை. வந்து சேர்ந்தார் முஹம்மது நபி (ஸல்). யத்ரிப் மதீனாவானது. யூதர்கள் மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நகரின் பெயர் மாற்றத்தினாலெல்லாம் அல்ல; அவரது தோற்றுவாய் வேறு என்பதால். நபிமார்கள் மாறி மாறி அவதரித்த தங்களது பனீ இஸ்ராயீல் கிளையிலிருந்து இறுதி நபி வருவார் என்று காத்திருந்தால், சம்பந்தமேயில்லாமல், பனீ இஸ்மாயீல் கோத்திரத்தில் தோன்றிய ஒருவர் தன்னை நபி என்கிறார், இறைவனின் தூதர் என்கிறார், வேதச்செய்தி வருகிறது என்கிறார் என்று திகைத்து விட்டார்கள். தங்களது பிள்ளையேபோல் அவரை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. இருந்தாலும் அகங்காரம் வென்றது; நிராகரித்தனர். மனதில் உண்மை இன்னதென்று உணர்ந்தே நிராகரித்தனர். அத்துடன் இருந்து விட்டாலும் பரவாயில்லை. வினை செய்யத் தொடங்கினர். தீவினை!

ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; இணக்கமாய் வாழலாம் வாருங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைவருடனும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள். யூதர்களும் கையெழுத்திட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தொன்றுதொட்ட குலவழக்கம் ஒன்று இருந்தது. எக்காலத்திலும் உடன்படிக்கையைப் பேணிப் பாதுகாப்பது இழிவானது எனும் வழக்கம். அதை மீறலாகுமோ? எனவே மெதுமெதுவாக உடன்படிக்கையை மீற ஆரம்பித்தார்கள். விஷயம் தீவிரமாகி முதற்கட்டமாக பனூ கைனுகாவுடன் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அதை விரிவாக வேறொரு நிகழ்ச்சியில் பின்னர் பார்ப்போம். பிரச்சனை ஏற்பட்டது. வெட்டுக் குத்து நிகழ்ந்து, இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதுவரை இப்போது தெரிந்தால் போதும். "உங்கள் அட்டகாசம் போதும்" என்று அந்தக் கோத்திரத்தினர் அனைவரும் மதீனாவிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

இதைப் பார்த்து மற்ற இரு கோத்திரத்தினரும் பாடம் படித்திருக்க வேண்டும். அல்லாமல் அடுத்துத் தொல்லை கொடுக்க ஆயத்தமானார்கள். இம்முறை பனூ நதீர். முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் பற்றி முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கவிதை, புறம், அவதூறு, மக்காவிற்குச் சென்று குரைஷிகளுக்குத் தூபம் என்பதெல்லாம் போக, ஒரு கட்டத்தில் முஹம்மது நபியின் தலைமேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லவே துணிந்து விட்டனர். பொறுமையின் எல்லை அத்துடன் முடிவடைந்தது. முஸ்லிம்கள் போர் தொடுக்கத் தயாரானதும் தங்களது கோட்டை-கொத்தளங்களுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். முற்றுகையிடப்பட்டது. ஏறக்குறைய இருவார முற்றுகைக்குப் பிறகு அவர்கள் சரணடைய, "இத்துடன் சரி, இனி இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது, கிளம்பிச் செல்லுங்கள்" என்று அனுமதியளிக்கப்பட்டது.

மதீனாவிலிருந்து கிளம்பிய பனூ நதீர் கூட்டத்தில் பெரும்பகுதியினர் கைபருக்குப் புலம் பெயர, மற்றவர்கள் சிரியா சென்று விட்டனர். கைபர் சென்று குடியேறியவர்கள் ஒழுங்காய் அங்கேயே அமைதியாய் வாழ்ந்திருக்கலாம் - ம்ஹும்! கூடவே பிறந்த விபரீத புத்தி விடவில்லை.

மக்கத்துக் குரைஷிகள் முஸ்லிம்களுடனான முந்தைய போர்களின் வலியால் கோபத்துடன் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், ஹுயை பின் அக்தப் (حيي بن أخطب‎) எனும் பனூ நதீரின் முக்கியப் புள்ளி, மக்கா சென்று குரைஷித் தலைவர்களைச் சந்தித்தான். இந்த ஹுயை பின் அக்தபின் மகளான சஃபிய்யா பின்த் ஹுயை (ரலியல்லாஹு அன்ஹா) பின்னர் முஹம்மது நபியவர்களின் மனைவியானது தனிக் கதை. மக்கா சென்ற அவன் சந்திக்க வேண்டிய தலைவர்களைச் சந்தித்து, சரியான முறையில் கிளற, ஏற்கெனவே அனல் அடங்காமலிருந்த நெருப்பு, எளிதில் பற்றிக் கொண்டது.

"படை திரட்டி நீங்கள் மதீனா வந்தடையும்போது நாங்களும் படையுடன் கலந்து கொள்கிறோம். அந்த முஹம்மதையும் அவர் கூட்டத்தையும் ஒரு கை பார்த்து விடுவோம்" என்று பேசிக் கொள்ளப்பட்டது. சுபயோக சுபதினமாக ஒரு தேதி குறித்தார்கள். அபூஸுஃப்யான் தலைமையில் குரைஷிகள் படை தயாராக ஆரம்பித்தது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க இது பத்தாது. மேலும் கூட்டணி அமைத்துப் பெரும்படை திரட்ட வேண்டும் என்று நிச்சயம் அறிந்திருந்தார்கள் பனூ நதீர் கூட்டத்தார். எனவே அங்கிருந்து அப்படியே நஜ்து சென்றார்கள். அங்குள்ள கத்தஃபான் கோத்திரத்தைப் பேசி வளைத்தார்கள். வளைப்பதற்கு நல்ல விலை பேசப்பட்டது, விளைச்சலில் பாதி கத்தஃபானுக்கு அன்பளிப்பு என்று. அதாவது தங்கள் அறுவடையில் சரிபாதி என்று வாக்களிக்கப்பட்டது. இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று ஏற்றுக்கொண்டு உயைனா இப்னு ஹஸ்ன் தலைமையில் கத்தஃபானின் படை தயாரானது. அதன் முன்னணிப் படை வீரராக நியமிக்கப் பெற்றவர் நுஐம் பின் மஸ்ஊத்.

இது தவிர துலைஹா அஸதி தலைமையில் பனீ அஸத் சேர்ந்து கொண்டனர். பனூ ஸுலைம், பனூ முர்ரா, பனூ ஷுஜா போன்ற இதர கோத்திரத்தினரும் ஏதோ திருவிழா வேடிக்கை பார்க்கப் போவதுபோல் சேர்ந்து கொண்டனர்.

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது பெரிய படை. அந்தக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அது வலுவான பெரிய படை.

சற்று மூச்சு வாங்கிக் கொண்டு நிகழ்காலத்தைப் பார்த்தால், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்ட கூட்டணிப்படை அமைப்பது என்பது ஆயிரத்து நானூற்று சொச்சம் வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற நிதர்சனம் புரியும். ஏதும் மாற்றமில்லை. அன்று பனூ நதீர், இன்று வல்லரசு நாட்டான். அவ்வளவே!

செய்தி மதீனா வந்தடைந்தது. முஹம்மது நபி
(ஸல்) உடனே தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். முஸ்லிம்கள் தரப்பில் ஏறக்குறைய மூவாயிரம் படை வீரர்கள் தேறினர். எதிரியின் வலுவுடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்குதான். காட்டுத்தனமாய் ஒரு முடிவுடன் கூட்டணிப் படை முன்னேறி வருகிறது. என்ன செய்யலாம் எனப் பல திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. ஸல்மான் அல் ஃபாரிஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்து வைத்த ஒரு யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாரசீகத்திலிருந்து வந்தவர் அவர். அரபு நாட்டுப் போர் வீரர்க்ளுக்கு அறிமுகமாகி இல்லாத புதிய தற்காப்பு முறை ஒன்று தெரிவித்தார்.

அகழி!

அனைவருக்கும் அது பிடித்துப்போக, இராப்பகலாக வேலை நடக்க ஆரம்பித்து அகழி தயாரானது.

முஸ்லிம்கள் அகழி வெட்டிவிட்டுக் காத்திருந்தனர். கூட்டணிப் படை மதீனாவை நெருங்கி விட்டிருந்தது. அந்த நேரத்தில் பனூ நதீர் கூட்டத்தார் மற்றொரு சதித் திட்டம் தீட்டினர். மதீனாவில் மிஞ்சியிருந்த பனூ குரைளாவினர், ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்து வந்தார்களல்லவா? அவர்களைச் சென்று சந்தித்து நோண்ட ஆரம்பித்தார்கள். "நீங்களும் வந்து கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள்" என்று. மற்றப் படைகளாவது வெளியிலிருந்து அணிதிரண்டு மதீனா வருகின்றன. இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். போர் என்று அவர்களும் குதித்தால், முஸ்லிம்களின் கதி? அதற்குத்தான் சமயோசிதப் பிரயத்தனம்.

"ம்ம்ம், யோசனை நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும்..." என்று மிகவும் யோசித்தார்கள், பயந்தார்கள் பனூ குரைளாவினர். முஹம்மதை ஒழித்துக் கட்டினால் தேவலை என்ற பேரவா அவர்களின் உள்ளுக்குள்ளும் பலமாய் இருந்ததுதான். "நாங்கள் விரும்பி நிறைவேற்ற நினைக்கும் ஒரு காரியத்திற்கு எங்களையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறீர்கள். ஆனால் முஹம்மதுக்கும் எங்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை இருப்பது உங்களுக்குத் தெரியும். அமைதியும் நிம்மதியும் மதீனாவில் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவருடன் சமாதானம் மீறக் கூடாது என்று அது கூறுகிறது. அந்த உடன்படிக்கை இன்னமும் அமலில்தான் உள்ளது. நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்ளப்போய், முஹம்மத் இந்தப் போரில் வென்று விட்டால் அவரின் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் சூழ்ச்சிக்குப் பலனாய் நாங்கள் நாடு துறக்கும் படியாகிவிடும்" என்றெல்லாம் கவலை தெரிவித்தனர்.

பனூ நதீர் சளைக்கவில்லை. வரும் படையினரின் பலம் எடுத்துரைத்தார்கள். முஹம்மத் இம்முறை எப்படியும் தோல்வியடைவது உறுதி என்று தர்க்கம் விவரித்தார்கள். முழுசாய் இந்தப் பிரச்சனை ஒரு முற்றுப் பெற்றுவிடும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நன்றாக யோசித்தார்கள் பனூ குரைளா. இறுதியில் அம்மி நகர்ந்தது.

உடன்படிக்கையைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, "நீங்கள் முன்னேறி வாருங்கள், இங்குப் பின்புறத்திலிருந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்து விட்டார்கள்.

அது ஒரு பேரிடி! பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கு என்றால் இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு புரியும் எனத் தெரியவில்லை, ஆனால் "சான்ட்விச்" தெரியும். அந்த நிலையாகிப் போனது முஸ்லிம்களின் நிலை.

கூட்டணிப் படையினர் மதீனாவை அடைந்து "ஆ"வென்று வாய் பிளந்து கிடந்த அகழ்நிலத்தைப் பார்த்து "ஹா" வென்று வாய் பிளந்தார்கள். அந்தத் தந்திரம் புதுசு. அதற்குமுன் அவர்கள் அறியாதது அது. பாலம் கட்டியோ, தாவியோ கடக்க முடியாது. அகழிக்கு அந்தப்புறம் முஸ்லிம் படை. சுதாரித்துக் கொண்டு, "பரவாயில்லை, காத்திருப்போம்" என்று அகழிக்கு இந்தப்புறம் தங்கிவிட்டார்கள். முற்றுகை தொடங்கப் பட்டது. வெளியிலிருந்து எந்த உணவோ, பண்டமோ, உதவியோ மதீனாவிற்குள் செல்லமுடியாமல் பாதையடைத்து விட்டார்கள்.

இந்தக் கடுமையான சூழலில்தான் "முனாஃபிக்குகள்" எனும் நயவஞ்சகர்கள் சுயநிறம் காண்பிக்க ஆரம்பித்தார்கள். இஸ்லாம், அல்லாஹ், நபி என்றெல்லாம் அவர்கள் போருக்கு வரவில்லை. வேறு வழியில்லை; வந்திருந்தார்கள். இப்பொழுது சூழ்நிலை முஸ்லிம்களுக்குத் தோல்வி உறுதி என்று அறுதியிட்டு சொல்கிறது. என்ன செய்வது?

அகழி வெட்டும்போது முஹம்மது நபி (ஸல்) சில எதிர்கால நிகழ்வுகள் பற்றிச் சொல்லியிருந்தார்கள் - சீஸர், குஸ்ரோவின் (ரோம மற்றும் பாரசீக சாம்ராஜ்ஜிய) செல்வமெல்லாம் முஸ்லிம்களின் வசமாகும் என்பது சாராம்சம். அது ஞாபகம் வந்து முனாஃபிக்குகளுக்கு, அடக்க மாட்டாத சிரிப்பு எழ,

"சீஸர் மற்றும் குஸ்ரோவின் செல்வமெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று முஹம்மத் சொல்கிறார். ஆனால் இங்கு பார் நம் நிலைமையை. ஒருவராவது நிம்மதியாய் வெளியே சென்று மல-ஜலம் கழித்து விட்டு, பத்திரமாய் திரும்ப முடியாத கேவல நிலை."

மனுஷனோட வயிற்று உபாதையையே சரிசெய்து கொள்ள முடியவில்லை, இதில் செல்வமாம், கிரீடமாம்! இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கிளம்பி விட்டார்கள்.

"என் பெண்டாட்டி தனியா இருக்கா, புள்ளைக் குட்டிகளெல்லாம் தனியாகக் கிடக்கின்றனர். வீட்டில் ஆண்துணை இல்லை. பின்னாலிருந்து பனூ குரைளாவினர் புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது. முதலில் போய் வீட்டைப் பார்க்கிறோம்" என்று கொஞ்சம் கொஞ்சமாய், சென்று விட்டார்கள்.

மீதமிருந்தவர்கள் நபியும், உயிர் கொடுக்கும் தோழர்களும் மட்டும். கூடவே அவர்களின் அசைக்கவியலா இறை நம்பிக்கையும். நிலைமை கடுமையடைந்து கொண்டே சென்றது. முஹம்மது நபி (ஸல்) இறைவனிடம் ஆழ்ந்து பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.

"யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன். யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்"

முஸ்லிம்களுக்குப் பேரிடி இறங்கியது என்று பார்த்தோமல்லவா? இப்பொழுது புயல் உருவானது. ஒன்றல்ல, இரண்டு. சற்று வித்தியாசமாய் திசை மாறி அடித்த புயல்கள் அவை.

அதில் முதலாவது நுஐம் மனதைத் தாக்கியது. கூட்டணிப்படை வீரர்களுடன் வெட்ட வெளியில் படுத்திருந்தவர் அன்றிரவு தூங்க இயலாமல் புரண்டு கொண்டிருந்தார். மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மனதிற்குள் குழப்பங்கள். "அட நுஐம்! நீ நஜ்து நாட்டினன். கண்காணாத தூரத்தில் இருக்கிறது உனது ஊர். அங்கிருந்து எதற்கு மெனக்கெட்டு இந்த முஹம்மதையும் அவருடன் இருப்பவர்களையும் ஒழித்துக் கட்டக் கிளம்பி வந்திருக்கிறாய்? ஏதோ பெரிய சாதனை படைக்கவா? அல்லது உனது வீட்டிற்கோ, குலத்திற்கோ குந்தகம் செய்ததற்குப் பழி வாங்கவா? காரணம் என்று உருப்படியாக ஒன்றுமில்லை. ஏதோ சும்மா பொழுது போகாமல் சண்டை போட வந்திருக்கிறாய். உனக்கென்று ஒரு புத்தி இருக்கிறது. அது நல்ல புத்தி. மற்றவர்களும் உன்னைப் புத்திசாலி என்றுதான் சொல்கிறார்கள். அப்படிப் புத்திசாலியான நீ, எந்த முகாந்திரமும் இல்லாமல் அவர்களைக் கொல்லவோ, அல்லது நீ கொல்லப்பட்டு இறந்து போகவோ என்ன காரணம் இருக்கிறது? இது கேவலம் நுஐம்!

இந்த முஹம்மது நபி என்ன சொல்கிறார்? தன்னைப் பின்பற்றும் மக்களை 'நீதியுடன் நடந்து கொள்ளுங்கள், நல்லன செய்யுங்கள், உறவினர்களுக்கெல்லாம் உதவுங்கள்' என்கிறார். அவர் பேச்சைக் கேட்டு அவர்களும் அந்த உண்மையின்படி நடந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களையெல்லாம் கொல்லவா வாளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாய்? அவர்களின் உடல்களில் செருகவா ஈட்டியை ஏந்திக் கொண்டு திரிகிறாய்?"

அவருடைய மனசாட்சி அநியாயத்திற்கு அவரிடம் வாதாடியது. புயல் ஓய்ந்தது. மனதில் தெளிவு பிறந்தது. இருட்டில் நழுவினார் நுஐம் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.

*****

"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?"

அவரை உற்று நோக்கிய முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: "நீ இப்பொழுது இந்தப் பக்கம் வந்தால் எங்கள் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்; வேண்டாம், உன் மக்களிடத்துத் திரும்பிச் செல். உன் மாற்றமும் நம் உறவும் தெரிய வேண்டாம். நிச்சயமாகப் போர் என்பது ஒரு தந்திரமே"

முஹம்மது நபியின் கடைசி வாக்கியத்தில் நுஐமிற்குப் போதுமான போர் உத்தரவுகள் கிடைத்து விட்டன.

"அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் நாடினால் தங்களை எது மகிழ்வூட்டுமோ அதனைக் காணப் பெறுவீர்கள்."

மனம் மாறிய நொடியிலேயே முழு முற்றும் சரணடையும் சுவாதீனம் இருந்தது அவருக்கு. அவருக்கென்று மட்டுமல்ல அனைத்துத் தோழர்களுக்கும். வரலாறு பகரும் விசித்திரம் அது. ரலியல்லாஹு அன்ஹும்.

"நான் ஒற்றை ஆள் என்ன செய்ய முடியும்?" என்ற பச்சாதாபமெல்லாம் அவர்களுக்கு இல்லை. மாறாக அவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு படையளவு வலுவுடன் திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை வாழ்ந்தார்கள், சாதித்துக் காட்டினார்கள். பின்னர் வல்லரசுகளெல்லாம் சிற்றெறும்பாகிய கதையை நமக்கு வரலாறு வாய் பிளந்து விவரிக்க விட்டுச் சென்றார்கள்.

தன் கூடாரம் திரும்பிய நுஐம் உடனே கத்தியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புத்தியைத் தீட்டினார். நேரத்தை வீணாக்கவில்லை. உல்லாசத்திற்கு ஊற்றிக் கொடுத்துக் கூட்டாளியாகிப் போயிருந்த பனூ குரைளாவினரிடம் உடனே சென்றார்.

"இதோ பாருங்கள். எனக்கு உங்கள்மேல் தனிப்பட்ட முறையிலுள்ள அன்பை அறிவீர்கள்தானே?" என்றார்.

"நிச்சயமாக"

"அதனால் உண்மையான ஒரு விஷயம் சொல்கிறேன்"

"என்ன விஷயம் சொல்லு"

"இந்தக் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் இந்தப் போரில் அவர்களின் சுயநலம்தான் உள்ளது. உங்களின் நலன் அவர்களுக்கு ஒரு முக்கிய விஷயமே இல்லை"

"எப்படி? என்ன சொல்ல வருகிறாய்?"

நிதானமாகத் தெளிவாகச் சொன்னார். "இதோ பாருங்கள். இது உங்கள் ஊர். இங்குதான் உங்கள் சொத்து, பெண்டாட்டி, பிள்ளைக் குட்டிகள் அனைத்தும். ஏதாவது ஒன்று விபரீதமாக முடிந்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டோ, எடுத்துக் கொண்டோ, இழுத்துக் கொண்டோ வேறு ஊருக்குத் தப்பிச் செல்வது என்பது உங்களால் முடியாத காரியம். ஆனால், அதேநேரத்தில் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் அவர்கள் நிலம், சொத்து, பெண்டாட்டி, பிள்ளைகள் அனைவரும் பத்திரமாய் அவரவர் ஊர்களில் இருக்கிறார்கள். முட்டிப் பார்க்கலாமே என்று முஹம்மதிடம் போர் புரியக் கிளம்பி வந்து விட்டார்கள். அதோடு நீங்கள் அவருடன் போட்டிருந்த உடன்படிக்கையையும் தூக்கி எறிய வைத்துவிட்டார்கள். நீங்களும் அப்பாவியாய் ஒத்துக் கொண்டீர்கள். போரில் கூட்டணிப் படையினர் வென்று விட்டால் கைப்பற்றுகிற அத்துணைப் பொருட்களையும் அவர்களே எடுத்துக் கொண்டு பங்கு போட்டுக் கொள்வார்கள். உங்களுக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தப்பித் தவறி அவர்கள் தோற்றுவிட்டால், எனக்கென்ன போச்சு என்று ஊரைப் பார்க்க ஓடிவிடுவார்கள். மாட்டப் போவது யார்? நீங்கள்தான். அப்பொழுது முஸ்லிம்களின் அத்துணைக் கோபமும் உங்கள் மேல்தான் இறங்கும். அவர்களை எதிர்க்கும் சக்தியெல்லாம் உங்களுக்கு இல்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்."

சரியான மிரட்டல், தெளிவான வார்த்தைகளில் வந்து விழுந்தது. பதற்றத்தைச் சரியாகவே அவை தோற்றுவித்தன. அவர் சொன்னதன் சாத்தியம் நினைத்துப் பார்க்கவே கதி கலங்கியது பனூ குரைளா கூட்டத்தாருக்கு.

"நீ சரியாகத்தான் சொல்கிறாய். நாங்கள் இப்பொழுது என்ன செய்வது?"

"என்னுடைய ஆலோசனை, நீங்கள் கூட்டணிப் படையினரிடம் முக்கியஸ்தர்கள் சிலரைப் பிணையாளிகளாகப் பெற வேண்டும். அதுவரை அவர்களுடன் நீங்கள் போரில் இணையக் கூடாது. அப்படி அவர்கள் பிணையாளிகளாகச் சிலரைக் கொடுத்தால் நீங்கள் நம்பிச் சண்டையிடலாம். முஹம்மதா நீங்களா என்று ஒரு கை பார்த்து விடலாம். அப்பொழுதுதான் கூட்டணிப் படையினரும் உங்களை நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடாமல் முழுமூச்சுடன் போரிடுவார்கள்"

"பேஷ் பேஷ். நன்று சொன்னாய் நுஐம்" என்று ஆரவாரித்து மகிழ்ந்தனர் பனூ குரைளாவினர்.

முதல் தந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அடுத்து நேராக அபூஸுஃப்யானையும் மற்றும் சில குரைஷித் தலைவர்களையும் சென்று சந்தித்தார் நுஐம். "குரைஷிகளே! உங்கள் மீது எனது அபிமானமும் முஹம்மத் மீது நான் கொண்டுள்ள வெறுப்பும் நீங்களெல்லாம் நன்கு அறிந்த ஒன்று. நான் சில செய்திகள் கேள்விப்பட்டேன். தங்களுக்கெல்லாம் தெரிவிப்பது எனது கடமை எனத் தோன்றியது. இதனைத் தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் நான் தெரிவித்ததாக யாரிடமும் சொல்லிவிடக் கூடாது."

"என்ன அது? விரைந்து சொல்" என்றனர் குரைஷிகள்.

நுஐம் வலை விரித்தார். "இந்த பனூ குரைளா இருக்கிறார்களே, முஹம்மதிற்கு எதிராகத் தாங்கள் திரும்பி விட்டதை நினைத்துப் பயந்து கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களைக் கைவிட்டுத் திரும்பி விடுவீர்களோ என்று அச்சப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆகையினால் முஹம்மதுக்குத் தூது அனுப்பி விட்டார்கள்.

எப்படியென்றால் 'நாங்கள் செய்ததெல்லாம் மகாத் தப்பு. எங்களை மன்னியுங்கள். மீண்டும் உங்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அமைதியாய் வாழ முடிவெடுத்து விட்டோம். எங்கள் தவறுக்குப் பகரமாய் குரைஷ் மற்றும் கத்தஃபான் முக்கியஸ்தர்கள் பலரைப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்தால் திருப்தியுறுவீர்களா? பிறகு நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு குரைஷ் மற்றும் கத்தஃபான் படைகளை துவம்சம் செய்வோம்' என்று.

எனவே அந்த யூதர்கள் உங்களிடம் ஏதும் பிணையாளிகள் வேண்டும் எனத் தகவல் அனுப்பினால் உங்களில் ஒருவரைக்கூட ஒப்படைத்து விடாதீர்கள். அப்புறம் முக்கியம், இந்தச் செய்தியை நான்தான் உங்களுக்குத் தெரிவித்தேன் என்று சொல்லி விடாதீர்கள்."

"ஆஹா! நீயன்றோ உற்றத் தோழன். உனக்குத் தக்க சன்மானம் கிடைக்கட்டுமாக" என்று புளகாங்கிதமடைந்தார் அபூஸுஃப்யான்.

பிறகு தன் கத்தஃபான் கூட்டத்தாரிடம் சென்ற நுஐம் அதே செய்தியைத் தெரிவித்து, "பனூ குரைளாக்கள் சூழ்ச்சி வலை விரித்துள்ளார்கள், ஜாக்கிரதை" என்று எச்சரித்து வந்து விட்டார். அவர் வேலை முடிந்தது.

கூட்டணிப் படைத் தலைவர்களுக்கு இரத்தம் கொதித்தது. கோபம் தலைக்கேறியது. சோதித்துப் பார்க்கத் தோன்றியது அபூஸுஃப்யானுக்கு.

தன் மகனை பனூ குரைளாவிடம் அனுப்பி வைக்க, "என் தந்தை தங்களுக்கெல்லாம் முகமன் கூறினார். நாம் முஹம்மது மேல் நிகழ்த்தி வரும் முற்றுகை இழுத்துக் கொண்டே செல்கிறது. வீரர்கள் சலிப்பும் சோர்வும் கொண்டுள்ளார்கள். சண்டையை ஆரம்பித்து அந்த முஹம்மதை ஒழிக்க முடிவெடுத்து விட்டோம். என் தந்தை நாளைக்குத் தொடங்கவுள்ள யுத்தத்தில் தங்களையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார்."

அது என்னவோ மறுநாள் சனிக்கிழமை என்பது அபூஸுஃப்யானுக்கு மறந்து தொலைத்து விட்டது. சனிக்கிழமை யூதர்களுக்கு முழு ஓய்வு நாள். ஒன்றும் அசையாது.

"நாளை சனிக்கிழமை. அன்று நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. அது ஒருபுறமிருக்க நீங்கள் உங்கள் முக்கியஸ்தர்கள் எழுபது பேரை எங்களிடம் பிணையாளிகளாக ஒப்படைக்க வேண்டும். சண்டை துவங்கி மூர்க்கமடையும்போது நீங்களெல்லலாம் உங்கள் ஊரைப் பார்க்க ஓடி, நாங்கள் தனியாய் முஹம்மதிடம் மாட்டினால் அதோ கதிதான். எனவே எங்களுக்கு உங்கள் பிணயாளிகள் வேண்டும். அப்பொழுதுதான் சண்டைக்கு வருவோம்." என்றனர் பனூ குரைளாத் தலைவர்கள்.

அபூஸுஃப்யானின் மகன் வேகமாகத் திரும்பி வந்து, நடந்த செய்தி கூறினான். கூட்டணித் தலைவர்கள் கோபத்தில் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்து விட்டர்கள். "குரங்குப் பயல்கள், பன்றி மகன்கள்! இறைவன்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்! ஓர் ஆட்டைப் பணயமாகக் கேட்டால்கூட அவன்களுக்குக் கொடுக்க முடியாது"

நுஐமின் தந்திரம் முழுக்க முழுக்கப் பலித்தது. கத்தியில்லை, சொட்டு இரத்தமில்லை. கூட்டணிப் படை கலகலத்துப் போனது.

அதைத் தொடர்ந்து இரவில் மற்றொரு புயல் அடித்தது. அது நிஜப் புயல். பேய்க்காற்று அடித்தது. கொடிய, கடுமையான குளிர்க்காற்று, கூட்டணிப் படையினரின் கூடாரத்தையும் அவர்களது பண்ட பாத்திரங்களையும் அடித்துச் சென்று, இரவில் அவர்கள் மூட்டிவைத்திருந்த நெருப்பை அணைத்து, அவர்களின் முகங்களிலும் கண்களிலும் மணல் வாரி இறைத்தது. அதற்குமேல் தாக்குப் பிடிக்க இயலாமல் இரவோடு இரவாக அனைவரும் அனைத்தையும் காலி செய்து கொண்டு ஓடிவிட்டார்கள். எழுதியதை ரப்பர் கொண்டு அழித்ததுபோல் காலி. அது ஓர் அற்புதம்! இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதம்!!

முஸ்லிம்கள் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார்கள். நம்பவியலாத வெற்றி அது. மிகப் பெரும் கொண்டாட்டத் தருணம் அது.

ஆனால் நன்றி மிதக்க, அடக்கம் தவழ உரக்க உச்சரித்தனர் -

லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹ்!
ஸதக்க வஅதஹ்!
வ நஸர அப்தஹ்!
வ அஅஸ்ஸ ஜுன்தஹ்!
வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்!


வணங்குதற்கு உரிய தனித்தவன் ஒருவனே, அல்லாஹ் ஒருவனே!
வாக்கை நிறைவேற்றியவன்!
வளமான உதவியைத் தன் அடியார்க்கு வழங்கியவன்!
தன்னுடைய படையைக் கண்ணியப் படுத்தியவன்!
தனித்தவன்; கூட்டணிக் கூட்டத்தினரை வேரறுத்தவன்!


நுஐம் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) ஒற்றையாளாக மாபெரும் பங்கு வகித்துப் புரிந்த அந்தச் சாதனை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெரிதும் கவர்ந்து, அதன்பின் பல விஷயங்களில் முக்கியப் பங்கு வகிக்க அவர் நியமிக்கப் பெற்றார்.

அகழி யுத்ததம் நடைபெற்று மூன்று வருடங்களுக்குப் பின் மக்கா முஸ்லிம்கள் வசமானபோது முஸ்லிம்களின் வெற்றி அணிவகுப்பு மக்காவிற்குள் நுழைந்தது. அபூஸுஃப்யான் பார்த்துக் கொண்டிருந்தார். இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் எதிராகப் பல போர்கள் புரிந்து, கெட்ட எதிரியாகத் திகழ்ந்த அதே அபூஸுஃப்யான், இறுதியில் இஸ்லாத்தை ஏற்றது அவரது வாழ்வின் உச்சகட்ட திருப்புமுனை.

மக்காவிற்குள் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஒரு பிரிவில் கத்தஃபான் கொடியை ஒருவர் ஏந்திச் செல்வதைக் கண்டு, "யார் அது?" என்று அபூஸுஃப்யான் விசாரிக்க, "அவர்தான் நுஐம் பின் மஸ்ஊத்" என்று பதில் வந்தது.

"ஹா....! அன்று அகழி யுத்தத்தில் நமக்கு எதிராகப் பயங்கர செயல் புரிந்த நுஐம், அன்று முஹம்மதின் கொடிய எதிரி. இன்று அதே நுஐம் முஸ்லிம்களின் கொடியை ஏந்திக் கொண்டு முஹம்மதின் படையுடன், அவரது தலைமையில் மக்காவிற்கே படையெடுத்து வந்திருக்கிறாரா?"

உதடுகளால் மட்டும் இஸ்லாத்தை உச்சரிக்காத தோழர்கள் அவர்கள்.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

வரலாறு - தோழர்கள்


வாளாயுதம்கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.

உற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், "உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு" என்று தனது அன்பைச் சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.

உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சுவையான வரலாறு. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கப்பாப். உமர் தோற்றம், கம்பீரம், நேர்மை, என அனைத்திலும் அலாதியானவர், வேகமானவர். முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் பலப்பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்த மக்காவில் ஒரு கட்டத்தில் உமர் மிகுந்த காட்டமாகி விட்டார். "இந்த முஹம்மதைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை" என்று வாளை உருவிக் கொண்டு மக்கா வீதியில் கிளம்பிவிட, யதேச்சையாய் அவ்வழியே வந்த நுஐம் (نعيم‎) எனும் இளைஞர் விசாரித்தார். உமரின் நோக்கம் கண்டு அவருக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது. அவரும் அச்சமயத்தில் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர். உமர் கோபத்துடன் வருவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் சொல்லி எச்சரிக்க அவகாசம் தேவை. சமயோசிதமாய் ஒரு காரியம் செய்தார் நுஐம் ரலியல்லாஹு அன்ஹு.

”முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் நீர் உமது வீட்டைப் பாரும்". உமரின் சகோதரி ஃபாத்திமாவும், அவர் கணவரும் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அது உமருக்குத் தெரியாது. நுஐமின் தந்திரம் உடனே பலித்தது. உமரின் கோபம் சட்டெனத் திசை மாற, தன் சகோதரியின் வீட்டிற்கு அதே கோபத்துடன் விரைந்தார்.

உமரின் சகோதரி ஃபாத்திமாவும் அவர் கணவர் ஸயீத் இப்னு ஸைதும் (سعيد بن زيد) வீட்டினுள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் கப்பாப் இப்னு அரத். கப்பாப் கூர்மதியாளர். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதனை ஓதிப் பழகிய கெட்டிக்காரர். அதில் அவரது ஞானம் எந்தளவு என்றால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கப்பாபை குர்ஆன் சம்பந்தமாய்க் கலந்து ஆலோசிக்குமளவு ஞானம்.

உமர் ஆவசேமாய் வருவதைக் கண்ட கப்பாப் இப்னு அரத் ஓடி ஒளிந்துக் கொண்டார். உமரின் அத்துணை மூர்க்கமும் ஸயீத் மேல் இறங்கியது.

உமரின் தங்கை ஃபாத்திமாவைத் மணம் புரிவதற்கு முன்னரே ஸயீதும் உமரும் உறவினர்கள். உமரின் தகப்பனார் கத்தாப் இப்னு நுஃபைலும் ஸயீதின் பாட்டனார் அம்ரிப்னு நுஃபைலும், சகோதரர்கள். ஸயீதின் தகப்பனார் ஸைது இப்னு அம்ரு, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னமேயே ஹனீஃபாகத் திகழ்ந்தவர். சிலைகளை வணங்காதவர்கள் "ஹுனஃபா"வினர் என்று தம்மைக் கூறிக் கொள்வர். ஸயீதின் தகப்பனார் ஸைது, இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய ஏகத்துவக் கொள்கையை ஏற்று அனைத்து இணை வைத்தலை விட்டும் விலகியிருந்தவர். "சிலையெல்லாம் வணங்க முடியாது" என்று அவர் கூறி வந்ததால் அவரை மக்கத்துக் குரைஷிகள் துன்புறுத்தியபோது தன் பெரியப்பா மகனென்றும் பாராமல் ஸைதைத் துன்புறுத்துவதில் பங்கெடுத்துக் கொண்டு, குரைஷிகளின் குலப் பெருமையை நிலைநாட்டிய முக்கியப் புள்ளி உமர்.

இப்பொழுது அவரின் மகன் ஸயீத் - அதுவும் தன் சகோதரியின் கணவர், "சிலை வேண்டாம்; படையல் வேண்டாம்" என்பதோடு நில்லாமல், அந்த முஹம்மதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் சகோதரியையும் வழிகெடுக்கிறார் என்றால்? பொறுக்கவியலாத ஆத்திரம். முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டார். இடையில் புகுந்த ஃபாத்திமாவிற்கும் பலமான அடிவிழ இரத்தம் பீறிட ஆரம்பித்தது. இரத்த சகோதரியின் இரத்தம் பார்த்ததும்தான் உமரின் ஆத்திரம் நிதானத்திற்கு வந்தது. ஆயாசமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன.

நிதானப்பட்ட உமர், "என்ன அது நீங்கள் ஓதிக் கொண்டிருப்பது?" எனக் கேட்க, அவரைக் கை-கால் கழுவி வரச் செய்து குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த சுவடிகளைக் காண்பித்தார்கள். அது அத்தியாயம் தாஹா. புத்தியிலும் பலம் மிக்கவரான உமருக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை. ஒருவரிப் பேச்சு, "என்னை முஹம்மதிடம் அழைத்துச் செல்லுங்கள்".

அது கேட்டதும்தான் வெளியே வந்தார் கப்பாப். "உமர்! முஹம்மதின் (ஸல்) துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக நான் நம்புகிறேன். நேற்றுத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள் 'யா அல்லாஹ்! அபுல் ஹகம் அம்ர் இப்னு ஹிஷாம் அல்லது உமர் இப்னு அல் கத்தாப், இந்த இருவரில் யாரை நீ அதிகம் நேசிக்கிறாயோ அவர்களைக் கொண்டு இஸ்லாத்தை வலுப்படுத்து' என்று. அதை நான் என் காதால் கேட்டேன்".

"இப்போது எங்கே நான் அவர்களைக் காணலாம்?"

கப்பாப் ஆனந்தமாக, "சஃபா குன்றுக்கருகே அல்அர்கம் இப்னு அபில் அர்கம் இல்லத்தில் இருப்பார்கள்" என்றார்.

உடனே, மிக உடனே, எவரைக் கொல்ல வந்தாரோ அதே முஹம்மதை அடுத்த மூச்சில் ஏந்தி வந்த வாளுடன் சந்தித்து, உமர் இஸ்லாத்தை ஏற்க, சரித்திரத்தில் ஏற்பட்டது திருப்புமுனை. அது ஓர் அசகாய திருப்புமுனை. அப்போது உமருக்கு வயது 27. ரலியல்லாஹு அன்ஹும்.

இதுவோ இதுமட்டுமோ அல்ல கப்பாப்மேல் உமர் கொண்ட கரிசனத்தின் காரணம். அது கப்பாபின் சரித்திரத்துடன் பின்னப்பட்ட கரிசனம்.

கப்பாப் அமர்ந்ததும் உமர் கேட்டார், "சொல்லுங்கள். அந்தக் காலத்தில் காஃபிர்களால் தாங்கள் பட்ட துன்பத்திலேயே கடினமான ஒரு நிகழ்வைச் சொல்லுங்கள்".

தோழர்களுக்குள் அப்படி ஒரு அளவளாவல் நிகழ்வுறும். இஸ்லாத்திற்கு முன்னரும், அல்லது புதிதிலும் தாங்கள் பட்ட இன்னல்கள், துன்பங்கள் ஆகியனவற்றைச் சற்று ஓய்வில் அசைபோடுதல், மற்றவர்களுடன் பேசிப் பரிமாறிக் கொள்ளுதல் அவர்களுக்கு ஆறுதல், ஆனந்தம்!

கப்பாப் வெட்கப்பட்டார். மைக் கிடைத்தால் போதும், வீரவசனம் பேசலாம் என்பதெல்லாம் தெரியாதவர்கள் அவர்கள். உமர் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கப்பாப் தனது மேலங்கியைத் தளர்த்தி முதுகைக் காண்பித்தார். சதை பொத்தலடைந்து உருக்குலைந்து போயிருந்தது முதுகு. அந்த அலங்கோலம் வீரர் உமரையே கதிகலங்க வைத்தது!

"இது எப்படி நிகழ்ந்தது?"

கப்பாப் சங்கோஜத்துடன் விவரித்தார். "மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்" விவரித்தார் கப்பாப்.

பிலாலைப் போலவே வன்கொடுமைக்கு ஆளானவர் என்பது மட்டுமல்ல அவரைப் போலவே அடிமையும்கூட கப்பாப். ரலியல்லாஹு அன்ஹும்.

*****

மக்காவில் ஒருநாள் உம்மு அன்மார் எனும் பெண்மணி சந்தைக்குப் போனார். காய்கறி, சாமானெல்லாம் வாங்க அல்ல. ஓர் அடிமை வாங்குவதற்கு. இப்பொழுதெல்லாம் நாம் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதுபோல் அப்பொழுது அவர்களுக்கு அடிமைகள் வைத்துக் கொள்வது சௌகரியம், பெருமையான காரியம். விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்களிலேயே இளையவனாய், பருவ வயதை அடையாத ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். நல்ல ஆரோக்கியத்துடன் புத்திசாலியாய் இருந்தான் அவன்.

பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பேச்சுக் கொடுத்தார்.

"உன் பெயர் என்ன?"

"கப்பாப்"

"தகப்பனார் பெயர்?"

"அல் அரத்"

"எந்த ஊர் உனக்கு?"

"நஜ்து"

"ஹா! அப்படியானல் நீ ஓர் அரபியா?" ஆச்சரியமாய்க் கேட்டார்.

"ஆம். நான் பனூ தமீம் கோத்திரம்"

"எப்படி அடிமைச் சந்தைக்கு வந்து சேர்ந்தாய்?"

"எங்கள் கோத்திரத்தாரின் நிலங்களை பாலை அரபிகள் படையெடுத்து வந்து தாக்கினர். விலங்குகளையெல்லாம் கைப்பற்றி, பெண்களைக் கடத்திக் கொண்டு, என்னைப் போன்ற சிறுவர்ககளையெல்லாம் அடிமைகளாக விற்று விட்டனர். நான் பலர் கை மாறி மக்கா சந்தைக்கு வந்துவிட்டேன்".

மக்காவிலுள்ள நல்லதொரு கொல்லனிடம் வேலை கற்றுக்கொள்ள கப்பாபை அனுப்பி வைத்தார் உம்மு அன்மார். வாள்கள் தயாரிக்கும் பணி. சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வேலையில் கப்பாப் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார். எனவே அவர் சற்று வளர்ந்தவுடன் உம்மு அன்மார் தனியாகப் பட்டறை வைத்துக் கொடுத்து விட்டார். கப்பாபின் திறமையால் கடை வெற்றியடைய அடிமையின் தலைவிக்குக் கொழுத்த இலாபம். கடை பிரபல்யமடைந்துவிடவே, "நல்ல அருமையான வாள் வேண்டுமா, நட கப்பாப் கடைக்கு" என்று படையெடுக்க ஆரம்பித்தனர். வேலை நேர்த்தி மட்டுமல்ல, நம்பிக்கையும் நாணயமும் அதற்குக் காரணம்.

மிக இளவயதுதான். ஆனாலும் அவர் தயாரிக்கும் வாள் போலவே இயற்கையாகவே புத்திக் கூர்மையும் பக்குவமும் கப்பாபிடம் இருந்தன. நிறைய யோசித்தார். மக்காவில் அப்பொழுது நிலவி வந்த சீர்கேடு, ஜாஹிலிய்யாஹ், ஒழுக்கக் கேடான வாழ்க்கைமுறை - "இவையெல்லாம் தப்பு, எங்கோ தப்பு" என்று ஆழ்மனதில் நிச்சயமாய் அவருக்குப் பட்டது.

"இந்த நீண்ட காரிருள் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும்" என்று அவருக்குள் ஒரு இனந்தெரியா நம்பிக்கை. தான் அதுவரை வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்று மட்டும் ஆயாசம் ஏற்படும். ஆனால் அதற்கு அவர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லாமல் போனது.

அப்துல்லாஹ்வின் மகனாம், முஹம்மதாம், என்னவோ புதுசு புதுசா சொல்லி வருகிறாராம் என்று கேள்விப்பட்டு, கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஆவலில் ஒருநாள் சென்றார் கப்பாப். சட்டென்று உணர்ந்து கொண்டார். இது உண்மை! இது புனித வழி! இது சத்தியம்! அவ்வளவுதான். உடனே ஆரத்தழுவி நுழைந்து கொண்டார் இஸ்லாத்தில்.

அவர் ஆறாவது முஸ்லிம். முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை மக்காவின் மக்கள்முன் வைக்க ஆரம்பித்தவுடனேயே அப்பட்டமாய் ஏற்றுக்கொண்ட மிகச்சிலரில் அவர் ஆறாவது. இதனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் போது, "கப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு" என்று பெருமை சொல்லப்பட்டது.

குரைஷிகளின் குழுவொன்று ஒருமுறை வாள்கள் சில கப்பாபிடம் செய்து கேட்டிருந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கப்பாப் இல்லை. அப்படியெல்லாம் எங்கும் செல்லும் அளவுக்கு அவருக்கு வேறெந்த சோலியும் இருந்ததில்லை. எனவே சற்று ஆச்சர்யத்துடன் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து கப்பாப் வந்து சேர்ந்தார். முகத்தில் இனந்தெரியா ஒளி. வந்தவர்களை அமரச் செய்து விட்டு அவர்களுக்கு முடித்துத் தரவேண்டிய வேலையில் மூழ்கினார். கனாக்காணும் கண்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டார். பிறகு பேசினார். "அவரைப் பார்த்தீர்களா? அவரது பேச்சைக் கேட்டீர்களா?"

வந்தவர்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ஏளனமாய் அவர்களில் ஒருவன் "நீ அவரைப் பார்த்தாயா கப்பாப்?"

"யாரை?"

கேட்டவனுக்குக் கோபம் வந்தது. அவரது பதில்கேள்வி அவனுக்கு ஏளனமாய்த் தெரிந்தது. "நீ யாரைச் சொன்னாயோ அவரை"

"ஆம் நான் அவரைப் பார்த்தேன். உண்மை அவரது பக்கத்திலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். ஒளி அவரது வாயிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்தேன்"

வந்தவர்களுக்குப் பொறி தட்டியது. "யாரைப் பற்றிச் சொல்கிறாய் உம்மு அன்மாரின் அடிமையே?"

ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை அவர் மறைக்க விரும்பவில்லை. "முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் சத்தியம் பேசுகிறார், நான் அதை ஏறறுக் கொண்டேன்" என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சேதி உடனே அம்மா காதுக்குப் போனது - உம்மு அன்மார் காதுக்கு. அதைக் கேட்டு சிரிப்பா வரும்? சீற்றம் வந்தது. ஆத்திரம் வந்தது.

”யாரங்கே. கூப்பிடு என் சகோதரனை" என்று உடனே உடன்பிறப்பை வரவழைத்தார். அவன் பெயர் சிபா இப்னு அப்துல் உஸ்ஸா. பேட்டை தாதா ரேஞ்சுக்கு அடி-பொடி அடியாட்கள் சகிதம் கப்பாபின் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். பாலை மக்காவில் தூசு பறந்தது!

நேராகவே கேள்விக்கு வந்தான் சிபா. "உன்னைப் பற்றி நம்பமுடியாத செய்தியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டோம்"

"என்ன அது?" என்றார் கப்பாப்.

"அந்த பனூ ஹாஷிம் பயல் சொல்லும் பேச்சைக் கேட்டு நாத்திகனாய் மாறி, அவனை நம்பி விட்டாயாம். எல்லோரும் சொல்கிறார்கள்"

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அப்பொழுது நாற்பது வயது. அவரை ஏளனமாய், கேவலமாய், ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பிரஸ்தாபிக்கவே கெட்ட பயல் சிபாப், முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரைக்கூடச் சொல்லாமல் "பனூ ஹாஷிம் பயல்" என்றான். அத்தகைய இறுமாப்பு.

கப்பாப் நிதானமாய், ஆனால் தெளிவாய் பதில் சொன்னார்: "நான் நாத்திகனாகவெல்லாம் மாறவில்லை. ஆனால் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நம்பிவிட்டேன். உங்களது கடவுளர் சிலைகளைகளின்மேல் எனக்கு இனி நம்பிக்கையெல்லாம் இல்லை. அந்த முஹம்மத் ஏக இறைவனின் அடிமை, தூதர் என்று வாக்குமூலம் அளிக்கிறேன்"

அவர் சொல்லி முடிக்கவில்லை. சிபாவும் அவனது கூட்டமும் அவர் மேல் பாய்ந்தது. சகட்டுமேனிக்கு, இஷ்டத்திற்கு அடி, உதை என்று பின்னி எடுத்தார்கள். கீழே தள்ளி உதைத்து அவர் கடையில் இருந்த இரும்பு சாமான்களை எடுத்தே அவரைத் தாக்கினார்கள். அவர் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்.

பாலைவனத்தில் காட்டுத் தீ பரவியது. கேவலம் ஓர் அடிமை. அவன் தனது எஜமானியை மீறி "முஹம்மதாம்", "நபியாம்", "இஸ்லாமாம்" ஏற்றுக் கொண்டானாம். அதையும் பகிரங்கமாய் சொல்லிக் கொள்கிறானாம். அந்தச் செயல், அடிமையிடம் அவர்கள் முதன் முதலாய்க் கண்ட அந்தத் தைரியம், மக்கத்துக் குரைஷிகளுக்குப் புதுசு. அந்தச் செய்தி அவர்களது தலைவர்கள்வரை சென்று குலுக்கியது. தங்களைக் குலுக்கியது தங்களது மதுபோதை அல்ல என்று உணர்ந்ததும் விஷயத்தின் தீவிரம் புரிந்து, சுதாரித்து, கோபம் கொண்டார்கள்.

ஒரு கொல்லன், அதுவும் அடிமை, தன்னைக் காப்பதற்கு உறவுகளற்றவன், புகலிடம் பெறக் கோத்திரமற்றவன். அவன் துடுக்குத்தனமாய்த் தன் எஜமானியைத் தூக்கியெறிந்துவிட்டு, நம் கடவுளர்களையெல்லாம் அவமதித்து, மூதாதையர் சமயத்தை உதறித் தள்ளிவிட்டுப் போவதெல்லாம், ரொம்பவும் நல்லாயில்லை. இது பெரிய பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று நினைத்தார்கள். சரியாகவே நினைத்தார்கள்.

கப்பாபின் மனவுறுதி அவரின் சகாக்கள் சிலரையும் தொற்றிக் கொள்ள, பகிரங்கமாய்ச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். "ஆமாமய்யா! நாங்களலெல்லாம் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏற்றுக்கொண்டோம். உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். இது சத்தியமான மார்க்கம். வந்துடுங்க. முஹம்மது சொல்றதைக் கேளுங்க" அது மேலும் நெய் ஊற்றியது - எரிய ஆரம்பித்திருந்த தீயில்.

அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரித் (أبو سفيان بن الحارث‎), அல்-வலீத் இப்னு அல்-முகீராஹ் (الوليد بن المغيرة‎), அபூ ஜஹ்ல் (أبو جهل) எனும் அம்ரிப்னு ஹிஷாம் (عمر بن هشام‎). இவர்கள் மூவரும் மக்கத்துக் குரைஷியர்களின் முக்கியத் தலைவர்கள். பணம், பலம், செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் கஅபாவில் ஒன்று கூடினார்கள். கட்சித் தலைவர்கள் ஏதோ ஒரு குழுக்கூட்டம் என்று குழுமவதுபோல ஒரு மீட்டிங்.

கட்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே செல்வாக்கு ஓங்குவது போல், "இந்த முஹம்மத் ஏதோ பொழுது போகாமல் பேசிக் கொண்டு திரிகிறார் என்று பார்த்தால், அவரது பேச்சைப் படு சீரியஸாய் எடுத்துக் கொண்டு பெரிசு சிறிசெல்லாம் உறுப்பினர்களாக ஆரம்பித்து விட்டார்கள். தானாக சரியாகப் போய்விடும் என்று பார்த்தால் அவர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு முடிவு ஏற்படுவதாய்த் தெரியவில்லை" என்று கவலை பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.

பிறகு நிறையப் பேசி, அவர்களது குட்டி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இது நமது சமூகத்தில் புரையோடுவதற்குள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒவ்வொரு குலமும் அவர்களது கோத்திரத்தில் யார் யார் முஹம்மதை ஏற்றுக்கொண்டேன் என்று கிளம்பியிருக்கிறார்களோ, அவர்களை வெட்டிப் போடவோ, கொன்று போடவோ பொறுப்பு"

ஆச்சு! ஒருவெறியாட்டம் போட அதிகாரபூர்வத் தீர்மானம் போட்டாச்சு.

சிபா இப்னு அப்துல் உஸ்ஸா அவன் கூட்டாளிகளுக்கு கப்பாப் இப்னு அரதை (ரலி) கவனிக்கும் பொறுப்பு, தானாகக் கிடைத்தது. கொடுமையாய் சித்ரவதை செய்ய வேண்டும், என்ன செய்யலாம்? ஒரு யோசனை உதித்தது. மக்காவின் வெயிலும் சூடும்தான் பிரசித்தியாயிற்றே. உச்சி வெயில் மண்டையின் உள்ளே இருக்கும் மூளையையெல்லாம் உருக்கும் நேரம்வரைக் காத்திருந்தார்கள். பிறகு திறந்த வெட்டவெளிக்கு அவைரை இட்டுச் சென்று அவரது உடலிலுள்ள உடைகளை உருவிவிட்டு நல்லதொரு சூட்டு போட்டு விட்டார்கள். கோட்டு-சூட்டு அல்ல. இரும்பாலான போர்க்கவச சூட்டு. அப்படியே அந்த வெயிலில் அவரைப் படுக்கப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இரும்பும் சூடேறி உடலை ரணகளப்படுத்தும்; தாகம் உயிர் போகும்.

"இப்போது சொல். அந்த முஹம்மத் யார்?"

"அவர் அல்லாஹ்வின் தூதர். நேர்வழி காட்டும் மார்க்க ஒளியை எடுத்து வந்திருக்கிறார், நம்மையெல்லாம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு" பதில் மட்டும் ஏதும் பாதிப்படையாமல் அதே உறுதியுடன் தெளிவாக வந்து கொண்டிருந்தது.

அதைக் கேட்டு அடுத்து மிருகத்தனமாய் அடி, உதை.

"அல்-லாத் அல்-உஸ்ஸா பற்றி என்ன நினைக்கிறாய் சொல்?" அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா மக்காவில் அப்போது பிரபல்யமான கடவுளர் சிலைகள்.

"அவையிரண்டும் செவிட்டு ஊமைச் சிலைகள். யாதொரு நன்மையோ தீங்கோ செய்ய இயலாதவை." அதைக் கேட்டு மேலும் ஆத்திரம் ஊற்றெடுத்தது. "என்ன இவன்? அடங்க மாட்டேன் என்கிறான்?"

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்தார்கள். பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

வெறும் தீயினால் சுட்ட புண்ணாக மட்டும் இருந்திருந்தால் உள்ளாறியிருக்கும். ஆனால் சதைத் துண்டுகளையே பொசுக்கி எடுத்துவிட்டால்? தெருவுக்குத் தெரு பார்மஸியோ, மருத்துவமனையோ இல்லாத அக்காலத்தில் என்னதான் மருத்துவம் செய்திருக்க முடியும்?

ஆனால், ஒருநாள் கப்பாபும் அவர் நண்பர்கள் சிலரும் சென்று முஹம்மத் (ஸல்) சற்று முறையிட்டார்கள். பயந்தெல்லாம் அல்ல. பக்க பலத்திற்கு. பின்னர் அந்த நிகழ்ச்சியை அவரே விவரித்திருந்தார்.

"இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் சிறி)தும்கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்" என்று கூறினார்கள்" (சஹீஹ் புகாரி)

அது போதும். அந்த வார்த்தைகள் போதுமானதாயிருந்தது அவர்களுக்கு. நம்பிக்கையை அதிகப்படுத்தின அந்த வார்த்தைகள். தங்களது பொறுமை, தங்களது தியாகம், தங்களது விடாமுயற்சி அனைத்தையும் அந்த இறைவனுக்கு நிரூபித்துக் காண்பிக்க இது போதும் என்று கிளம்பிச் சென்றுவிட்டார்கள். உதவி வருமா என்று கேட்டதற்கு ஆரூடம் சொல்லப்பட, கிளம்பிச் செல்கிறார்கள் "வா வந்து அடி" என்று உதை வாங்க. தியாகம் என்பதெல்லாம் அதற்கு லாயக்கற்ற வார்த்தை.

அடிமைக்கு ஏற்பட்ட அவல வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் தங்கள் பங்குக்கு அவரை நோகடிக்க ஆரம்பித்தனர். ஆஸ் இப்னு வாயில் என்பவன் மக்காவில் இருந்தான். கப்பாப் அவனுக்கு வாள்கள் செய்து கொடுத்த வகையில் அவன் கப்பாபுக்குக் கடன் பட்டிருந்தான். ஒருநாள் கப்பாப் அவனிடம் கடனைத் திரும்பப் பெற அவனிடம் சென்றார். கடன் காசுக்கு கப்பாபின் ஈமானை விலை பேசிப் பார்க்கும் யோசனை உதித்தது அவனுக்கு.

”நீ முஹம்மதை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும்வரை உன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாது!" என்றான்.

நெருப்புக்கே இளகாத நெஞ்சு அது. என்ன பதில் வரும்? "அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!" என்று சொல்லிவிட்டார்.

கிடைத்தவரை இலாபம் என்றாகி விட்டது ஆஸ் இப்னு வாயிலுக்கு. ஏளனமாக, ”அப்ப சரி! நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னைவிட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படுமில்லையா; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!" என்றான். மறுமை வாழக்கையைக் கிண்டலடிக்கும் பரிகாசம் அந்த பதிலில்.

அப்போதுதான் அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா வசனம் இறக்கினான்: "நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று இகழ்ச்சி பேசியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?" (மர்யம் 19:77-78)

விஷயம் இவ்வாறிருக்க, நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானியம்மா தன் பங்குக்குப் பணிவிடை செய்தாள், சித்ரவதையில். ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று அனுசரனையாய் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள் போலிருக்கிறது. பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாளாம்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் இறைந்து துஆ கேட்டுவிட்டார் ஒருநாள் "அல்லாஹ்! இவர்கள் இருவரையும் பழிவாங்குவாயாக!". அந்த துஆ இறைவனை அடைய திரையின்றிப் போய்விட்டது.

கடைசியில், வஹீ இறங்கிப் பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு மதீனாவிற்கு ஹிஜ்ரத் நிகழ்த்தி புலம்பெயர அனுமதி கிடைத்தது. கப்பாப் தனது ஹிஜ்ரத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அது நிகழ்ந்தது. அவரது துஆவின் ஒரு பகுதிக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி. வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் வைத்தியர் மாற்றி வைத்தியர் தூக்கிக் கொண்டு ஓட யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை.

சூட்டுக்கோல் வைத்திய முறை அக்காலத்தில் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். அதைத்தான் கடைசியில் ஒரு வைத்தியர் பரிந்துரைத்தார். அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

*****

மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து அன்சார்களின் அன்பு அரவணைப்பில் தஞ்சம் புகுந்தவுடன்தான், என்னவென்று கூட அறியப்பட்டிராத நிம்மதி அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது. நெருங்கிக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) நிழலில் ஒடுங்கிக் கொண்டார். சொகுசு உணர முடிந்தது. ஆனால் அந்த சொகுசு நிம்மதி என்பதெல்லாம் ரிடையர்மென்ட் பென்ஷன் வாங்கிக் கொண்டு, கயிற்றுக் கட்டில் போட்டு, நிலா ஒளியில் நிம்மதியாக உறங்கும் நம் ரகமில்லை. அவர்களின் அகராதி வேறு.

முஸ்லிம்களுக்கு அடுத்த சோதனையாக பத்ரு யுத்தம். அப்பொழுது போரிடத் தயாரானதே முந்நூற்று சொச்சம் பேர்தான். அதில் ஒருவர் கப்பாப் பின் அரத் ரலியல்லாஹு அன்ஹு. அதற்கு அடுத்த சில வருடங்களில் உஹது யுத்தம். அதிலும் கப்பாப் ஆஜர். மருத்துவ விடுப்பு, யதேச்சையான விடுப்பெல்லாம் அறியாத ஊழியர்கள் அவர்கள். இஸ்லாத்தின் உண்மை ஊழியர்கள்.

உஹது யுத்தத்தில்தான் தனது துஆவின் இரண்டாவது பகுதியை இறைவன் நிறைவேற்றுவதைக் கண்டு களித்தார் கப்பாப். ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மத் நபியின் சிற்றப்பா. மாவீரர். அல்லாஹ்வின் சிங்கம் எனும் பட்டப் பெயருள்ளவர். அவர் அந்தப் போரில் சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவை கொன்றொழித்தார்.

அதன் பிறகு நடந்த அனைத்துப் போரிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டவர் கப்பாப். பின்னர் கலீஃபாக்களின் ஆட்சியில நிகழ்வுற்ற யுத்தங்களிலும் போர் வீரர் தான். ஓய்வு ஒழிச்சலெல்லாம் இல்லை.

முதல் நான்கு கலீஃபாக்களின் ஆட்சியையும் கண்டு வாழ்ந்து விட்டு மறையும் அளவு அவருக்கு ஆயுளை நீட்டித்திருந்தான் இறைவன். உமர், உதுமான் ரலியல்லாஹுஅன்ஹும் காலங்களில் இஸ்லாமிய அரசின் வருமானம் பல்கிப் பெருகியது. கப்பாபிற்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிறையப் பணம் பங்காய்க் கிடைத்தது.

வாழ்நாளெல்லாம் வறுமையே போர்வையாக வாழ்ந்தவருக்கு அவரது இறுதிக் காலத்தில் நிறைய செல்வம் சேர்ந்தது. தங்கம், வெள்ளி என்று அளவிட முடியாத செல்வம். அவர் கனவும் கண்டிராதவை. கப்பாப் அவற்றைத் தன்னிஷ்டத்திற்குச் செலவு செய்தார்.

ஈராக்கிலுள்ள கூஃபாவில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டில் அனைவரும் பார்க்கக் கூடிய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நாணயங்கள், பணம் எல்லாவற்றையும் எடுத்து அந்த இடத்தில் வைத்தார். லாக்கர், பூட்டு, செக்யூரிட்டிமேன் எல்லாம் இல்லை. சும்மா அப்படியே வைத்தார். "இதனால் சகலமானவர்களுக்கும்" என்று அறிவிப்பெல்லாம் செய்யவில்லை. ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் என்று அவரவர்கள் வருவார்கள். தங்களுக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள்வார்கள், செல்வார்கள். யாருக்கும் அனுமதி, டோக்கன் என்றெல்லாம் எதுவும் கிடையாது. "என்னதெல்லாம் உன்னது" அவ்வளவுதான்.

வீடு கட்டி விழா நிகழ்த்துவதை வழக்கப் படுத்தி இருக்கும் நம் சமுதாயத்திற்கு அவரது விசனம்தான் ஆச்சர்யம். "ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; தேவைக்கு அதிகமாக வீடுகட்ட இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர"

அதனால்தான் தனது வீட்டையே பொதுவுடைமை போல் ஆக்கிவிட்டார் போலிருக்கிறது.

இவ்வளவையும் செய்துவிட்டு பயந்து கிடந்தார் அந்த ஏழை. அவ்வப்போது விம்மி அழுது சொல்வார், "நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்." (சஹீஹ் புகாரி)

பொத்துக் கொண்டு கொட்டிய செல்வமும் செழுமையும் மறுமையில் எங்கே தனது நற்கூலியைக் குறைத்து விடுமோ, ஏதும் தண்டனைக்கு வழி வகுத்து விடுமோ என்று பயந்து கிடந்தார் நிசமாலுமே நெருப்பில் புடம்போடப்பட்ட அந்தத் தங்கம். ரலியல்லாஹு அன்ஹு.

இறுதிக் காலத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது கப்பாபிற்கு. அதன் நோவு மிகவும் கடினமானதாயிருந்தது. எந்த அளவென்றால், "நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்" அந்த அளவு நோவு. அந்த அளவு அவரின் ஈமானின் பக்குவம். எந்த ஒரு நபிக்கட்டளையும் அவர்களுக்கெல்லாம் "சும்மா" கிடையாது. நபி சொன்னார், கேட்டோம், செய்தோம். அவ்வளவுதான்.

அவர் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரது அறைக்குள் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் கப்பாப் தெரிவித்தார்:

"எண்பதாயிரம் திர்ஹம் அந்த இடத்தில் இருக்கிறது. அவை மறைத்து வைக்கப்படவில்லை. என்னைத் தேடி வந்தவர்கள் யாரையும் நான் இல்லையென்று திருப்பி அனுப்பியதில்லை" என்று சொல்லிவிட்டு விம்ம ஆரம்பித்தார்.

"ஏன் அழுகை?" என்று விசாரித்தார்கள் நண்பர்கள்.

"ஏன் அழுகிறேனா? எனக்குமுன் பலத் தோழர்கள் சென்று விட்டார்கள். அவர்களுக்கு உரிய எந்த வெகுமதியையும் இவ்வுலகில் வெகுமதியாக அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நான் நீண்ட நாள் வாழ்ந்து செல்வம் பார்த்துவிட்டேன். எனது அத்தனை செயல்களுக்கும் இதுதான் வெகுமதியென்று இங்கேயே கிடைத்து, மறுமையில் ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்று நினைத்து அழுகிறேன்."

மலிவாகக் கட்டப்பட்டிருந்த தனது வீட்டையும் மக்களுக்காகத் தான் பணம் விட்டுவைத்திருந்த இடத்தையும் நண்பர்களுக்குக் காட்டினார். "அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் கயிற்றால் ஏதும் கட்டி வைக்கவுமில்லை. கேட்டு வருபவர் எட்டாத தொலைவிலும் வைக்கவில்லை" என்று சொல்லிவிட்டுத் தனக்கெனத் தயாராய் வைக்கப்பட்டிருந்த கஃபனைக் காட்டினார். அதுவே அவருக்கு ஆடம்பரமாய்த் தோன்றியது. நண்பர்களிடம் விசனப்பட்டார்.

”இதோ எனக்காக முழு அளவாவது கஃபன் துணி தயாராய் இருக்கிறது. ஆனால் ஹம்ஸா! அவர் உஹதுப் போரில் வீர மரணம் தழுவியபோது அவர் உடம்பை முழுதும் மறைக்குமளவு துணியில்லை. கடைசியில் புல்லைப் போட்டு மூடினோம்.”

அவர் பேச்சில் ஏதாவது ஓர் ஒற்றை எழுத்து நமக்குப் புரிந்து விட்டாலே உத்தமம். நமது புலனும் உணர்வும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மாசுபட்டதொரு சூழல். நமது சிந்தனைத் தளமே வேறு. யோக்கியம் எனும் வார்த்தைக்கு நமது அர்த்தம் வேறு. அவர்கள்? ரலியல்லாஹு அன்ஹும்.

ஒருமுறை மக்காவில் குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறப்பு அமர்வுக்கு நேரம் கேட்டார்கள். அதாவது ஏழை எளியவர்களாகிய பிலால், சுஹைப், கப்பாப் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களுடனெல்லாம் அமராமல் மேட்டுக்குடியினருக்கான தங்களுக்குத் தனி அமர்வு. அல்லாஹ் வசனங்களை இறக்கினான். வறியவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களை இழுத்து அரவணைத்து, புகழ்ந்து, கௌரவித்து வசனங்கள் வந்தன:

(நபயே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா? நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப்பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-அன்ஆம் 6:52-54)

அந்த வசனங்கள் இறங்கிய நிமிடத்திலிருந்து அவர்களைக் கண்டுவிட்டால் முஹம்மத் நபி (ஸல்) மேலும் அன்பாய் நடாத்த ஆரம்பித்தார்கள். தனது விரிப்பை அவர்களுக்கு விரித்து, அவர்களது தோள்களைத் தட்டி, "என் இறைவன் சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக". இஸ்லாமிய அகராதியில் மேட்டுக்குடிக்கு புது அர்த்தம் புனையப்பட்டது.

ஹிஜ்ரீ 37ஆம் வருடம் கப்பாப் இப்னு அரத் (ரலி) உயிர் நீத்தார்கள். அவரது வஸிய்யத்படி ஊரின் புறப்பகுதியில் அவரை அடக்கம் செய்தனர். நகரின் உள்ளே இருக்கும் மையவாடி வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஸிஃப்பீன் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அந்தப் பகுதியில் புதிதாய் இருந்த ஏழு கப்ருகளைக் கண்ணுற்று விசாரிக்க, மக்கள் தெரிவித்தார்கள்:

"அமீருல் மூமினீன்! முதல் கப்ரு கப்பாபுடையது. அவரது விருப்பப்படி அவரை இங்கு அடக்கம் செய்தோம். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தவர்கள்"

ஆழ்ந்த துக்கத்திற்குப் பிறகு இறைஞ்சினார் அலீ: "அல்லாஹ்வின் கருணை கப்பாப் மேல் உண்டாகட்டும்! அவர் இஸ்லாத்தைப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்றார்! முழு மனதுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டார்! தனது வாழ்நாள் முழுதும் போராளியாக வாழ்ந்தார்! நேர்மையான செயல் புரிந்த எவரின் வெகுமதியையும் அல்லாஹ் குறைத்துவிட மாட்டான்"

ரலியல்லாஹுஅன்ஹு!

*****

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

வரலாறு - தோழர்கள்

தோழர்கள்

அன்பான தமிழ் முஸ்லிம் நியூஸ்.ப்லொக்ச்பொட் .காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

1. ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேகரம் ஆகும் பணம் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்!

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ”யார் இந்த ஸயீத்?" என்று கேட்டார்.

"எங்கள் அமீர்" என்றனர். அமீர் என்றால் அந்தப் பகுதியின் கவர்னர் எனலாம்.

"என்ன, உங்கள் அமீர் ஏழையா?" என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது!.

"ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்" என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.

உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, "என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்".

குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்தது. பை கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்து தீனார்கள் கண்டு உரத்த குரலில், "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்றார் ஸயீத். மரணம் போன்ற பேரிடரின் நிகழ்வில் முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைத் தான் கூறினார் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு.

* * * * * *

க்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்தபோது ஹஜ்ஜுக் கடமைச் செயல்பாடுகளின் இடையில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்பட்டு, கஅபாவைத் தவாஃப் செய்ய இயலாமல் ஆகிவிட்டது. அவர்கள் தூய்மை அடைந்த பின்னர் தன்ஈமுக்கு வந்து இஹ்ராம் மேற்கொண்டு, கஅபாவுக்குச் சென்று தவாஃப் செய்து ஹஜ்ஜை முழுமைப் படுத்தினார். அந்த இடத்தில் இப்பொழுது ஆயிஷா (ரலி) பள்ளி என்ற பெயரில் ஓர் அழகிய பள்ளி உள்ளது.

தன்ஈமில் அன்று ஒரு சம்பவம். குபைப் இப்னு அதீ (ரலி) எனும் நபித்தோழர் ஒருவர் மக்கத்துக் குரைஷிகளால் கைப்பற்றப்பட்டு அன்று கொலைத் தண்டனைக்கு உட்பட்டிருந்தார். (இன்ஷாஅல்லாஹ் இவரைப் பற்றிய வரலாறு விரிவாய் பின்னர்). கொளுத்தும் சுடுமணலில் வெற்றுடம்பாய்ப் படுக்க வைத்து, மார்பில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கப் பட்ட பிலால் (ரலி) அவர்களை குதூகலத்துடன் வேடிக்க பார்த்த கூட்டமல்லவா? எனவே மக்கா நகரவாசிகள் வேடிக்கை பார்க்கக் குழுமி விட்டிருந்தனர். ஸயீத் இப்னு ஆமிர் அப்பொழுது இளைஞர். முண்டியடித்துக் கொண்டு அவரும் கூட்டத்தில் புகுந்திருந்தார்.

சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்ட குபைபிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.

"இரண்டு ரக்அத் தொழ வேண்டும்".

அனுமதியளிக்கப்பட்டது. மரணப் பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார். பின்னர் அநியாயத்திற்குத் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார்.

"சரியில்லை, இது எதுவுமே சரியில்லை" என்று ஸயீத் மனம் நிச்சயமாய் சொன்னது. தொடர்ந்து வந்த நாட்களில் மனதை மரணம் வென்றது. ஒருநாள், ”போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்" என்று குரைஷிகளிடம் கூறிவிட்டு மதீனா சென்றுவிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தஞ்சமடைந்து விட்டார். பிறகு கைபர் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற போர்களிலும் கலந்து கொண்ட வீரர் ஸயீத்.

அபூபக்ரு மற்றும் உமர் இருவரும் ஸயீத் இப்னு ஆமிரின் (ரலியல்லாஹு அன்ஹும்) நேர்மையையும் இறைவிசுவாசத்தையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவரது ஆலோசனைகளையும் அந்த இரு கலீஃபாக்கள் கேட்டறிந்து செயல்படுவர்கள். உமர் கலீஃபா பொறுப்பேற்றுக் கொண்டிருந்த ஆரம்ப நேரத்தில் ஒருமுறை ஸயீத் அவரிடம் ஆலோசனை பகர்ந்தார்.

”நான் உம்மிடம் மனப்பூர்வமாய்ச் சொல்கிறேன். மக்களிடம் நீங்கள் நடந்து கொள்வதன் பொருட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஆனால் அவனிடம் உமக்குள்ள உறவு குறித்து மக்களை அஞ்ச வேண்டாம். சொன்னதையே செய்யுங்கள். ஏனெனில் வாக்குறுதியில் சிறந்தது, அதை நிறைவேற்றுவதே. முஸ்லிம்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதை விரும்புவீர்களோ வெறுப்பீர்களோ அதையே அவர்களுக்கும் விரும்புங்கள்; நிராகரியுங்கள். சத்தியத்தை அடைய எத்தகைய இடையூறையும் சமாளியுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுவதில் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளுங்கள்". இதுவே அதன் சாராம்சம்.

இந்த நேர்மையெல்லாம்தான் ஹிம்ஸிற்கான அமீருக்குத் தகுதியான ஆள் தேர்ந்தெடுக்க உமர் யோசித்துக் கொண்டிருந்தபோது ஸயீத் இப்னு ஆமிரின் பெயர் கவனத்திற்கு வந்து உடனே டிக் செய்யப்பட்டது.

உமர் நிர்வாகப் பொறுப்பிற்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கும் லாவகமும் அதற்குரியவர்கள் பதவியை வெறுத்தொதுங்குவதும், அதெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதைகள்.

"ஸயீத், உம்மை ஹிம்ஸிற்கு கவர்னராக நியமிக்கிறேன்" என்று உமர் அறிவித்தபோது மகிழ்ச்சி அடையாவிட்டாலும் பரவாயில்லை, அவரது பதில் தான் ஆச்சர்யம்! "உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டமாக்கி விடாதீர்கள்".

உமருக்கு ஆத்திரம் எழுந்தது. "என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்".

பதவியையும் பணத்தையும் அந்தஸ்தையும் செல்வாக்கையும் விட்டு ஓடிய சமூகம் அது. முன்மாதிரிச் சமூகம். நம்மால் வரலாறுகளில் படித்துப் பெருமூச்செறிய மட்டுமே முடியும்!.

உமர் வாதத்தின் நியாயம் ஸயீத்திற்குப் புரிந்தது. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை நான் கைவிடமாடடேன்". ஏற்றுக் கொண்டார் ஸயீத்.

கல்யாணமாகியிருந்த புதிது. புது மனைவியுடன் ஹிம்ஸ் புறப்பட்டார் ஸயீத். உமர் பணம் கொடுத்திருந்தார். புது இடத்தில் அமீர் குடும்பம் அமைத்துக் கொள்ள வேண்டுமே. ஹிம்ஸ் வந்து சேர்ந்தவுடன் அடிப்படைக்குத் தேவையான பொருட்கள் மட்டும் வாங்கிக் கொண்டார் ஸயீத். பிறகு மனைவியிடம் கூறினார். "நாமிருக்கும் நகரில் வர்த்தகத்தில் நல்ல இலாபம் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தை நல்லதொரு வியாபாரத்தில் முதலீடு செய்கிறேன்".

மனைவி கேட்டார், "வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு விட்டால்?" வீட்டிற்கு மேற்கொண்டு சில பொருட்கள் வாங்கிக் கொள்ளலாமே என்ற எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை அவருக்கு இருந்தது. "யாரை நம்பி முதலீடு செய்கிறேனோ அவனை அதற்கு உத்தரவாதம் அளிக்க வைக்கிறேன்" என்று பதில் கூறிவிட்டார் ஸயீத்.

மீதமிருந்த அனைத்துப் பணத்தையும் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் முற்றிலுமாய்க் கொடுத்துவிட்டார் அவர். பின்னர் அவரின் மனைவி வியாபாரத்தின் லாபம் குறித்துக் கேட்கும் போதெல்லாம், "அதற்கென்ன? அது பிரமாதமாய் நடக்கிறது. அதன் லாபமும் பெருகி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது" என்று கூறிவிடுவார்.

ஒருநாள் ஸயீத் பற்றிய விஷயம் அறிந்த உறவினர் முன்னிலையில் அவர் மனைவி இப்பேச்சை எடுக்க நேர்ந்தது. உறவினரின் பலமான சிரிப்பு மனைவிக்கு சந்தேகத்தை அளிக்க, வற்புறுத்தலில் உறவினர் உண்மையைச் சொல்லிவிட்டார். மனைவியின் கேவலும் அழுகையும் ஸயீத்திடம் இரக்கம் ஏற்படுத்த,

"என்னுடைய நண்பர்கள் எனக்கு முன்னர் மரணித்து விட்டார்கள். இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் அதற்கு ஈடாக கிடைப்பினும் சரியே, அவர்களின் நேர்வழியிலிருந்து நான் விலகிவிட விரும்பவில்லை" என்றார். அழுகையிலும் மனைவியின் அழகு அவரை ஈர்த்தது. சுதாரித்துக் கொண்டவர், "சுவர்க்கத்திலுள்ள அழகிய கண்களையுடைய ஹுருல் ஈன்களைப் பற்றி உனக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் பூமியை நோக்கினாலும் அதன் சக்தியில் முழு பூமியையும் பிரகாசப்படுத்தும். சூரிய சந்திர ஒளிகளையும் மிகைத்தது அது. உன்னை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பது என்பது சிறந்ததுதான்".

ஸயீதின் மனைவி அமைதியானார். தன் கணவரின் எண்ணமும் மனவோட்டமும் அவருக்குப் புரிந்தது.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் புதிதாய் தீனார்கள் வந்தால்?

* * * * * *

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்ற சத்தம் கேட்டு ஓடி வந்த ஸயீதின் மனைவி கேட்டார், "என்ன? கலீஃபா இறந்து விட்டார்களா?"

"அதை விடப் பெரிய சோகம்".

"முஸ்லிம்களுக்குப் போரில் தோல்வியேதும் ஏற்பட்டுவிட்டதா?"

"அதை விடப் பெரிய இடர், ஒரு பேரிடர். என்னுடைய மறுமை வாழக்கையைக் கெடுத்து, என் வீட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருக்கிறது".

"எனில் அதனை விட்டொழியுங்கள்" என்றார் மனைவி தீனார் பற்றி அறியாமல்.

"அப்படியானால் எனக்கு உதவுவாயா?"

மனைவி தலையாட்ட அனைத்து தீனார்களையும் ஒரு பையில் போட்டு நகரில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் அளித்து விட்டார்.

என்ன சொல்வது? போதாமையில் உள்ளதே போதும் என்ற வாழ்க்கையை நம்மால் முழுதும் உணர்ந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.

ஹிம்ஸ், ஈராக்கிலுள்ள கூஃபாவிற்கு இணையாய் ஒரு விஷயத்தில் திகழ்ந்தது. கூஃபா நகரின் மக்கள் அதன் ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தனர். அதைப் போல் ஹிம்ஸ்வாசிகளும் குறை சொல்ல, இது சிறு கூஃபா என்றே அழைக்கப்படும் அளவிற்கு ஆகிவிட்டது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியா வந்தடைந்தார்கள். ஹிம்ஸ் மக்களுக்கு ஸயீத் பின் ஆமிர் அவர்களின் மீது மிகப் பிரதானமாய் நான்கு குறைகள் இருந்தன. நமது ஆட்சியாளர்களைப் பார்த்துப் பழகி விட்ட நமக்கு அவையெல்லாம் கிறுக்குத் தனமான குறைகள்.

ஆனால் குறைகளைக் கேட்ட உமர் அவர்கள் மிகவும் அதிர்ச்சியுற்றார்கள். அது பொறுத்துக் கொள்ள முடியாத குறைகள். ஸயீத் மேல், தான் கொண்டிருந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விடுமோ என்று கலீஃபாவை கவலை கொள்ள வைத்த குறைகள். மக்களுக்குப் பதிலளிக்க கவர்னரை அழைத்தார்.

"இவர் அலுவலுக்கு வருவதே சூரியன் உச்சிக்கு வருவதற்குச் சற்று முன்னர்தான்" என்று முதல் குறை தெரிவிக்கப்பட்டது.

"இதற்கு என்ன பதில் சொல்கிறாய் ஸயீத்?" என்று கேட்டார் உமர்.

சற்று நேரம் மௌனமாயிருந்தார் அவர். "அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் இதனை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆயினும் இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது கடமையாகி விட்டது. எனது குடும்பத்திற்கு ஒத்தாசை புரிய வேலையாட்கள் யாரும் கிடையாது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைவேன். மாவு உப்பி வரும்வரை காத்திருந்து, பிறகு அதனை அவர்களுக்குச் சமைத்துக் கொடுத்துவிட்டு வருவேன்".

"இரவில் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை" என்று அடுத்த குறை தெரிவிக்கப்பட்டது.

மிகவும் தயக்கத்திற்குப் பிறகு ஸயீத் இதற்கு பதிலளித்தார். "இதனையும் நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. பகலெல்லாம் எனது நேரத்தை இவர்களுக்காக அளித்து விடுகிறேன். ஆகவே இரவு நேரத்தை என் இறைவனுக்காக அவனது பிரார்த்தனையில் கழிக்கிறேன்".

"மாதத்தில் ஒரு நாள் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை" என்று மூன்றாவது குறை சொல்லப்பட்டது.

"அமீருல் மூமினீன்! எனக்கு வீட்டு வேலையில் உபகாரம் புரிய வேலையாட்கள் யாரும் இல்லை. உடுப்பு என்று என்னிடம் இருப்பது, நான் உடுத்தியிருக்கும் இந்த ஆடை மட்டும்தான். மாதத்தில் ஒருமுறை இதனைத் துவைத்துக் காயவைத்து உடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் அன்றைய தினம் என்னால் பொது மக்களைச் சந்திக்க முடிவதில்லை".

"அடுத்து என்ன குறை?" வினவினார் உமர்.

"அவ்வப்போது இவர் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார்".

அதற்கு பதிலளித்தார் ஸயீத். "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் குபைப் இப்னு அதீ (ரலி) கொல்லப்படுவதை என் கண்ணால் பார்த்தேன். குரைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிக் கொண்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் கேட்டனர், 'உனக்கு பதிலாக இப்பொழுது இங்கு முஹம்மத் இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாய்தானே?' அதற்கு குபைப், 'முஹம்மத் மீது ஒரு முள் குத்த விட்டுவிட்டுக்கூட நான் எனது குடும்பத்துடன் பாதுகாப்பாய் இருந்து விட மாட்டேன்' என்று கூறினார். அவர்களது ஆக்ரோஷம் அதிகமடைந்து அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக நின்று கொண்டு அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேனே, என்ற எண்ணமும் கைச்சேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது! என்னையறியாமல் மயங்கி விழுந்து விடுகிறேன்".

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் கூறினார், "அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் ஸயீத் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை".

நாளும் பொழுதும் கொலைகளும் அட்டூழியங்களும் சகாய விலைக்குப் பார்த்து மரத்துப் போன நம் உள்ளங்களுக்கு இந்த வரலாறு கூறும் செய்தியையும் அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்வது சற்றுச் சிரமம்தான்.

ஸயீத் இப்னு ஆமிர் பின் ஹதீம் பின் ஸலாமான் பின் ரபீஆ அல் குறைஷி அவர்கள் ஹிஜ்ரீ 20இல் மரணமடைந்தார்கள்;

ரலியல்லாஹு அன்ஹு!

இரண்டு யூதர்கள்! நற்சிந்தனைகள் - வாழ்வியல்

வர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.


எங்கு அலைந்து தேடியும் செல்ல வேண்டிய வழி புலப்பட வில்லை. கையில் கொண்டு வந்திருந்த உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.


ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். "பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்."

பெஞ்சமின் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என் பெயர் பெஞ்சமின் தான். பொய் சொல்லி அவர்களை ஏமாற்றி உண்ண விரும்பவில்லை!"

களைத்துத் தளர்ந்து போய் பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவரையும் கனிவோடு வரவேற்ற இமாம், அவர்களிருவரின் பெயர், விபரங்களை விசாரித்தார்.

"நான் முஹம்மத்" என்றான் சாமுவேல்

"நான் பெஞ்சமின், நானொரு யூதன்" என்றான் பெஞ்சமின்

அவர்களின் உருவத்தை வைத்தே பசியில் இருப்பதை அறிந்து கொண்ட இமாம், பள்ளிவாசலின் உட்புறம் திரும்பி உதவியாளர்களை அழைத்தார்.

"தயவு செய்து உடனடியாக பெஞ்சமினுக்கு உணவு கொண்டு வாருங்கள்"

அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த சாமுவேலிடம் இமாம் கூறினார். "முஹம்மத், இது ரமளான் மாதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்"

- அபூ ஸாலிஹா

(ஆங்கில சொற்பொழிவு ஒன்றின் தோராய தமிழாக்கம்)

நோக்கியாவின் இரட்டை சிம் கார்டு போன் இந்தியாவில்


கொல்கத்தா : உலகளாவிய மொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் நோக்கியா இந்தியாவிலும் அதிக விற்பனையாகும் மொபைலாக விளங்குகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் உலகளாவிய அளவிலும் இந்தியாவிலும் ஓரே சமயத்தில் இரண்டு சிம் கார்டு உள்ள மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நோக்கியா அறிமுகம் செய்ய உள்ள சி-1 மற்றும் சி-2 ஆகிய இரண்டு மாடல்களும் 2,500 ரூபாய்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம் மொபைல்களில் எப். எம். ரேடியோ, 1000 முகவரி கொள்ளளவு வசதி, டார்ச் மற்றும் வி.ஜி.ஏ. கேமரா போன்றவை இருக்கும் என தெரிகின்றது.

இத்தகவலை உறுதிப்படுத்திய நோக்கியா இந்தியாவின் இயக்குநர் ராம்நாத் இம்மொபைல்களை இப்போதே சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்பேட்டையில் தயாரிப்பதா அல்லது பின்னர் தயாரிப்பதா என்பது முடிவு செய்யப்படவில்லை என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் போட்டியாளர் சாம்சங் இரட்டை சிம் கார்டு போனை அறிமுகப்படுத்தினாலும் அவற்றின் விலை 3,200 ரூபாயிலிருந்து 9.600 ரூபாய் வரை இருப்பதால் நோக்கியா இரட்டை சிம் கார்டு மொபைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் என தெரிகின்றது.

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!

நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.

விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள "புனித பள்ளிகள் துறை அமைச்சகம்", மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.

மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.

ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.

12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.

நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.

கஷ்மீர் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு நடத்த வேண்டும் - காரத்

கஷ்மீர் பிரச்சனைக்குத் அனைத்து பிரிவினரையும் அழைத்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.

ஜம்மு கஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் காங்கிரஸ் அரசு திணறுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதைவிட அணு விபத்து நஷ்ட ஈடு மசோதாவை நிறைவேற்றுவதில்தான் அதிக அக்கரை காட்டுகிறது.

கஷ்மீரில் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும். பிரச்சனையை கண்டு ஒதுங்குவதால் தீர்வு கிடைக்காது. திறந்தமனதுடன் பேச்சு நடத்தப்படவேண்டும். கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை அங்கீகரிப்பதும் மாநில மக்களின் தனி அடையாளத்துக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் பிரச்சனைக்கு தீர்வு காண வழி ஏற்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது

அதிகபட்ச தன்னாட்சி என்பதை அடித்தளமாக கொண்டு புதிய அரசியல் தீர்வு காணவேண்டும். காஷ்மீர் பிரச்சனை மோசமடைந்துள்ளது. மாநிலத்தில் நிலவும் விரும்பத்தகாத சம்பவங்களை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதி,அதைச் சமாளிக்க சட்ட நடவடிக்கை எடுப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இராணுவ சிறப்பு அதிகார சட்டத்தில் அச்சுறுத்தும் கடுமையான சட்ட விதிகளை அரசு திருத்த வேண்டும். அதுவரை ஸ்ரீநகரிலிருந்தும் பிற குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களால் 62க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது வேதனையிலும் வேதனை.இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று காரத் கூறினார்.