ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்:
"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து பிரதமர், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஆகிய மூவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்.
அந்த ஆலோசனையின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்பனை செய்யவோ, ஏலம் விடவோ வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படும் முறையில் நடக்காததால், வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்படவில்லை என்று பிரதமர், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர்.
எனக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்பதனால், என்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்," என்று அந்த வாதத்தில் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
பிரதமர், ப.சிதம்பரம், ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தின் விவாதம் குறித்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, தனக்கு முந்தைய அரசு கடைபிடித்த நடைமுறைகளையே தாமும் பின்பற்றியதாகவும், இதில் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என்றும் ஆ.ராசா வாதிட்டுள்ளார்