அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

கல்விச் செய்திகள்....

1. சோயா உணவுகள் தயாரிப்புப் பயிற்சி
2. தமிழை முதல் மொழிபாடமாக படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை
3. கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது - இந்த உண்மை தெரியுமா?
--------------------------------------------------------------------------------
1. சோயா உணவுகள் தயாரிப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சோயா உணவுகள் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.

சோயா உருண்டைகள், பொடிமாஸ், பாயாசம், செட்டிநாடு டோபு, மஞ்சூரியன் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் தயாரிக்க இதில் பயிற்சியளிக்கப்படும்.

ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், 44, 6-வது அவென்யு, அண்ணாநகர், சென்னை-40. தொலைபேசி: 044-2626 3484, 4217 0506.
--------------------------------------------------------------------------------------------------------------------------
2. தமிழை முதல் மொழிபாடமாக படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை

தமிழை முதல் மொழிபாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை அளித்து வருகிறது. அதாவது இத்திட்டத்தின்படி அரசு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.15,000, இரண்டாமிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.12,000 மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது.

அதே போன்று, மாநில அளவில் தமிழை முதல் மொழிப் பாடமாக படித்து முதன் மூன்று இடங்களைப் பெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதலிடம் பெறுபவருக்கு ரூ.7500, இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.6000 மற்றும் மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------
3. கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது - இந்த உண்மை தெரியுமா?


என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு திறந்தே கிடக்கிறது என்பது வியப்பான உண்மை.

அப்படியென்ன வேலைவாய்ப்பு இருக்கிறது?

ரூ. 2 கோடிக்கு மேல் செலுத்திய முதலீடு (Paidup Capital) செய்துள்ள நிறுவனங்கள் தகுதி பெற்ற கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது சட்டப்படி முக்கியம்.

ரூ.2 கோடிக்குக் கீழே முதலீடு செய்தவர்கள் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாக அமர்த்தலாம்.பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும்.

இந்தப் படிப்பை முடித்தவர்களை மத்திய அரசின் உயர் பதவியில் அமர்த்தலாம் என கல்வி அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக இயக்குநர்களாக முழு நேர இயக்குநர்களாக, கம்பெனி தலைவர்களாக, துணைத் தலைவர்களாக பணியமர்த்தலாம். இவ்வாறு கம்பெனியில் சேர்ந்து பணியாற்றாமல், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர் போல் தனியாகவும் தொழில்முறை பணியை மேற்கொள்ளலாம்.

இவை மட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கம்பெனி செயலர் ஆலோசகர்களாகப் பணியாற்றவும் செய்யலாம். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குகின்றன. அதுபோல், உலக நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்குகின்றன.

எனவே, வேலைவாய்ப்பும் விரிவடைந்து வருகிறது.

மேலும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்கள், செயல்பாடுகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். மேலும், பிரிட்டனின் "ஐ.சி.எஸ்.ஏ. -யு.கே.' என்ற நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கம்பெனி செகரட்டரி படிப்புக்கான தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் இத்தேர்வுகள் நடைபெறும். மார்ச் 31-ம் தேதி பதிவு செய்தால், டிசம்பரில் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவு செய்தால் அடுத்து வரும் ஜூனில் தேர்வு எழுதலாம்.

இப்படிப்பில் சேர என்ன வழி?

12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் "கம்பெனி செகரட்டரிஷிப்' படிப்பில் சேரலாம். இது போல் பட்டம் படித்தவர்களுக்கும், முதுநிலை படித்தவர்களுக்கும் படிப்புகள் உண்டு. வயது வரம்பு இல்லை.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உண்டு. சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள், உதவித் தொகைகள் உண்டு.

நிர்வாகவியல், தொழில்முறை பயிற்சி பெறுவோருக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வசதி செய்து தரும். அடிப்படைத் தேர்வு எழுதியவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் மேலாண்மையியல் படிப்பில் சேரலாம். பிறகு இறுதித் தேர்வு எழுதலாம்.

இறுதித் தேர்வு முடித்த பின் 16 மாத மேலாண்மைப் பயிற்சி (Management Training) பெறவேண்டும். அதன் பிறகு இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால், ஏ.சி.எஸ். (Associate Company Secretary) முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

கம்பெனிகள் ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் அளிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜர் ஆகுதல் ஆகிய பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்.

இது தவிர, பல்வேறு சட்டங்களின் கீழ் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) கீழும் தொழில் புரியலாம். ""தற்போது நாடு முழுவதும் 21 ஆயிரம் பேர்தான் கம்பெனி செயலர்களாக இருக்கின்றனர். இன்னும் ஏழு ஆண்டுகளில் இதை 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்கிறார் இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த (The Institute of Company Secretaries of India) கெய்யூர் பக்ஷி.

தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஆகிய படிப்புகளைப் போல் கம்பெனி செயலர் படிப்பு குறித்து கிராமப்புற மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.முதல் கட்டமாக கம்பெனி செயலர் கல்வித் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உலகமயமாதல் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கம்பெனி செயலர் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி வருகிறது. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம், செபி, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் வரைமுறைகளை கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் முக்கியமான பணியையும் மேற்கொள்கின்றனர்.

கம்பெனிகள் சட்டம், பங்குகள் பரிமாற்றம் குறித்த சட்டங்களில் கம்பெனி செகரட்டரி வல்லுநராக இருப்பார். நிறுவனத்தின் சட்டம், நிதி, கணக்கு, பணியாளர் நிர்வாகம், பொது நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் தொடர்புகொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்.

அத்துடன் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள், அரசு, பொதுமக்கள், கம்பெனி ஊழியர்கள் ஆகியோர்களிடையே பாலமாகச் செயல்படுகிறார். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை இந்திய கம்பெனி செகரட்டரி நிறுவனம் நடத்துகிறது. இது நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு மத்திய கம்பெனி விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அடிப்படைத் தேர்வு ((Foundation Course) 4 தாள்கள் (கட்டணம் ரூ.3,600); மேலாண்மை நிலை (Executive Programme) 6 தாள்கள், (கட்டணம் ரூ. 7,750); தொழில்முறைப் படிப்பு (Professional Programme) 8 தாள்கள் (கட்டணம் ரூ.7,500).

கம்பெனி செகரட்டரி படிப்பின் அடிப்படைத் தேர்வு இணையவழிக் கல்வியாக (E-learning) நடப்பு ஆண்டில் நடத்தப்படும். கலந்துரையாடல், வினாடி-வினா ஆகிய பல்வேறு நூதன வழிகளில் கல்வி கற்பிக்கப்படும். பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடிப்படைத் தேர்வில் 4 தாள்கள், நிர்வாகத் தேர்வில் 6 தாள்கள், தொழில்முறைத் தேர்வில் 8 தாள்கள் இருக்கும்.

இத்தொழிலில் சேருவோர் தொடக்கத்திலேயே மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் நாட்டின் 71 நகரங்களில் உள்ளன. சென்னை, மும்பை, கோல்கத்தா, தில்லி என நான்கு மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இது மேலும் விரிவடைய இருக்கிறது.

இப்படிப்பில் ஆண்டுமுழுவதும் எப்போதும் சேரலாம். தபால் வழி கல்விக் கட்டாயம். மண்டல அலுவலகம், கிளை அலுவலகங்களில் நடக்கும் வாய்மொழி வழிப் பயிற்சியிலும் சேரலாம். இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் பெயரை "இந்திய பட்டயச் செயலர் பயிற்சி நிறுவனம்'(The Institute of Charted Secretaries of India) எனப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள், முந்தைய ஆண்டுக்கான கேள்வி -பதில் புத்தகம், இன்ஸ்டிடியூட் வெளியிடும் புத்ககம் கிடைக்கிறது. மாணவர்களை நேரடியாகச் சேர்க்கும் முறையும் உண்டு. மாணவர் சேர்க்கையில் உடனடி சேர்க்கையும் உண்டு.

Deputy Director,

The Insititted of Company secretaries of India,

No:9, ‘ICSI-SIRC House,’ 9, Wheat Crofts Road,

Nungakbakkam chennai. 34.

Teld: 044- 2827 9898, 2826 8685. fax 044 2826 8685.

www.icsi.edu; Email: icsisirc@md3.vsnl.net.in

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அல்லாஹ் கூறுகிறான்,
بسم الله الرحمن الرحيم
தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

[media-credit name="webs" align="aligncenter" width="300"][/media-credit]

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது,அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும்இடையிலிருந்து கலப்பற்ற பாலைஅருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

3) கலப்பற்ற பால்

4) அருந்துபவர்களுக்கு இனிமை

5) தாராளமாக புகட்டுகிறோம்

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?

1. கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்
[media-credit name="webs" align="aligncenter" width="300"][/media-credit]

பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன

  1. RETICULUM (ரெடிகுழம்)
  2. RUMEN, (ரூமென்)
  3. OMASUM, (ஓமசம்)
  4. ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்

பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாகரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.

சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களானRUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.

அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.

பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியானரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.

பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்தஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!
[media-credit name="webs" align="aligncenter" width="300"][/media-credit]

பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக்திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.

மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ளமைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமா ஜீரணமானசெய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாகஇரத்தில் கலந்துவிடுகிறது!

இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?

பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?

3. கலப்பற்ற பால்

4. அருந்துபவர்களுக்கு இனிமை

5. தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்

  • ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
  • பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
  • பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.
  • உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!

பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாகபுகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?

இந்தியாவின் பால் உற்பத்தி

ஆண்டுபால் உற்பத்திமக்கள் தொகை
196821 மில்லியன் டன்கள்குறைவு
200181 மில்லியன் டன்கள்அதிகம்

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.

பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?

சிந்திப்பீர்! செல்படுவீர்!

மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறைவிசுவாசிகளாக மாறிவிடுங்கள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு

பால் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல!

இந்த கட்டுரையை வரைய அறிவைக் கொடுத்து நேரத்தை ஒதுக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்

ERAKKAM -ISLAMIC TAMIL ARTICLE

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சையில் PASS (Boss)ஆகலாம் சுலபமாக!

ரு கதை. அதன் லாஜிக் மேஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதன் நீதியை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.


மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் அது. அங்கு மனிதர்களைப் பிடித்துத் தின்னும் பழக்கம் உள்ள கூட்டம் ஒன்றை நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக வேலைக்கு அமர்த்தினார்கள். நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவர் முதல் நாள் அந்தக் கூட்டத்தினரிடம், 'உங்களுக்கு இங்கே சகல வசதிகளும் செய்து தரப்படும். நீங்கள் இங்கு எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். எல்லாமே இலவசம். ஆனால், மனிதரை நீங்கள் பிடித்துத் தின்றுவிடக் கூடாது!" என்றார். அவர்களும் ஒப்புக்கொண்டு கடினமாக உழைத்து வந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, அவசர மீட்டிங் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே மனித வளத் துறைத் தலைவர் அந்தக் கூட்டத்தினர் முன் கோபமாக இருந்தார்... 'எங்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவரை உங்களில் யாரோ ஒருவர் கொன்று தின்றுவிட்டார்!' என்று துவங்கி, வசவு மழை பொழிந்துவிட்டுச் சென்றார். அவர் தலை மறைந்ததும், அந்தக் கூட்டத்தின் தலைவன் மெல்லிய குரலில் சொன்னான், 'பாருங்கள் முட்டாள்களே... இதுவரை இந்த நிறுவனத்தில் எத்தனையோ மேனேஜர்களைப் பிடித்துத் தின்றிருப்போம். ஆனால், யாருக்கும் தெரியவில்லை. இப்போது மிக முக்கியமானவர் ஒருவரைத் தின்றுவிட்டீர்கள். மாட்டிக்கொண்டோம்!'

ஆம்... ஒரு நிறுவனத்தில் மேலாளர் என்பவரைவிட C.E.O (Chief Executive Officier) எனப்படும் முதன்மைச் செயல் அலுவலரின் பணி எத்தனை இன்றியமையாதது என்பதைக் குறிப்பிடவே இந்தக் கதை!

மேனேஜர்கள் சொன்னதைச் செய்பவர்கள். இப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறுபவர்கள். ஆனால், அதை ஏன், எதற்கு, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அந்த நிறுவனத்தின் C.E.O-வுக்கு மட்டுமே தெரியும். நிறுவனத்தில் மட்டுமல்ல; தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்கிற விதத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத் தாங்களேC.E.O ஆக இருக்கிறார்கள். அவசியம் இருக்க வேண்டும்!

C.E.O முதல் சிறந்த C.E.O வரை அனைவருக்கும் தேவையான மிக அடிப்படையான தகுதிகள் எவை? அவற்றை எப்படி இனம் காண்பது? எப்படி அவற்றைக் கூர்மைப்படுத்துவது? அனுபவசாலிகள் பகிர்ந்துகொள்கிறார்கள்...

"ஊழியர்கள்தான் ஒரு நிறுவனத்தின் சொத்து. ஒரு தொழிலில், ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், மனித முதலீடு இல்லாமல் போனால் அந்த நிறுவனம் முன்னேற முடியாது. இதனால்தான், பல நிறுவனங்கள் மனித வளத் துறை என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, மனித மேம்பாட்டுத் துறை என்று வைத்திருக்கின்றன. முன்னது, நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கும். பின்னது, நிறுவனத்தோடு வளரும் ஊழியர்களின் மேம்பாட்டையும் குறிக்கும். வளர்ச்சி அல்லது மேம்பாடு என்றால், ஊதிய உயர்வு மட்டுமே அல்ல; அதையும் 'நான் மானிட்டரி' எனப்படும் பணம் சாராத பயன்களையும் தங்களின் ஊழியர்களுக்குத் தர வேண்டும்.

ஒரு நிறுவனத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கும் 'வொர்க் ஹார்ஸ்', தங்களின் பணித் திறனையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் உயர்த்திக்கொண்டு, தன் நிறுவனத்தின் உயர்வுக்காகவும் திட்டமிட்டு உழைக்கும் 'ஸ்டார் பெர்ஃபாமர்ஸ்', வேலையே செய்யாதவர்கள், புதியவர்கள் என்று ஊழியர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். C.E.O என்பவர் இந்த நான்கு குதிரைகளையும் ஒரே சீராக இயக்க வேண்டும்!" என்கிறார் விஷன் அன்லிமிட்டெட் நிறுவனத்தின் C.E.O முனைவர் பாலசுப்பிரமணியன். கல்லூரி முடித்து பெரும் நிறுவனங்களுக்குள் எதிர்காலக் கனவுகளுடன் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு சில அடிப்படை மேலாண்மை நுணுக்கங்களைப் பட்டியலிடுகிறார் இவர்.

கவுன்சிலிங் திறன்கள்:

பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் நாள் ஒன்றுக்கு 50 பீட்ஸாக்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. புதிதாக வேலைக்கு ஒருவர் வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் 3 பீட்ஸாக்கள் காணாமல்போயின. எல்லாப் பணியாளர்களையும் விசாரித்தார்கள். குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேர்ந்தவரை மிகக் கடுமையாக விசாரித்தார்கள். அவரோ, தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று கெஞ்சிக் கதறினார். நிறுவனத்தின் பார்வை இந்தப் பணியாளர் பீட்ஸாவை எடுத்துச் சாப்பிட்டு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்திலேயே இருந்தது. விசாரணைகளுக்குப் பிறகும் பீட்ஸா காணாமல் போவது வாடிக்கையானது. வேறு எந்தப் பணியாளரும் அந்த செக்ஷனுக்கு வர வாய்ப்பு இல்லாத நிலை. ஒருநாள் அந்தப் புதிய பணியாளருக்கு கவுன்சிலிங் செய்தபோதுதான் அவர் 'க்ளெப்டோமேனியா' என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. 'சும்மா, ஜாலிக்காகவும் த்ரில்லுக்காகவும்தான் பீட்ஸாக்களைத் திருடினேன்' என்று ஒப்புக்கொண்டார். அது ஒரு குறைபாடு என்பதுகூட அதுவரையில் அவருக்குத் தெரியாது. பின்பு, பலகட்ட கவுன்சிலிங் சிகிச்சைகளுக்குப் பிறகு, அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டார்.

ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்னைகள் இருக்கும். 'வீட்டுப் பிரச்னையை வீட்டோடு விட்டுவிட்டு வா!' என்று சொல்கிற கதை எல்லாம் அரதப் பழசு. மனிதனை மனிதனாக நடத்துவதுதான் மேலாண்மையின் முதல் அரிச்சுவடி. அவன் ரோபோ கிடையாது. ஆபீஸ் வாசலை மிதித்தவுடன், தன் வீட்டுப் பிரச்னைகளை தனியே கழட்டிவைத்துவிடுவதற்கு. அவன் சந்திக்கிற பிரச்னை அவன் செய்கிற வேலையிலும் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்புதான் வேலையில் தவறாக எதிரொலிக்கும். மற்றபடி, ஒரு பணியாளன் வேண்டுமென்றே தவறுகள் செய்ய மாட்டான். அந்தத் தவறு, மற்றவர்களின் வேலைகளையும் பாதிக்கிறபோது, அது நிறுவனத்தின் பிரச்னையாக உருவெடுக்கும். ஆக, அந்தப் பிரதிபலிப்பு ஏற்படுகிறபோதே அந்தப் பணியாளரைத் தனியாக அழைத்துப் பேச வேண்டும். அவரின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். 'என்னப்பா... என்ன பிரச்னை?' என்று எடுத்தவுடனே கேட்டால், பதில் வராது. ஒரு பிரச்னையின் வேர் எங்கு இருக்கிறது என்பதை அறிய, அவரைச் சுதந்திரமாக இருக்கும்படியான உணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்குத்தான் இந்த கவுன்சிலிங் திறன்கள் தேவைப்படுகின்றன. இதில் முக்கியமான அம்சம், நீங்கள் அவருக்குத் தர வேண்டியது ஆலோசனைதானே தவிர, அறிவுரை அல்ல!

பாராட்டும் குணம்:

அந்த நிறுவனத்தில் அனைவருக்குமே சந்தோஷை ரொம்பப் பிடிக்கும். சந்தோஷ் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், அவன் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் அந்த மேலாளர். முன்பு இருந்த நிறுவனத்தில் மிகவும் முசுடு என்று பெயர் எடுத்தவர் அந்த மேலாளர். அவர் அறைக்குச் சென்றதும் அவரை வாழ்த்தி வரவேற்க ஊழியர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்றார்கள். போன வேகத்திலேயே எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு வந்தார்கள். காரணம், அவர்கள் எப்படிப் பாராட்டினாலும், அவர் ஒரு புன்னகைகூடச் செய்யவில்லையாம். ஏன் என்று கேட்டால், அவர் எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காதவராம். கடைசியாக, சந்தோஷ் சென்றான். அரை மணி நேரம் கழித்து முகத்தில் சிரிப்புடன் வந்தான். எல்லோரும் என்னவென்று விசாரிக்க, அவன் மேனேஜர் தன்னைப் பாராட்டியதாகச் சொன்னான். அனைவருக்கும் ஆச்சர்யம். '30 ஆண்டு காலமாக வேலை செய்பவர்களையே ஒரு வார்த்தை விசாரிக்காமல், வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன உன்னை மட்டும் எப்படிப் பாராட்டினார்?' என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில், 'எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காத ஒரு மாமனிதரை இன்றுதான் பார்க்கிறேன் என்று பாராட்டினேன்!' என்றான்.

'பணத்தால் வாங்க முடியாத மனிதர்களைக்கூட பாராட்டுகளால் வாங்கி விட முடியும்!' என்றான் சீஸர். மனம் திறந்த பாராட்டு என்பது ஒரு கிரியா ஊக்கி. இன்று பல நிறுவன மனித வளத் தலைவர்களுக்குத் தங்களின் பணியாளர்களைப் பாராட்டத் தெரியவில்லை. ஒரு கைகுலுக்கல், ஒரு முதுகு தட்டல், தோளில் கைபோட்டுக்கொண்டு ஒரு சிறு நடை, பதவி மறந்து ஒன்றாக கேன்டீனில் டீ சாப்பிடுவது... இவைபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றை முயன்று பாருங்களேன். அப்புறம் உங்களை எந்தப் பணியாளருக்குத்தான் பிடிக்காது. யார் பாராட்டுகிறாரோ அவரை உலகமும் பாராட்டும்!

பகிர்ந்து பணி செய்...

ஆடு மேய்ப்பவனிடத்தில் ஒரு புலியும் நரியும் வேலை கேட்டு வந்தன. அந்த முட்டாள் மேய்ப்பனோ, புலியிடத்தில் 'நீ என் ஆடுகளைப் பாதுகாக்கும் வேலை செய்' என்றான். நாயிடத்தில் 'நீ என் ஆடுகளுக்கு உணவு தேடிக் கொண்டு வா' என்றான். நாய் வெறும் பிஸ்கட்டையும் மற்ற உணவு வகைகளையும் கொண்டுவந்தது. புலிக்கு அலுப்புத் தட்ட, ஒருநாள் ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றது. அப்படியே தினமும் எல்லா ஆடுகளையும்... அப்புறம் நாயையும்... இறுதியில் ஆடு மேய்ப்பவனையும். யாரிடம் எந்த வேலை கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இது நடந்திருக்குமா?

'சீஸர் ஆணையிட்டால், அது செய்து முடிக்கப்பட்டது என்று அர்த்தம்' என ஒரு சொற்றொடர் இருக்கிறது. எவரிடம் சொன்னால் ஒரு காரியம் செய்ய முடியுமோ, அவரிடம் கொடுப்பது முக்கியம். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு', 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பவைபோலத்தான் இதுவும். 'இந்தச் செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க இவரால் முடியும் என்று நினைத்தால், அவரிடம் அந்தச் செயலைக் கொடுப்பதுதான் சிறந்தது' என்று திருவள்ளுவர் சொல்வார். அதிகாரத்தை ஒரே மையத்தில்வைத்து இருக்காமல் சிறிது தளர்த்திப் பரவலாக்க வேண்டும். அப்போது, வேலைப் பகிர்வு மிகவும் சுலபமாகவும் சிறப்பாகவும் முடியும். வேலையில் அலுப்பு தட்டும் என்பதால்தான், இன்று பல நிறுவனங்களில் 'பணிச் சுழற்சி' முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது!

கலந்தாய்வு:

மியாமி கடற்கரைக்கு வருபவர்களால் நிறையக் குப்பைகள் ஏற்படுகின்றன. அதனைக் குறைக்க என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள் நிர்வாகிகள். அப்போது ஐஸ்க்ரீம் குப்பைகள்தான் மிக அதிகமாக இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டாலே, கடற்கரையை ஓரளவு சுத்தமாக வைத்திருக்கலாம் என்று முடிவு செய்தார்கள். 'சரி, அந்தக் குப்பையை எப்படிக் குறைப்பது' என்று அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் கலந்தாய்வு நடத்தி கருத்துக் கேட்டார்கள். 'காலி ஐஸ்க்ரீம் கோப்பையைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பரிசு தரலாம்', 'உள்ளே அனுமதிக்கும்போதே அவர்களிடம் ஒரு டாலர் வசூலித்துவிட்டு, காலி ஐஸ்க்ரீம் கோப்பையைக் கொண்டுவந்தால் அந்த ஒரு டாலர் திருப்பித் தரப்படும்' - இப்படி நிறைய கருத்துக்கள் வந்தன. அப்போது, ஒரு கடைநிலை ஊழியர் ஒரு கேள்வி கேட்டார். 'காலி ஐஸ்க்ரீம் கோப்பையைத் தின்னவைத்தால் என்ன?' அப்போதைக்குச் சிரித்தாலும் அந்த ஐடியாவையும் குறித்துக்கொண்டார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு, அந்த ஊழியர் சொன்ன ஐடியாவில்தான் 'கோன் ஐஸ்' கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் நீதி, எவர் ஒருவரின் கருத்தையும் நிராகரிக்க வேண்டாம். முடிவுகள் எடுக்கப்படும்போது அனைவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு, அதன் பிறகு சிறந்த முடிவு எடுப்பதே சிறந்த மேலாண்மைத் தத்துவம். அப்படி எடுக்கப்படும் முடிவுகள்கூடச் சில சமயங்களில் தவறாகலாம். ஆனால், மேலாண்மையில் 'ட்ரையல் அண்ட் எரர்'தான் வளர்ச்சிகளுக்கு உதவுகின்றன என்பதை மறக்கக் கூடாது.

நாம் செய்கின்ற வேலைகளில் பிரச்னைகள் இல்லாமல் இருந்தால், ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் அர்த்தம். நாம் பார்க்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும்... அதற்கு யார் முன்வந்து பொறுப்பேற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் ஒரு நிறுவனத்தில் C.E.O. ஆக வர முடியும். நல்லது நடந்தால்... அதைக் குழுவாகக் கொண்டாடியும், கெட்டது நடந்தால்... 'அதற்கு தான் மட்டுமே' என்று முன்வந்து எதிர்கொள்வதும் ஒரு சிறந்த C.E.O ஆக உங்களை அடையாளம் காட்டும்!

சில அடிப்படைத் தகுதிகள்!

"எந்த ஒரு C.E.O-வுமே கீழே களத்தில் இறங்கி சுற்றிச் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும்னு கட்டாயம் கிடையாது. ஒரு நல்ல C.E.O-வுக்கான முழுமுதல் தகுதி தன் ஊழியர்களை மனம் கோணாமல் பார்த்துக்கொள்வது மட்டும்தான்!"- முதல் வரியிலேயே விஷயத்துக்குள் வந்தார் பிரவீன். சாஃப்ரான் இன்ஃபோ மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் C.E.O. முதன்மைச் செயல் அலுவலர் பொறுப்புக்கான அடிப்படைத் தகுதிகளாக இவர் பரிந்துரைப்பது பின் வருவன!

எந்தக் காரணம்கொண்டும் உறவினர்களுக்கு தொழிலில் முக்கியத்துவம்தராதீர்கள். இயல்பிலேயே திறமையான பிற தொழிலாளர்களுக்குள் அது ஊமைக் காயத்தை உண்டாக்கும்!

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் தொழிலாளர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்!

பாண்ட் பத்திரங்களில் வாங்கும் கையெழுத்தைவிட, பரஸ்பரப் புரிதல் மட்டுமே கம்பெனியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும்!

படிப்பு இருக்கிறது, முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் கண்மூடித்தனமாகத் தொழிலில் இறங்காதீர்கள். படிப்படியாகத் தொழில் கற்று, போதிய அனுபவத்துடன் ஒரு கம்பெனியின் C.E.O ஆன பின் உங்கள் வெற்றி உறுதியாகிறது!

தலை சிறந்த C.E.O ஆக நீங்கள் பிரகாசிக்க பட்டங்கள் எல்லாம் தேவை இல்லை. சூழ்நிலைகளையும், மனிதர்களையும், பிரச்னைகளின் காரணத்தையும் புரிந்துகொண்டால் போதும்!


நன்றி: யூத்புல் விகடன்.

சென்னையை மிரட்டுது மாரடைப்பு.....

காதல் வார்த்தைகளை அள்ளி வீசி பள்ளி மாணவிகளை ஏமாற்றும் இளைஞர்கள்: அதிர்ச்சி தகவல்

நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர்.


நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா?

இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒரு விதபதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர்.

விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூசன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள்.

பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள்.

அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா...? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள்.

காலையில் பெற்றோர் வந்து பஸ் வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள்.

உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் சில வக்கீர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள்.

படிப்பு சுமையே மாணவி களை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.

அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.


வரிக்கும் வலிக்கும்..

feel.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருவாய்த் தேடி

வளைகுடாவிற்கு நீ;

தனிமைக்கு துணையாய்

பிரிவுக்கு புது வரவாய்;

வருவாய் நீ; என நான் இங்கே!

ஏங்கி ஏங்கி தூங்கிப்போனக்

காலங்கள் உண்டு;

வீங்கிப்போன இமைகளைக் கொண்டு!

வெட்கப்பட்டு வெளியே வந்த

கண்ணீர்த் துளிகள் உரைக்கும்;

என் புலம்பலைக் கேட்டு முரைக்கும்!

கருவில் உனை வைத்து

கன்னத்தில் கை வைத்து

காத்திருக்கிறேன் உனக்காக!

நொந்துப்போனப் பிரிவுக்கு

வந்துப்போகும் உன் நினைவு;

கனத்துப்போகும் மனது!

உறவுகளுடன் நானிருந்தாலும்

உன்னைப்பற்றியே நினைப்பேன்;

மடல் உனக்கு எழுதி எழுதி

அழுது வடியும் என் எழுதுக்கோல்!

திரும்ப திரும்ப ஒலிக்கும்

என் வரிக்கும் வலிக்கும்;

ஊமையான மையிற்கும் மயக்கம்;

சுற்றிச் சுற்றிச் சுழலும் என்

ஒரே கேள்விற்கு;

உன் விடுமுறை எப்போது!

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..

செய்தித் தாள்களை நாம் புரட்டுபோது, செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய் குறைவு; எடைக்கு மட்டுமே விலை என்றெல்லாம் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களை நாம் பார்க்கலாம். தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கைகளால் தூக்கி எடைபோடும் தராசு இருந்தது. அதில் சிலர் 'கை' வித்தை காட்டி எடையை கூட்டியும், குறைத்தும் காண்பிப்பார்கள். இன்னும் சிலர் தராசின் ஒரு தட்டின் கீழ் புளியை ஒட்டி வைத்து, மக்கள் வயிற்றில் புளியை கரைப்பார்கள். நாகரிக வளர்ச்சியில், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் எல்லா கடைகளையும் ஆக்கிரமித்தது. இதில் ஓரளவு எடை சரியாக மக்களுக்கு கிடைத்தது. விடுவார்களா போலிகள்..? இதிலும் புகுந்து விட்டார்கள்.

இந்நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் போலி தராசு தாயாரித்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் தயாரித்துள்ள எலெக்ட்ரானிக் தராசுகளில், ஒரு வகை கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இது, எடைகளை அதிகமாகவோ குறைவாகவோ காட்டும். ஒரு கிலோ எடையை 10 சதவீதம் அதிகமாகவும், குறைவாகவும் காட்டும் வகையில் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையான எடை கொண்ட தராசு ரூ.10 ஆயிரத்திற்கும், தில்லுமுல்லு செய்ய உதவும் தராசை ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து உள்ளனர்.


இந்த வகை எடை எந்திரங்களில் 4 பட்டன்கள் உள்ளன. ஒரு பட்டனை அழுத்தி எடை போட்டால், சரியான எடையை காட்டும். அடுத்த பட்டனை அழுத்தி எடை போட்டால் 50 சதவீத எடையை குறைத்து காட்டும். 3வது பட்டனை அழுத்தினால் 50 சதவீத எடையை அதிகரித்து காட்டும். 4வது பட்டன் வேறு ஒரு எடையை காட்டும். இவ்வாறு பலவிதமான எடைகளை காட்டும் வகையில் எடை எந்திரங்களை தயாரித்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகள், ரேஷன் கடைகள், பழைய இரும்பு கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவற்றுக்கு கூடுதல் விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இந்த போலி தராசு நகைக்கடை வரை சென்றுள்ளதை பார்க்கும் போது, ரேஷன் பொருள் போல, நாம் வாங்கிய நகையும் எடை குறைவாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.

ஏனெனில் நாம் வாங்கிய நகைகளை சிறிது காலம் கழித்து விற்பதற்காக சென்றால், நகைக்கடைக்காரர் நமது நகையின் எடையை சொல்லும் போது, நாம் வாங்கியபோது உள்ள எடையை விட குறைவாக சொல்வார். அப்போது நாம் 'தேய்மானம்' ஆகியிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால் நாம் வாங்கும்போதே எடை குறைய வாய்ப்புண்டு என்ற உண்மையை இந்த போலி தராசுகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

அதிகாரிகள் போலி தராசு தயாரித்தவர்களை கைது செய்ததோடு நின்று விடாமல், அவர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்து, அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

ஒரு திரைப்படத்தில் பட்டுச்சேலை வாங்கசெல்லும் கதாநாயகன், ஒரு வாளியில் தண்ணீரோடும், தீப்பெட்டியோடும் செல்வார். அதுபோல ரேஷன்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை என்று இப்போது எங்கே சென்றாலும் நாமும் ஒரு தராசுடன்தான் செல்லவேண்டும் போல் தெரிகிறது.

தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் போலி. ஆண்டவன்தான் இந்த போலிகளிடமிருந்து மக்களை காக்கமுடியும்.

--

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை-ஹஜ்ஜத்துல் விதா

அழைப்புப் பணிகள் நிறைவுற்றன.இறைத்தூது உலகின் முன்வைக்கப்பட்டது.

“லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்” என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது.

இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

“அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.” நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான்.

அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள்.
இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக ‘துல் ஹுலைஃபா’ வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, “அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, “ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்” என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ளுஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்துக் கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கள் கரங்களால் கஸ்தூரி கலந்த ஒரு நறுமணத்தையும் ‘தரீரா’ என்ற நறுமணத்தையும் நபி (ஸல்) அவர்களின் உடலிலும் தலையிலும் தடவினார்கள். அந்த நறுமணத்தின் மினுமினுப்பு நபி (ஸல்) அவர்களின் தலை வகிடுகளிலும் தாடியிலும் காணப்பட்டது. அந்த நறுமணத்தை அவர்கள் அகற்றவில்லை. பின்னர் வேறொரு கைலியையும் போர்வையினையும் அணிந்து கொண்டு ளுஹ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். தொழுகையை முடித்து வெளியேறி, கஸ்வா ஒட்டகத்தின் மீதேறி, மீண்டும் தல்பியா கூறினார்கள். பாலைவனங்களில் செல்லும் இடமெல்லாம் தல்பியா கூறினார்கள். இவ்வாறு கடந்து வந்து, மக்கா அருகில் ‘தூத்துவா’ என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கு ஸுப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10, துல்ஹஜ் பிறை 4, ஞாம்று காலை நேரமாகும். ஆக, பயணத்தில் நபி (ஸல்) எட்டு நாட்கள் கழித்தார்கள். சங்கைமிக்க கஅபா வந்தபோது தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள்.

தவாஃபையும் ஸயீயையும் முடித்துக் கொண்டு கஅபாவிலிருந்து புறப்பட்டு மக்காவின் மேட்டுப் பகுதியிலுள்ள ‘ஹஜுன்’ என்ற இடத்தில் தங்கினார்கள். தவாப் செய்வதற்காக மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கஅபா வரவில்லை. பிறை 8 வரை அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தன்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள்.

‘தர்வியா’ என்றழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 8ல் நபி (ஸல்) மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ‘நமிரா’ என்ற இடத்தில் அவர்களுக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்தில் சூரியன் நடுப்பகலை தாண்டும் வரை தாமதித்திருந்தார்கள். நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தனது கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்தச் செய்து அதில் வாகனித்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் (1,24,000) அல்லது ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம் (1,44,000) முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா உரை

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.
ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல.
தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம்.
தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும்.
முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.
அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை.
உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள்.
உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள்.
ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள்.
மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள்.
உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்.
உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்.
எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறியபோது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)

என்ற வசனம் இறங்கியது.


அர்ரஹீக்குல் மக்தூம் -ரஹீக் என்ற நூலிலிருந்து

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்




- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.
அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது.
ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

- ஆதி, கீற்று.காம்

பாபரை பின்பற்றுவோம் வாருங்கள்


கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.


ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
source : நான் தான் பாபரி பேசுகின்றேன் -ஆடியோ இலக்கிய சோலை வெளியீடு vinavu , arulgreen