அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, October 20, 2009

தாய்ப்பாசம்


ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்...

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்.

*

அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா..?

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்....

நீ
தூக்கவே
முடியாதளவுக்கு.

*

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்...

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்...

நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது.

*

எல்லாம் சேலைதான்
எனினும்...

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது.

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட...

நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்

No comments: