அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 29, 2011

ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி வழக்கு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் தர உத்தரவு

மதுரை, ஜூன் 28: ஒட்டன்சத்திரத்தில் ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விஜயசங்கரன் தாக்கல் செய்த மனு:
 ஒட்டன்சத்திரத்தில் கிழக்கில் இருந்து மேற்காக ரயில் பாதை அமைந்துள்ளது. இப்பாதை மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தது. இதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றி வருகின்றனர். நகரில் பஸ் நிலையம், மருத்துவமனை, மெயின் ரோடு ஆகியவை ரயில் பாதைக்கு வடக்குப்புறம் அமைந்துள்ளது.
 தெற்குப் பகுதியில் சாஸ்தா நகர், விஸ்வநாதா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. நகரப்பகுதி மேலும் விரிவடைந்து வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர்.
 இதனால், ஏராளமானோர் ரயில் பாதையைக் கடந்து வடபகுதிக்கு தினசரி வரவேண்டி உள்ளது. எனவே, ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்குமாறு தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அளித்தோம்.
 அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் முன்பு, சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 இதை விசாரித்த நீதிபதிகள் கே.சுகுணா, ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

No comments: