அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, December 24, 2009

குழந்தை அழுது கொண்டிருக்கிறது

[child-tears.jpg]எல்லோரும் கலைந்துவிட்ட
மைதானத்தில்
குழந்தை
அழுது கொண்டிருக்கிறது

தேம்பலுக்கான காரணம் அதனிடமில்லை
விசும்பலுக்கான பொருளும் இல்லை
என்றாலும்
அழுது கொண்டிருக்கிறது

அது
கருணையை எதிர்பார்க்கவில்லை
நண்பர்களை விரும்பவில்லை
ரொட்டித் துண்டின் பசியாற்றலை நினைக்கவில்லை
ஆனால்
அழுது கொண்டிருக்கிறது

குழந்தையின் கண்ணீர் துக்கரமானது
மட்டுமில்லை
பரிசுத்தமானதும்.

குழந்தையின் துக்கம் கசியச்செய்வது
மட்டுமில்லை
தனிமையானதும்.

அவை
பதில்களற்ற வினாக்கள்
மட்டுமில்லை
அவிழாத புதிர்களும்.

சிறு மழை
இந்த
அழுகையை நிறுத்தலாம்
ஒரு
குருவி கவனத்தை திசை திருப்பலாம்
மீறி
அழுது கொண்டிருக்கிறது

கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த.

--பேசலாம்-வா.மணிகண்டன் --

No comments: