அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 29, 2011

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல..


புதுடில்லி :"ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல்' என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


இறுதியில், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. எங்களை பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும்.ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.


ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதை சட்ட விரோதமாகக் கருத முடியாது.பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே.இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

No comments: