அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 7, 2009

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 17:14 [IST]

Israel-Gaza attack
காஸா - இஸ்ரேல் எல்லை: காஸா பகுதியில் 11வது நாளாக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 550 பேர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

காஸாவில் புகுந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கு மாவட்டங்களில் உள்ள உயர்ந்த கட்டடங்களைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். அங்கு வசிப்போரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். கண்ணில் படும் ஹமாஸ் அமைப்பினரை சரமாரியாக சுட்டுத் தள்ளி வருகின்றனர்.

இதற்கிடையே, இஸ்ரேலிய டாங்குகள் சுட்டதில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இது எதிர்பாராமல் நேர்ந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஹமாஸ் தரப்பினர் சுட்டு ஐந்து இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இஸ்ரேல் பகுதியில் நான்கு ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடுத்தனர். இஸ்ரேலின் வான் மற்றும் தரை வழித் தாக்குதலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் கடந்த சனிக்கிழமை தரை வழித் தாக்குதலை நடத்த ஆரம்பித்த பின்னர் இதுவரை 130 ஹமாஸ் அமைப்பினரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால் திங்கள்கிழமை நடந்த தாக்குதலில் 12 சிறார்கள் உள்பட ஏராளமான அப்பாவி பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லக் கூடிய குடிநீர்க் குழாய்கள், எரிபொருள் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை அங்கு போக முடியாத நிலை உள்ளது.

தெற்கு காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் 12க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேசமயம், இஸ்ரேலை நோக்கி 25க்கும் மேற்பட்ட ராக்கெட்களை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் ஒன்று அசோத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் விழுந்து அதை தரைமட்டமாக்கியது. ஆனால் அதில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை.

நேற்று இரவு முழுவதும் இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நீடித்தது.

ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவ்னி கூறுகையில், இந்த பிராந்தியத்தில் தற்போது இருந்து வரும் நிலையை மாற்றி அமைப்போம். பிற நாடுகள் தீவிரவாதிகளை ஒழிக்க உதவிகள் செய்யும். ஆனால் நாங்கள் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. ஆயுதங்களையும் கோரவில்லை. மாறாக, இந்த சண்டையில் தலையிடாதீர்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். எங்களை தாக்க அனுமதியுங்கள் என்பதே எங்களது ஒரே கோரிக்கை. எங்களது இலக்கை எட்டும் வரை சண்டையிட அனுமதியுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் தலைவர் மஹமூத் ஜஹாரின் பதிவு செய்யப்பட்ட பேச்சை ஹமாஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

அதில், இஸ்ரேலிய எதிரிகள் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போவதற்கான அத்தியாத்தை தொடங்கியுள்ளனர். காஸா முழுவதையும் அவர்கள் சல்லடையாக துளைத்து விட்டனர். குழந்தைகள், மருத்துவமனைகளை அவர்கள் தாக்கியுள்ளனர். மசூதிகளை அழித்து விட்டனர். அப்படிச் செய்ததன் மூலம் அவர்களை அதே வழியில் நாங்கள் தாக்குவதையும் நியாயப்படுத்தியுள்ளனர் என்றார்.

அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்குவதை இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் கூறுகையில், வீடுகளில் ராக்கெட்களை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். லாஞ்சர்களும், தீவிரவாதிகளும் மக்களுடன் மக்களாக பதுங்கியுள்ளனர். எனவேதான் அனைவரையம் குறி வைத்துத் தாக்குகிறோம் என்று காரணம் சொல்கிறது இஸ்ரேல்.

தற்போது வடக்கு காஸாவில் கடும் சண்டை நடந்து வருகிறது. டேங்குகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆர்ட்டில்லரி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது. அப்பகுதியே கரும் புகை மூட்டமாக காணப்படுகிறது.

காஸா நகருக்குள் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை. நகரமே சுடுகாடாக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரையும், அவர்களை ஆதரிப்போரையும் எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மூலம் அவ்வப்போது போட்டுச் செல்கிறது.

அந்த துண்டுப் பிரசுரங்களில், இஸ்ரேல் ராணுவத்தின் பலனை தற்போது ஹமாஸ் அனுபவித்து வருகிறது. இதை விட மோசமான வழிகள் எங்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ஹமாஸை அழிப்போம். எங்களைத் தாக்கியதன் வலியை அவர்கள் உணர்வார்கள். உங்களது பாதுகாப்புக்காக சொல்கிறோம், இங்கிருந்து போய் விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் காஸா நகரை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் உள்ளனர். காரணம் எல்லாப் பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் எங்கும் போக முடியாத அவல நிலை.

இஸ்ரேலின் தொடர்ந்து வரும் தாக்குதலால் மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை இருப்பதாக ஐ.நா. மனித உரிமை விவகார பிரிவு ஒருங்கிணைப்பாளர் மாக்ஸ்வெல் கேலார்ட் கூறியுள்ளார். ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குழந்தைகள் பட்டினியில் தவிக்கிறார்கள். கடும் குளிரில் வாடுகிறார்கள். மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகுந்த பய உணர்வில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
http://thatstamil. oneindia. in/news/2009/ 01/06/world- death-toll- mounts-in- gaza-offensive. html

No comments: