அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, October 28, 2010

போலியோவை ஒழிக்கும் புதிய மருந்து

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகின்றது
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகின்றது

போலியோ கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள புதிய மருந்து ஒன்று போலியோ பாதிப்பை கிட்டதட்ட 90 சதவீதம் குறைத்துள்ளது. மருத்துவ சஞ்சிகையான ‘தி லான்செட்’ இல் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில், தற்போது பிரபலமாக இருக்கின்ற மருந்தை விட இந்த புதிய மருந்து குழந்தைகளிடம் போலியோவை தடுப்பதில் சிறப்பாக செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 1988 போலியாவால் பீடிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையானது 125 ஆக இருந்தது, இது 2005 ஆம் ஆண்டில் நான்காக குறைந்தது. இதற்கு காரணம் கூட்டம் கூட்டமாக நடத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் முகாம்கள் என்று கூறப்படுகிறது.

போலியோ டைப் 1, டைப் 2, டைப் 3 என்ற மூன்று வகையான கிருமிகளால் ஏற்படுகிறது. பொதுவாக தடுப்பு மருந்துகள் இந்த மூன்று கிருமிகளுக்கு எதிராக அல்லது ஏதாவது ஒரு கிருமிக்கு எதிராக செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த புதிய மருந்தானது, தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் இரண்டு வகையான கிருமியை மட்டுமே குறிவைத்து செயற்படுகின்றது.

இந்தியாவில் சுமார் 800 குழந்தைகளிடம் நடைபெற்ற ஆய்வில், இந்த புதிய மருந்து ஏற்கனவே இருக்கும் மருந்தை விட 30 சதவீதம் மிகவும் சிறப்பாக செயற்படுவது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த மருந்து ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியாவில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இந்தியாவில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 90 சதவீதம் குறைந்துள்ளது. நைஜீரியாவில் 95 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இதற்கு காரணம் போலியோ மருந்து குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் புதிய மருந்து என இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து மூலமாக ஒட்டு மொத்தமாக போலியோவை உலகத்தில் இருந்து அகற்ற முடியும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.

No comments: