அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, September 25, 2009

சிவசேனா-பாஜக கூட்டணியில் கலகம்!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இரு கட்சிகளும் வெளியிட்டதைத் தொடர்ந்து பாஜக-சிவசேனா கூட்டணியிடையே கலகம் வலுத்துள்ளது. மராத்வாலா மாவட்டத்தில் இவ்விரு கட்சிகளுக்கிடையே மிக அதிக திருப்தியின்மை புகைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லாத்தூர் தொகுதியில் டிக்கட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவசேனா முன்னாள் எம்.பி பிரதீப் ஜெய்ஸ்வால் மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சிவாஜி பாட்டீல் ஆகியோர் கட்சிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். இவர்களின் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். இப்பகுதியில் இவ்விருவருக்கும் அதிகபட்ச ஆதரவாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று நந்தேட், பீத், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களிலும் பாஜக-சிவசேனா கட்சியினுள் அணிகளுக்கு இடையே வேட்பாளர் தேர்வு மீது திருப்தியின்மை நிலவுகிறது.

ஔரங்காபாத் செண்ட்ரலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஜய்ஸ்வால் அறிவிப்பு செய்துள்ளார். அவர் இன்று(வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார்.கட்சி வேட்பாளர் பட்டியல் தயார் செய்ததன் பின்னணியில் பணம் விளையாடியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சிவசேனா எக்ஸ்கியூட்டிவ் பிரசிடண்ட் உத்தவ்தாக்கரேயின் நண்பர் மிலிந்த் நர்வேக்கர் கட்சியைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவசேனா-பாஜக கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதன் பின்னர் மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களிலும் அணிகளிடையே அதிருப்தியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பர்பானி மாவட்டத்திலுள்ள பதாரி தொகுதியில் சிவசேனா வேட்பாளர் மீரா ரஞ்செவுக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர் மோகன்பாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீராவின் கணவர் மானபங்க குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் அவருக்காக ஓட்டு கேட்பது இயலாத காரியம் என்பது மோகனின் நிலைபாடு.

பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட ஹிங்கோலி தொகுதியில் சிவசேனாவின் திங்கர் தேஷ்முக் வேட்புமனு தாக்கல் செய்தது கூட்டணிக்கு மற்றொரு தலைவேதனையாக மாறியுள்ளது. நந்தேட் மாவட்டத்திலுள்ள லோஹ தொகுதியில் ஒரு முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏவுக்கு சீட் மறுக்கப்பட்டதை எதிர்த்து அவரும் அவரின் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பாஜக முன்னாள் எம்.பி அன்னா ஜோஷி கட்சியிலிருந்து விலகி என்.சி.பி சார்பாக போட்டியிட தீர்மானித்துள்ளார். எம்.பி ஆவதற்கு முன்னர் இரு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்த ஜோஷி கோருட் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். சிவசேனா-பாஜக கூட்டணி இத்தொகுதியில் சந்திரகாந்த் மோகதாவை வேட்பாளராக அறிவித்துள்ளது. கொள்கை அடிப்படையில் நேர் எதிர் துருவத்தில் நிற்கும் ஒரு கட்சிக்கு ஜோஷி மாறுவது பாஜகவுக்கு கட்சி தொண்டர்களிடையே மாவட்ட அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் சீட் மறுக்கப்பட்டதால் ஜோஷி அதிருப்தியில் இருந்ததாக பாஜக தெரிவித்தது. இவர் மகாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: