அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 6, 2011

தேர்தல் கமிசனின் ஆச்சரியமான செயல்பாடு!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசி அறிவித்தார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 13 அன்றும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், மேற்கு வங்கத்துக்கு மே 18 ,23 ,27 , மே 3 , 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு மொத்தமாக 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சேர்த்து மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுக்காக தேர்தல் முடிந்து 1 மாதம் காத்து இருக்க வேண்டும். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மாத காலம் இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. எதற்காக இந்த ஒரு மாத கால இடைவெளி என்று தெரிய வில்லை. கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தல் மே 8 அன்று தேர்தல் நடத்தப் பட்டு மூன்று நாட்கள் இடைவெளியில் மே 11 அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்திலும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 17 முதல் மே 8 வரை 5 கட்டங்களாக நடத்தப் பட்டு மே 11 அன்று மூன்று நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அது போலவே இந்த முறையும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தலைத் தாமதமாக நடத்தி வாக்கு எண்ணிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் அல்லது மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் தேர்தல் முடிவை அறிவிக்கலாம். இரண்டையும் தவிர்த்து விட்டு அரசியல் கட்சிகளின் நலனுக்காக தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவெடுத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

மேலும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் அல்லது ஒரு வார கால அளவிற்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது வாக்கு இயந்திரங்களை இரவு பகலாக பாதுகாத்து வரும் காவல்துறையினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் தவறுகள் நடைபெறவும் பிரச்சனைகள் ஏற்படவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை தேர்ந்தெடுக்கப் பட மே 16 வரை கால அவகாசம் உள்ள நிலையில் ஏப்ரல் 13 அன்றே தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம்முள் எழவே செய்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப் படாத சுதந்திரமான ஒரு அமைப்பு. டி.என் சேஷன் போன்ற சிலர் தைரியமாக சில முடிவுகளை எடுத்த போதும் ஆளும் கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குச் சில ஆணையர்கள் இப்பொறுப்பை வகித்துள்ளனர் என்பதும் நமக்குத் தெரியாததல்ல. 4 மாநில மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் அறிவிப்பிலும் தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இதற்கிடையில், ஏப்ரல் 13 தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறுதியாக தமிழக முதல்வர் கருணாநிதியும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த எதிர்ப்புக்குப் பாஜக, "சித்திரை தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்துக்கு இத்தேதி அறிவிப்பு தடையாக இருக்கும்" என்று காரணம் தெரிவித்துள்ளது. பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வுகள் இதே காலகட்டங்களில் நடைபெறும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதே போன்று தேர்தலுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர் என்பதால், அதுவும் பள்ளித்தேர்வுகளுக்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழக முதல்வரும் தமிழகத் தேர்தல் தேதியை அறிவித்ததில் இவ்வளவு அவசரம் ஏன்? என்று வினவியுள்ளார். ஆனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்து விட்டார்.

ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தல் நடத்தி 15 அல்லது 16ஆம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிட்டால், அந்த முடிவுகள் மற்ற மாநிலத்தின் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதினால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த உத்தேசித்துள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலை இறுதிக்கட்டமாக நடத்தி இருக்கலாம். அதைவிடுத்து, தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள 1 மாதம் காத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றத்தையே தருகிறது.

எது எப்படியோ தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தேர்தல் அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப் பட போவது மாணவர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்னும் ஒன்றரை மாத காலம் கூட இல்லாத நிலையில் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 13 க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட வேண்டும். தமிழகத்தில் அமைதியான முறையில் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ பெரிதும் சிரமத்தைத் தராமல் இத் தேர்தல் நடத்தி முடிக்கப் படுவதோடு, ஒரு மாதகாலத்துக்கு ஓட்டு இயந்திரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்

திக மூலம் காங்கிரஸுக்கு மீண்டும் எச்சரிக்கை!

"திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் நாளுக்கு நாள் காங்கிரஸ் அதிக நெருக்கடிகளைத் திமுகவுக்குக் கொடுத்துவருகிறது. இறுதியாக 51 லிருந்து 60 தொகுதிகள் வரை இறங்கி வந்த கருணாநிதி, இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், நேற்றிரவு "63 தொகுதிகள் மற்றும் கேட்கும் தொகுதிகள்" என்ற புதிய கோரிக்கையைக் காங்கிரஸ் வைத்தது.

இதில் அதிக எரிச்சலடைந்த முதல்வர் கருணாநிதி, "இது முறைதானா?" என்று காட்டமான கேள்வியுடன் இன்று அறிக்கை வெளியிட்டார். அத்தோடு, இன்று கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், "இன்றைய உயர் நிலைக்குழு கூட்டத்தில் காங்கிரஸைக் கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவெடுக்கவேண்டும்" என தி.க தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, "தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்குத் திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசைத் தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்குச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலைச் சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும்" என்று கூறினார்.

இதற்கு முன்னரும் ஒருமுறை வீரமணி இத்தகையதொரு அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் சம்மதமின்றி தி.க தலைவர் கி.வீரமணி இது போன்ற அரசியல் விஷயங்களைப் பேசுவதில்லை என்றொரு கருத்து நிலவும் நிலையில், அவருடைய இப்போதைய கருத்து முதல்வர் கருணாநிதியே வீரமணி மூலமாக காங்கிரசுக்கு இறுதி எச்சரிக்கை கொடுப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முந்தைய வீரமணியின் அறிக்கையில், "இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையைக் காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

"இன்று மாலை கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில், காங்கிரஸை வெளியேற்றும் முடிவை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்" என்று மறைமுகமாக திமுக காங்கிரஸுக்குக் கூறும் இறுதி எச்சரிக்கையாகவே இப்போதைய வீரமணியின் அறிக்கையையும் எடுத்துக்கொள்ள வழியிருக்கிறது.

ஆனால்,

நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையாதலால், திமுக கூட்டணியினை விட்டுக் காங்கிரஸை வெளியேற்ற திமுகவும் திமுகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடும் விஷப்பரீட்சை முடிவைக் காங்கிரஸும் எடுக்காது என்பதே இப்போதைய நிலை. என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் 24 மணி நேரத்துக்குள் தெளிவாகி விடும்

இலை' தேடும் 'சிறுத்தை'!

தி மு க வின் தோழமைக் கட்சியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதிலிருந்து விடுபட்டு அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வர இருக்கும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்கிறது என்று தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் இதே அணியில் இருக்குமா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜயகாந்த்தின் தே மு தி க அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுக்குப் பின்னர் சிறுத்தை கட்சி இம்முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் திமுக அணியில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு இணையாகத் தங்களுக்கும் மரியாதையான எண்ணிக்கையில் திமுக அணியில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது . இந்த முறை இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறும் அளவுக்கு கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியின் விருப்பக் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2006 ச.ம. தேர்தலில் அதிமுக அணியில் இருந்து 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பின்னர் அந்த அணியில் இருந்து வெளியேறி திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தது.அதன்பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

.காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல குறைந்தது 15 தொகுதிகளைத் தி.மு.க.வால் தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதுவுமில்லாமல், பா.ம.க.வுடன் சேர்ந்து திமுக அணியில் தேர்தலைச் சந்தித்தால், தங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய லாபம் எதுவும் இருக்காது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களின் பரவலான கருத்தாக உள்ளது.

மேலும் ஆளும் திமுக கூட்டணியில் இருந்தும், தங்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சில முக்கிய நியமனப் பதவிகளுக்கு திருமாவளவனின் பரிந்துரையை ஏற்காததும் தங்களின் அதிருப்திக்குக் காரணம் என அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

மேலும், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் நிலைப்பாடு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிப்பதிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தயக்கம் காணப்படுகிறது.

1998-ல் ராஜீவ் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினராக இருந்த போதும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் அமைச்சர் பதவியை அதிமுக தலைமை வாங்கிக் கொடுத்ததுபோல இந்த முறை தொல். திருமாவளவனுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இணையமைச்சர் பதவி கூட திமுக வாங்கித் தரவில்லை என்கிற மனக்குறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது.

பா ம க, வி சி இவ்விரு காட்சிகளின் தொண்டர்கள் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அப்படி பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இருந்து செயல்படுவதாக இருந்தால், இரண்டு கட்சியின் வாக்கு வங்கியிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, அது அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு சாதகமாகி விடலாம் என்று கணிக்கிறார்கள். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படுமென்று அந்தக் கட்சித் தொண்டர்களே பயப்படுவதாகத் தெரிகிறது.

"திமுகவில் எங்களுக்கு கௌரவமான இடங்கள் தரப்படாத நிலை ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? தேமுதிகவும் இணைந்து விட்டநிலையில் அதிமுக அணி பலமடைந்து இருக்கிறது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அந்த அணியில் வெற்றி உறுதி பெறும்போது, இங்கே திமுக அணியில் குறைந்த இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?எங்களுக்கு 15 இடங்கள் தருவதால் திமுக அணிதான் பலப்படுமே தவிர அதனால் நாங்கள் அடையும் பலன், குறைந்த இடங்களில் அதிமுக அணியில் போட்டியிடுவதால் கிடைக்கும் வெற்றிக்குத்தான் சமமாக இருக்கும்' என்கிறார் தொல்.திருமாவளவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி ஒருவர்.

அதெல்லாம் சரி, பல தொகுதி பங்கீடுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிமுக அணியில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்விக்கு, தங்களுக்கு "தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற சமிக்ஞை வந்திருப்பதாக வி.சி யின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்

விமானங்கள் நடு வானில் மோதல்!

கொழும்பில் இன்று நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்காக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்தன.

இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட கேபிர் ரக விமானங்கள், இலங்கை விமானப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்படையின், 60ம் ஆண்டு விழாவையொட்டி, கொழும்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாகச நிகழ்ச்சிக்காக, கேபிர் ரக விமானங்கள், நடுவானில் சீறி பாய்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தன. திடீரென, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்து கீழே விழுந்தன. இவ்விபத்தில், விமானிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. காம்பகா மாவட்டத்தின் வாரனா என்ற இடத்தில், ஒரு விமானத்தின் எரிந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு விமானத்தின் சிதைந்த பாகங்கள், சில கி. மீ., தள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பலஸ்தீன் மஸ்ஜிதைத் தாக்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள்.

கடந்த வியாழக்கிழமை (03.03.2011) அதிகாலையில் தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் அல் கலீல் பிரதேசத்தில் உள்ள நபி யூனுஸ் மஸ்ஜிதைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் தல்மூதிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டதோடு, மஸ்ஜிதைக் கற்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கினர். அத்துடன், உள்ளூர் பலஸ்தீனர்களைப் புண்படுத்தும் வகையில் உரத்த குரலில் திட்டித் தீர்த்துத் தம்மை எதிர்க்க வருமாறு சவால் விடுத்துள்ளனர். எனினும், அவர்கள் தம்மை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முனைவதை உணர்ந்தவர்களாய் உள்ளூர்வாசிகள் பொறுமை காத்துள்ளனர்.

யூதச் சடங்குகள் யாவும் சுமுகமாக நிறைவேற்றப்படும்வரை நபி யூனுஸ் மஸ்ஜித் அமைந்துள்ள நகரத்தின் பிரதான நுழைவாயில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பல மணிநேரம் மூடப்பட்டு பலத்த காவல் போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், அல் கலீல் நகரத்தின் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடையொன்றை முற்றுகையிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் உரிமையாளர்களான இரு பலஸ்தீன் சகோதரர்களைக் கைதுசெய்துள்ளதோடு, அவர்களுக்குச் சொந்தமான கார் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.

இந்த வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும். ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும். ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.

ஆடாதோடை இலை - 2, வெற்றிலை - 2, மிளகு - 5, சுக்கு - 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.

இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.

காயவைத்த ஆடாதோடையிலை - 5, அதிமதுரம்-2 கிராம், திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி - 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும். கோழை வெளியேறும். இரைப்பு நீங்கும்.

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும். இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.