அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 10, 2012

திசை மாறிப் போகும் கல்வி


money education
‘படிப்பது- அறிவை பெறுவதற்கும், வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. பணம் சம்பாதிப்பதே கல்வி கற்பதன் முக்கிய நோக்கமாக ஆகிவிட்டது. இதுதான் இன்றைய மாணவ சமூகத்தின் மூளையில் கட்டாயமாக பதிய வைக்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் மட்டுமல்ல, மாறி மாறி இந்நாட்டை ஆளும் அரசுகளும் அதற்கு காரணமாகும்.

கல்வி நிலையங்கள் எல்லாம் வர்த்தக மையங்களாகி விட்டன. மாணவர்கள் எல்லாம் அதன் தயாரிப்புகளாக மாறி வருகின்றார்கள். பெருந்தொகையை பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து ஃப்ரொபஸனல் கல்லூரிகளுக்கு அனுமதியைப் பெறுவது நாட்டை சீர்திருத்த அல்ல என்பதை பகிரங்கமாகவே கல்வி குத்தகை முதலாளிகள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த கல்வி வியாபாரத்தில் ஆட்சியாளர்கள் பார்வையாளர்களா? பங்குதாரர்களா? என்பது குறித்து தனியாக ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
முன்பு பணம் படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய மதிப்பெண்களை பெறாவிட்டாலும் ஃப்ரொபஸனல் கல்லூரிகளில் பணத்தை கொடுத்தாவது சீட்டைப் பெற்றுவிடுவார்கள். ஆனால், இன்று பெரும்பாலான வங்கிகள் வியாபார தந்திரத்துடன் கல்விக் கடன் பெயரால் உதவி அளிக்க முன்வந்ததை தொடர்ந்து காசு கொடுத்து பிள்ளைகளை உயர் கல்விக்கு அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொருளாதார ரீதியாக பிற்பட்ட மாணவர்கள் பலர் உயர் பணிகளை பெற இது உதவுகிறது என்பது நல்லதுதான். ஆனால், பொருளாதார சுமையினால் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்பது மற்றொரு உண்மையாகும். கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஃப்ரொபஸனல் கல்லூரிகளில் சேர்க்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் உயர் வேலையும், உன்னதமான வசதிகளையும் பெற்று தங்களது பொருளாதார சுமையை நீக்குவார்கள் என்று நம்புவதோ, கனவு  காண்பதோ தவறில்லை. ஆனால், பணம் சம்பாதிப்பதற்கான ஒரே மார்க்கம் கல்வி என்ற சிந்தனை அறிந்தோ, அறியாமலோ மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது என்பதை பெற்றோர்களும் புரிந்துகொள்வதில்லை.
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள் இந்தியாவில் சாதாரண மக்களின் வாழ்கையையும் தடுமாற வைத்துள்ளது என்பது மிகையான கூற்று அல்ல. கடன் வாங்காமல் சம்பாதித்ததை வைத்து மன நிம்மதியுடன் வாழலாம் என்பது நமது மூதாதையர்களின் பாணியாக இருந்தது. ஆனால், கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சமூகத்தின் சித்தாந்தமாக மாறி உள்ளது.
வங்கியில் கடன் வாங்கி கனவு மாளிகைகளை கட்டுவதும், ஆடம்பர கார்களை வாங்குவதும் பின்னர் பணத்தை திரும்ப அடைக்க இயலாமல் கூட்டாக தற்கொலைச் செய்பவர்களின் மனோநிலையை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
வாழ்க்கையை அனுபவிக்கும் வேகத்தில் பல பெற்றோர்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவோ, அவர்களை நேரான வழியில் நடத்தவோ இயலவில்லை. வெளிநாட்டில் பணியாற்றும் பலர் தாயகத்தில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைக்கும் அதிகமான பணத்தை அனுப்பிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். எழுத்தறிவை கற்கும் முன்பே மொபைல் ஃபோனையும், கம்ப்யூட்டரை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அவர்கள் வழி தவறுவதற்கும் காரணமாகின்றார்கள். நவீன மொபைல் ஃபோன்களுக்காகவும், ஆடம்பர பொருட்களுக்காகவும் தவறான வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுக்க துணியும்போது ஏற்படும் அவமானத்தின் கறையை பெற்றோர்கள் எங்கே சென்று கழுவ முடியும்?
மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக ஆதரித்து, அவர்களால் அனுபவித்து வெறுத்து ஒதுக்கியதை எல்லாம் தங்களது வாழ்க்கைப் பாணியாக மாற்றுபவர்கள் தாம் இந்தியாவின் பெரும்பலான இளைய சமூகத்தினர்.
மதுவும், போதைப் பொருட்களும் ஃபேசனின் அடையாளமாக மாறின. டேட்டிங்கும், லிவிங் டுகெதரும் இன்றைய இந்திய பெற்றோர்களுக்கு புரியாத வார்த்தைகள் அல்ல. பொருளாதார நெருக்கடிக்கு முன்பு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடைப்பிடித்த வாழ்க்கை முறைகளைத்தாம் இந்திய சமூகம் முன்மாதிரியாக பின்பற்றுகிறது.
இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… என ஆதங்கப்படும் உச்சநீதிமன்றம்தான் முன்பு பாலியல் கொடுமையை தடுக்க விபச்சாரத்தை ஏன் சட்டரீதியாக அனுமதிக்க கூடாது என கேள்வி எழுப்பியது. இவ்வாறு நீதிமன்றம் கூட ஒரு தீமையை தடுக்க இன்னொரு தீமையை தீர்வாக முன்வைக்கும் முட்டாள் தனமும் இந்நாட்டில் அரங்கேறுவதை காண்கிறோம்.
பணம் சம்பாதித்தும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாத பலரும் நம்மில் உள்ளனர். வாழ்க்கை வசதிகள் ஏராளம் இருந்தும் அவர்களால் அவற்றை அனுபவிக்க முடியவில்லை. வாழ்க்கையில் நிம்மதியுமில்லை. மன அழுத்தமும், பதட்டமும் அவர்களை விடாமல் துரத்துகின்றன. இரவை பகலாக மாற்றித்தான் பல ஐ.டி ஃப்ரொபஸனல்களும் பணியாற்றுகின்றார்கள். கட்டுப்பாடுகளும், ஒழுங்கும் இல்லாத வாழ்க்கை முறையினால் இளம் வயதிலேயே பல நோய்களால் பாதிக்கப்பட்டோர் உண்டு.
பணத்திற்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக பணமா? என வாழ்க்கையின் தடமே தடுமாறிப்போய் நிற்கிறது. இதுதான் நமது பெரும்பாலான இளைய சமூகத்தினரின் இன்றைய நிலை!
சொந்த வாழ்க்கையில் சுத்தமில்லாத அரசியல்வாதிகளும், நடிகர்களும்தான் இன்றைய சமூகத்தின் ரோல் மாடல்களாக உள்ளனர். வன்முறையும், ஆபாசமும் இன்றைய திரைப்படங்களின் முக்கிய முதலீடாகும். சமூக விழுமியங்கள் குறித்து எந்த கவலையும் பெரும்பாலோருக்கு இல்லை. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி வருகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரம் மட்டும் காரணி அல்ல.
நல்லொழுக்கமும், நற்சிந்தனையும் கொண்டதொரு சமூகமே நாகரீகமான ஒரு தேசத்தின் அடித்தளம் மட்டுமல்ல அடையாளமும் கூட அதனை உருவாக்க நமது கல்விமுறையால் இயலாது போனால் அதைவிட துரதிர்ஷ்டம் வேறு உண்டா?
Thanks.
அ.செய்யது அலீ.

No comments: