அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, February 19, 2009

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும் ஈரோட்டில் கமுதி பஷீர் பேச்

ஈரோடு, பிப்.13-
இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கு மத்திய அரசும் - தமிழக அரசும் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியுடன் துணை நிற்கும் என்று தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் நடைபெற்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் மாபெரும் பொதுக் கூட் டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது-
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இன்று நாடு முழுவதும் பேரணியும் - பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தான் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இலங்கை தமிழர்களின் துயர் துடைத்திட மனிதநேயத்தோடும் - தமிழ் இன உணர்வோடும் எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் இலங்கை தமிழர் பிரச்சினை மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிங்கள அரசை சிந்திக்க வைத்திருக்கின்றது. கடந்த 7-ம் தேதியும், 8-ம் தேதியும் வட சென்னையிலும் - தென் சென்னையிலும் பிரமாண்டமான வகையில் நடைபெற்ற பேரணியும்- பொதுக்கூட்டமும் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சியோடு அமைந்தன.
தி.மு.க. - காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கட்சியின் தொண்டர்களும் மற்றும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியினரும் மடைதிறந்த வெள்ளம்போல் கலந்து கொண்ட மாட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இன்று தமிழகம் இலங்கைத் தமிழர்களுக்காக எழுச்சியோடு அணி திரண்டுள்ளது.

இதற்கு காரணம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று தமிழகத்தின் வீதியிலே ஒரு சிலர் வேறு விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுயநலவாதிகள் - இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்கள் - இரட்டை வேடம் போடும் தீய சக்திகள் என்பதை தமிழக மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

நம்முடைய முதல்வர் கலைஞருக்கு வயது 85. அவருடைய பொது வாழ்வுக்கு வயது 75. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வயது 53. இந்த வரலாற்று பின்னணியில் சங்கமித்தி ருக்காதவர்கள் - அப்போது பிறந்தேகூட இருக்காதவர்கள் எல்லாம் இன்று கலைஞரை குறை கூறுவது வினோதமாக இருக்கிறது.

1956-ம் ஆண்டு இலங்கைத் தமிழர் தலைவர் தந்தை செல்வ நாயகம் அவர்களும் அவ ரோடு அப்போது இளைஞராக இருந்த நாவலர் அமிர்தலிங்கம் அவர்களும் தந்தை - பெரியாரையும் - பேரறிஞர் அண்ணா அவர்களையும் - டாக்டர் கலைஞர் அவர்களையும் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு - அவர்தம் வாழ்வுரிமைக்கு வழிகாண கோரிக்கை வைத்தார்கள்.

அதுமுதல் திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காண மத்திய அரசின் மூலம் வலியுறுத்தியே வந்துள்ளது.
தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டே வந்துள்ளது.
எங்களுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பெருந்தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தந்தை செல்வநாயகம் போன்ற மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நடவடிக்கை களை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

அவர்கள் இலங்கை சென்றபோதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்தும் - இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் - தமிழ் மக்களும் இணக்கமாக வாழ்வது குறித்தும் இலங்கை தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் கவலையோடு ஆலோசனை களை வழங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையிலேதான் இன்றைக்கு இலங்கையிலேயே அமைதி ஏற்பட, இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட, அப்பாவி தமிழர்களின் உயிர் - உடைமைகள் காப் பாற்றப்பட இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையின் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது.

இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி - வி.பி.சிங், வாஜ்பாயி ஆகியோர் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் இப்போது அன்னை சோனியாகந்தி வழிகாட்டுதலில் நடைபெறும் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசிடமும் வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களாகும்.

இரண்டு முறை இதற்காக பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கை சென்று வந்துள்ளார். சமீப காலத்தில் ஒருமுறை வெளியுறவு செயலாளர் இலங்கை சென்று வந்தார். நேற்றுகூட போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை பிரணாப் முகர்ஜி அவர் களும் - ப. சிதம்பரம் அவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதன்வாயிலாக உலக நாடுகளின் கவனம் இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்காக உற்று நோக்கியுள்ளது. முன்பு நார்வே நாடு மட்டும்தான் இலங்கை தமிழர் பிரச் சினையில் கவனம் செலுத்தியது.

இப்போது அமெரிக்கா - பிரிட்டன் - ஜப்பான் - பிரான்சு போன்ற நாடுகள் போர் நிறுத்தம் செய்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று சிங்கள அரசை வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. சபை கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

போப் ஆண்டவர் தன்னுடைய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் - முதல்வர் கலைஞர் அவர்களின் விவேகமான நடவடிக்கைகள்தானே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இதனைப் புரிந்தும் புரியாதவர்களாக ஒரு சிலர் திரிபுவாதம் செய்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் அரசும் - மாநிலத்தில் தி.மு.க. அரசும் - பதவி இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களின் நோக்கம் இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவது அல்ல.
உள்நாட்டு அரசியலுக்காக - குறிப்பாக தமிழக அரசியலுக்காக வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக செத்து மடிந்து கொண்டிருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர் களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசும் - குறிப்பாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் மேற்கொண்டு வரும் விவேகமான நடவடிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியாக துணை நிற்கும்.

அதுவே உயரிய வழியாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும்.
இவ்வாறு கமுதி பஷீர் உரையாற்றினார்.

No comments: