அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2011

'நீரா ராடியா மூலம் நரேந்திர மோடி அரசில் ரூ.29 ஆயிரம் கோடி ஆதாயம் பெற்ற டாடா!'

அகமதாபாத்,மார்ச்.1:அரசியல் தரகர் நீரா ராடியாவால் டாடா நிறுவனம் ரூ.29,000 ஆதாயத்தை நரேந்திர மோடி அரசில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானோ கார் தயாரிப்பை குஜராத்துக்கு கொண்டு வந்ததற்காக டாடாவுக்கு இந்த ஆதாயத்தை மோடி அரசு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குஜராத் சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவிருந்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலை, மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் எழுந்த போராட்டம் காரணமாக வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்கள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தும், குஜராத்தின் சனந்த் என்ற இடத்தில் இந்த தொழிற்சாலையை அமைத்தது டாடா.

இதற்காக டாடாவுக்கு ரூ.29,000 கோடி அளவுக்கு நரேந்திர மோடி அரசு சலுகைகளைக் காட்டியுள்ளாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், இன்று குஜராத் சட்டமன்றத்தில் நானோ தொழிற்சாலைக்கு இவ்வளவு சலுகைகளைக் கொடுத்தும், அவர்கள் வெளி மாநிலத்தவர்களைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் ஊள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ மோத்வாடியா கேள்வி எழுப்பினார்.

உடனே இதனை மறுத்தார் அம்மாநில வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் வாஜுபாய் வாலா. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சொன்னது தவறு என்றும், இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் டாடாவுக்கு ரூ.29,000 கோடி ஆதாயத்தை மோடி அரசு அளித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அரசியல் தரகர் நீரா ராடியா மூலமே இந்த ஆதாயத்தை டாடா அடைந்தார் என்றும் கூறினார்.

இதனால் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் எழுந்தன.
thatstamil

No comments: