அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

டீன் ஏஜில் மனப்புழக்கம் - பெற்றோர் காரணம்?


டீன் ஏஜ் பருவத்தில் முடிவுகள் எடுப்பதில் தயக்கம் இருக்கும். பெற்றோர்கள் இந்த நேரங்களில் தங்கள் குழந்தைகளிடம் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு அசோக் எனும் டீனேஜ் மாணவனின் அப்பாவிற்கு தன் மகன் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆவலாயிருக்க அசோக்கினால் அதன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போக இதனால் அவன் அப்பா அவன் மீது கோபம் கொண்டு வார்த்தைகளை வீசி விட்டார்.

"அந்த நாளில் எனக்குத் தான் இப்படியெல்லாம் படிக்க வசதி இல்லை யாரும் கைட் செய்யவில்லை நான் உனக்கு ஆறாவதிலிருந்து அடித்துக் கொள்கிறேன் என் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை உன்னால் ஹ்ம்ம்?" அசோக் இதனால் குற்ற உணர்வில் மாய்ந்து போனான்.

ஷ்யாம் என்னும் மாணவனுக்கு மெக்கானிகல் இஞ்சினீயரிங்கில் ஆர்வம் ஆனால் அவன் பெற்றோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வற்புறுத்தினர். அவர்களை ஏமாற்ற வேண்டாமென கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துக் கொண்டவனுக்கு மனதுக்குள் தன் கனவு கலைந்ததில் ஏற்பட்ட வருத்தம் கலகலப்பான சுபாவத்தை அழிக்கத் தொடங்கி விரக்தியும் வேதனையுமாய் ஆக்கி விட்டது.

வர்ஷாவிற்கு சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட படிப்பே பிடிக்கவில்லை. அக்கவுண்ட்ஸில் ஆர்வம் இருந்தது.
அவள் அம்மாவிற்கோ பெண் பில்கேட்ஸிற்கு வாரிசாய் இருக்க வேண்டுமென வெறி. தனது காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பெல்லாம் இல்லையென்ற ஆதங்கம் தன் ஆசையை மகள் மூலமாய் நிறைவேற்றிக் கொள்ள வர்ஷாவை தன் விருப்பப்படி படிக்க வைத்தாலும் சந்தேகம் படர்ந்தபடியே இருந்தது.

வர்ஷா படிக்கும் அறையினை அவள் அறியாமல் நோட்டமிடுவதும், கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாலே கண்ட பசங்களுடன் சாட்டிங்செய்வதாய் கற்பனை செய்வதும், போனில் பேசினால் கூடவே வந்து நிற்பதுமாய் பெண்ணை நம்பிக்கையின்றி சுற்றி வந்தாள். இதனால் வர்ஷா மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

சுமதியின் நிலமை இன்னும் மோசம். படிப்பறிவற்ற அவளது பெற்றோர் தினசரி சண்டை போடுவதும் கூக்குரல் இடுவதுமாய் அவளது மனநிலையை சிதைக்க, படிப்பில் கவனம் சிதறியது சுமதிக்கு.

டீன் ஏஜ் பருவத்தினரை முள் மேல் விழுந்த துணி போல ஜாக்கிரதையாகக் கையாள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. தங்களது ஆசை, அபிலாஷைகளை வளரும் பயிர் மீது திணித்தால் சுமை தாங்காமல் பயிரே அழிந்து விடக் கூடும். குழந்தைகளுக்கு ரோல் மாடலாய் பெற்றோர் இருக்க வேண்டும்.

· டீன் ஏஜ் பருவ மகன் அல்லது மகளிடம் தோழமையாய் பழகுங்கள்
· படிக்கும் போதில் அவர்கள் கவனம் சிதறாமலிருக்க ஒத்துழையுங்கள்
· வீட்டுப் பிரச்சினைகள், கவலைகளை அவர்களிடம் சொல்லி புலம்ப வேண்டாம்
· படிக்க, அவர்களுக்குப் பிடித்த நேரத்தை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும்
· சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்
· படிக்கும் பருவத்தில் பசி அதிகமிருக்கும். அன்போடு சமைத்துப் பரிமாறுங்கள். அவகாசமில்லையென்று அடிக்கடி அவர்களை ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்பாதீர்கள்
· ஹாஸ்டலில் விட்ட பிள்ளைகளுக்கு, கடிதம் அல்லது போன் மூலமாக அவர்களது நலன் விசாரித்துப் பொறுப்பையும் உணர்த்திச் சொல்லுங்கள்.
· உடன் பழகுபவர்களை அடிக்கடி கவனியுங்கள்.

No comments: