அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி - திமுக அவசர கூட்டம்.

சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது. இது குறித்து, தி.மு.க.பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஜி அலைக்கற்றை வழக்கில், கலைஞர் தொலைக்காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரூ. 200 கோடியும், வட்டியுடன் திரும்பச் செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்பட அனைத்தும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளன. இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர, எவ்விதமான ஒளிவு மறைவோ சதியோ இல்லை என்பதைக் காட்டி நிரூபித்தும் இருக்கிறோம்.


வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர் என்ற முறையிலும், சரத்குமார் நிர்வாகப் பங்குதாரர் என்ற முறையிலும் விசாரிக்கப்பட்டனர். இதைப்போல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் விசாரிக்கப்பட்டார்.


கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிற நிலையில் திமுக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிக்க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.

No comments: