அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)

முன்னுரை:

இஸ்லாம் - இதுதான் இன்றைய உலகில் மிகவும் கவனத்தைப் பெற்றிருக்கின்ற தலைப்பு. இஸ்லாத்துடன் தொடர்புடைய எதுவும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது - அது மதமாயிருக்கட்டும், இஸ்லாமிய சமூகமாயிருக்கட்டும், இஸ்லாம் தொடர்பான செய்திகளாயிருக்கட்டும், தனிப்பட்ட முறையில் நாமறிந்த
இஸ்லாமியர்களாயிருக்கட்டும். இஸ்லாம் பற்றிய இன்றைய உலகின் கவனத்தை திருப்பச் செய்தது இஸ்லாத்தின் பெயரால் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைகள் - இந்தியாவின் காஷ்மீராகட்டும், பாலஸ்தீனமாகட்டும், நாகூராகட்டும், ஈராக்காகட்டும், மேலப்பாளையமாகட்டும், பெஸ்லனாகட்டும்,
நியூயார்க் நகரின் இரட்டைக்கட்டிடங்களாகட்டும், கோவையாகட்டும் - இஸ்லாம் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது, இஸ்லாத்தின் பேரில் அதைப் பின்பற்றுபவர்களுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கை, அந்த நம்பிக்கையின் உந்துதலில் செயல்படும் மதப்பிடிப்புள்ள ஒரு மனிதக் குழுமம், அக்குழுமத்தின்
உறுப்பினர்களால் நடத்தப்படும் கடவுளுக்கான, கடவுளின் கட்டளைகளின் அடியொற்றி நடத்தப் படும் புனிதப்போர்.

இஸ்லாத்தின் அடித்தளம்:

இப்புனிதப்போருக்கு ஆன்மிக அடித்தளமும், நியாயத்தன்மையும் வழங்குபவை சில நம்பிக்கைகள். கடவுளால் மனித குலத்திற்கு இடப்பட்ட சில கட்டளைகளைப் பற்றிய நம்பிக்கைகளே மதப்பிடிப்புள்ள இஸ்லாமியர்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டி, அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் உந்து சக்தியாயிருக்கிறது - அவர்களின் சிந்தனையை நிறுவனப்படுத்தி ஒரே இலக்கில் செயல்பட வைக்கிறது. இஸ்லாம் குறித்த கடுமையான தாக்குதல்கள் - பாராட்டுக்கள், புகழாரங்கள் - அவதூறுகள், செய்திகள் - விமர்சனங்கள் என பல வெளிவந்திருக்கின்றன, வந்து கொண்டுள்ளன. ஆனால், யாரும் இந்நம்பிக்கையின் மூலத்தை உரைத்துப் பார்த்ததில்லை. இந்நம்பிக்கையின் மூலத்தை உரைகல்லில் ஏற்றி உரைத்துப் பார்த்தவர் ஒருவர் உண்டு - அவர் டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட்.

டாக்டர் எல்ஸ்ட் :

டாக்டர் எல்ஸ்ட், ஒரு கத்தோலிக்க ·ப்ளெமிஷ் (·ப்ளெமிஷ் - டச்சு மொழி பேசும் பெல்ஜியர்கள்) குடும்பத்தில் 1959ம் ஆண்டு பெல்ஜியத்திலுல்ள லவன் என்னுமிடத்தில் பிறந்தவர். லவன் நகரில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சீன ஆய்வுக்கல்வி, இந்தோ-ஈரானிய ஆய்வுக்கல்வி போன்றவற்றைக் கற்று, இந்து மீட்சி குறித்த பொருளில் ஆய்வு செய்து லவனில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

நான்காண்டுகள் இந்தியாவில் தங்கி, நேரடியாக இந்தியர்களைத் தாக்கும் பிரச்சினைகளையும், சமூகக் குறைபாடுகளையும் அலசிய டாக்டர். எல்ஸ்டின் முதல் புத்தகம் அயோத்திப் பிரச்சினை குறித்து வெளிவந்தது. பின், பல தளங்களில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு 15 புத்தகங்கள், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை கருத்துலகிற்கு அளித்துள்ளார். சீன வரலாறு, பன்முகக் கலாச்சாரத்தன்மை, ஆரியப் படையெடுப்பு குறித்த ஆய்வுகள், மொழிப்பிரச்சினை, இஸ்லாமியர்களின் உளப்பாங்கு என பல தலைப்புகளில் அவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்துமதம், புத்தமதம், சீனா, கீழை நாடுகளின் தத்துவயியல்கள், பாகன் மரபுகள் என்று கொய்ன்ராட் எல்ஸ்டின் கவனத்தைப் பெற்ற பல விஷயங்கள் குறித்த அவரது ஆழ்ந்த கருத்துக்கள் கீழை நாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அனைவரையும் அவரது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

இந்தியாவில் இந்து மீட்சி குறித்துத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் டாக்டர்.எல்ஸ்ட், இந்துத்வா இயக்கங்களையும் குறை கூறத் தயங்கியதில்லை. இந்தியச் சார்பு நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுப்பவர் என்றாலும், இன்னமும் இந்தியர்கள் சில காலணியாதிக்கக் குறைபாடுகளைக் களையவில்லை என்ற
பெரும் குறை அவருக்குண்டு. அதனினும் குறிப்பாக, வரலாறு குறித்த இந்தியர்களின் கண்ணோட்டம் பற்றிய ஆதங்கம் நிறையவே அவருக்கு உண்டு.

வஹி பற்றி டாக்டர் எல்ஸ்ட் :

இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட வஹி எனும் இறை ஆவேச நிலையில் அவருக்கு வெளிப்பட்ட ஆன்மிக நிலை. இந்நிலையிலிருந்துதான் அவருக்கு இறைத்தொடர்பும், அதைத் தொடர்ந்த உலக சமுதாயத்திற்கான இறைக்கட்டளைகளும், சமுதாய வழிகாட்டுதல்களும் ஏற்பட்டன.

இந்த வஹி குறித்து டாக்டர்.எல்ஸ்டின் எட்டு கட்டுரைகளை காஷ்மீர் ஹெரால்டு வெளியிட்டுள்ளது. இக்கட்டுரைகளில், இஸ்லாமிய வரலாற்றாவணங்களில் காணப்படும் வஹி பற்றிய செய்திகள், அந்நிலைபற்றிய இந்திய யோகியரின் விளக்கங்கள், ஐரோப்பிய உள ஆய்வு நிபுனர்களின் கருத்துக்கள் ஆகியவை விரிவாக அலசப்பட உள்ளன.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" எனும் தமிழாசான் பாரதியின் கூற்றினை மெய்யாக்கும் வண்ணம், உலகின் கவனத்தைப் பெற்ற இந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழோவியத்தில் வர உள்ளன. தொடர்ந்து எட்டு வாரங்கள் இவை வர உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இவை ஒரு கருத்துக் கொடையாக அமைந்து, நமது சமூகத்தை, சிந்தனையை இவை செறிவு படுத்தும்.

முன்னுரைக்கு முடிவுரை:

இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்துள்ள டாக்டர் எல்ஸ்டிற்கு நன்றிகளை நவின்று, இவற்றுக்கான உரிமை அவரிடத்திலேயே உள்ளது என்பதையும் தெரிவித்து, மொழிபெயர்ப்பின் - அடிக்குறிப்புகளின் குறைகள் எனதே, ஆக்கத்தின் செறிவுகள் அவரைச் சார்ந்தவை என்பதை தெரிவித்து இம்முன்னுரையை முடித்து, தொடரைத் தொடங்குகின்றேன்.

வணக்கங்களுடன்,

- நேச குமார்

No comments: