அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 10, 2011

இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையேயான பிரச்சினைகள் மிகுந்த உறவுகளை பின்னுக்கு தள்ளி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இரு நாட்டின் பிரதமர்களும் கூறியுள்ளனர்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்திய பாகிஸ்தான் உறவுகள் அதளபாதாளத்துக்கு சென்றன.
மாலத்தீவுகளில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது இந்த இரு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் இதர அமைச்சர்கள் சந்தித்து உரையாடிய போதே இந்தக் கருத்துக்களை வெளியாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு வர்த்தக உறவுகள் பற்றியே முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமருடன் மாலத்தீவுகள் சென்றுள்ள பி.டி.ஐ. செய்தியாளர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பரஸ்பர பாராட்டுகள்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானியப் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியும் இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது பல விடயங்களை விவாதித்ததாகவும் கூறி ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக பாராட்டிக் கொண்டனர்.
கீலானி அவர்கள் சமாதானத்தை விரும்பும் ஒரு மனிதர் எனும் எண்ணம் அவருடனான சந்திப்புக்கு பிறகு வலுவடைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் ஒரு வெளிப்படையானவர் என்றும், தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து விடயங்களிலுள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டு விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று பாகிஸ்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கவராதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாட்டு உறவுகள் மிகவும் மோசமடைந்தது.
ஆனாலும் இது போன்ற பல பேச்சுவார்த்தைகள் சீர்கெட்டுபோன உறவுகளை முன்னேற்ற உதவின.
அண்மையில் பாகிஸ்தானிய பரப்புக்குள் நுழைந்த ஒரு இந்திய ஹெலிகாப்டரையும், அதன் பணியாளர்களையும் பாகிஸ்தான் உடனைடியாக விடுவித்தது போன்ற சம்பவங்கள் நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
பேச்சுவார்த்தைகளின் மூலம் உறுதியான முடிவுகளை எடுக்க இதுதான் சரியான நேரம் என இருநாட்டுப் பிரதமர்களும் கூறியுள்ளனர்.

"கஸாபை தூக்கிலட வேண்டும்"

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மும்பை தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானியர் அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி என்று தான் நம்புவதாகவும் அவரை தூக்கிலட வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்திய நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் தற்போது மேல்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
ஒசாமா பின் லாடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லையா என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதை முற்றாக மறுத்த ரஹ்மான் மாலிக் அது மிக மிக கற்பனையான ஒரு குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்.
பாகிஸ்தானின் உளவுத்துறை உட்பட பாகிஸ்தானின் நிர்வாகத்தில் யாருக்கும் பின் லாடன் கொல்லப்படுவதற்கு முன்னர் தமது நாட்டில் தங்கியிருந்தார் என்பது தெரியாது எனவும் ரஹ்மான் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட பொதுவாத ஒரு உத்தி தேவை என்பதையும் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: