அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா?

தென்னிந்திய அளவிலான லாரிகள் ஸ்டிரைக், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், அத்தியாவசியப் பொருட்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்ததை அடுத்து, லாரி ஸ்டிரைக் நீடிக்கிறது. இன்சூரன்ஸ், டீசல், டயர், உதிரிபாகங்கள் மீது ஏற்றப்பட்ட விலை உயர்வைக் குறைக்க வேண்டும். 2010 டிச., 4ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.,18ம் தேதி நள்ளிரவு முதல், லாரி ஸ்டிரைக் துவங்கி, நடந்து வருகிறது. தென்னிந்திய அளவிலான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், ஆக.,18ம் தேதி நள்ளிரவில் துவங்கிய லாரி ஸ்டிரைக், நேற்று நான்காவது நாளாக நீடித்தது. போராட்டத்திற்கான முன் நடவடிக்கையாக, ஆகஸ்ட் 14 முதல், வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் நேற்று வரை, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த, பெரிய வெங்காயம், பூண்டு, மளிகைப் பொருட்கள், கோதுமை, சர்க்கரை, உரம் ஆகியவற்றின் வரத்து, முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், பெரிய வெங்காயம், பூண்டு, பருப்பு ஆகியவற்றின் விலையில், நேற்று முதல் ஏறுமுகம் ஏற்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை பல மடங்கு உயர, வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மத்திய தரை வழிப் போக்குவரத்து கமிஷனர் உபாத்யாயா தலைமையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் நாயுடு, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி ஆகியோருடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. "இந்தப் பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும், தற்போது பண்டிகை சீஸன் என்பதால், ஜவுளி, அத்தியாவசியப் பொருட்கள், சர்க்கரை, உரம் உள்ளிட்ட பொருட்கள், தேக்கம் அடைந்துள்ளதால், இவற்றின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.

தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்திலும், 95 சதவீத லாரிகள் இயங்கவில்லை. நான்கு நாளில், சேலத்தில் மட்டும், 1,000 கோடி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
மத்திய அரசு, பொதுமக்களின் நலன் கருதி, இந்த ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, எங்களின் சங்க நிர்வாகிகள், டெல்லியில் முகாமிட்டு, மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் வரை, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை. பொதுவாக, லாரி ஸ்டிரைக் துவங்கும் முதல் இரண்டு நாட்களிலேயே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வரும். ஆனால், மத்திய அரசு இந்த முறை மெத்தனமாக இருப்பதுடன், மவுனம் சாதித்து வருவதால், நான்காவது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments: