அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 8, 2011

போலி என்கவுன்டரில் உத்தர பிரதேசம் முதலிடம்..

புதுடெல்லி : போலி என்கவுன்டர் நடந்ததில் உத்தர பிரதேசம் மாநிலம் முதலிடத்திலும், மணிப்பூர் மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரவுடிகளை போலீசார் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் போலீசாரை தாக்குவதுண்டு. அப்போது போலீசார் பதிலுக்கு தாக்குதல் நடத்துவார்கள். இந்த என்கவுன்டரில் இருதரப்புக்கும் காயம் ஏற்படலாம். ஆனால், என்கவுன்டரில் பெரும்பாலும் ரவுடிகள்தான் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். 

இதனால், போலீசுக்கு பிடிக்காத ரவுடிகள் அல்லது ஆளும் கட்சிக்கு பிடிக்காதவர்கள் இந்த ‘போலி’ என்கவுன்டரில் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. இது குறித்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் தேசிய மனிதஉரிமை ஆணையத்துக்கு வருகிறது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரை மனித உரிமை ஆணையத்தில் 369 போலி என்கவுன்டர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வழக்குகளில் போலி என்கவுன்டர் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4.54 கோடி நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 271 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

போலி என்கவுன்டர் புகார் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உத்தர பிரதேசம். இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 120 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

நக்சல் அபாயம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜார்கண்ட்டில் 13 பேரும், ஒரிசாவில் 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிபூங்கா என கூறப்படும் தமிழ்நாடு,மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தலா 15 பேர் போலி என்கவுன்டரில் பலியாகியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 23 பேரும், தலைநகர் டெல்லியில் 6 பேரும் என்கவுன்டரில் பலியாகியுள்ளனர்.

No comments: