அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 31, 2008

பாஜக தலைமை அலுவலகத்தில் BLACK MONEY மாயமாகியுள்ளது.

பாஜக தலைமை அலுவலகத்தில் ரூ.2.6 கோடி மாயம்

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2008, 10:58 [IST]

Money
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணம் மாயமாகியுள்ளது. இது கட்சிக் கணக்கில் வராத, எந்த வழியில் வந்தது என்பதற்கு ரசீது இல்லாத பணம் ஆகும். இதனால் போலீசிடம் புகார் தர பாஜக தயக்கம் காட்டி வருகிறது.

டெல்லி அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் பணத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணத்தைக் காணவில்லை என்று பாஜகவின் தலைமை காசாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைதான் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. அதற்கு முதல் நாள் கிருஸ்துமஸ். அன்று அலுவலகம் திறக்கப்படவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு யாரோ பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது.


24ம் தேதிதான் அந்தப் பணம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. கட்சி நிர்வாகிகள் பலரும் தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையி்ல் பணம் திருட்டுப் போயுள்ளது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பல வருடங்களாகவே நலின் தாண்டன் என்ற கட்சியின் மூத்த நிர்வாகிதான் பண விவகாரத்தை கையாண்டு வருகிறார். இவர்தான் தலைமைக் காசாளராகவும் இருக்கிறார். அவர்தான் பணம் திருட்டுப் போனதைக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார்.

பணம் வைக்கப்படும் அறைக்குப் போகும் அனுமதி பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். கட்சிக்காரர்கள் யாரேனும்தான் இதை செய்திருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அலுவலகத்தின் பூட்டுக்கள் எதுவும் உடைக்கப்படவில்லை. அதேசமயம், பணம் வைக்கப்பட்டிருந்த சிறிய அறையின் கதவு மூடப்படவில்லை.

இதற்கிடையே, இந்தப் பணத்தை இதுவரை கட்சிக் கணக்கில் சேர்க்கவில்லையாம். தேர்தலுக்காக இது வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த வகையில் இந்தப் பணம் திரட்டப்பட்டது என்தற்கும் கட்சியிடம் ரசீது இல்லை. (இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு). கணக்கில் இல்லாத பணம் என்பதால் (கிட்டத்தட்ட பிளாக் மணி மாதிரி) போலீஸாரிடம் போக பாஜக தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அமர்த்தி விசாரணை மேற்கொண்டுள்ளதாம் பாஜக தலைமை.

பணம் காணாமல் போனது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்க மறுக்கின்றனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கருத்து கூறுவதற்கில்லை என்று மறுத்து விட்டார்.

டெல்லி போலீஸார் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், நாங்களும் கேள்விப்பட்டோம். இருப்பினும் முறையான புகார் வராமல் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.

தற்போது பாஜக தலைமை அமர்த்தியுள்ள துப்பறியும் நிறுவனம், தாண்டனை குறி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அவருக்குத் தெரியாமல் பணம் திருட்டுப் போயிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பணம் வைக்கப்படும் அறைக்குப் போக அனுமதி பெற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தாண்டன் பல வருடங்களாகவே காசாளராக இருந்து வருகிறார். இதை விட பெரிய தொகையை அவர் நிர்வகித்துள்ளார். எனவே அவரை சந்தேகப்படக் கூடாது என்று கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்தால், அவரிடம் இருக்கும் இன்னோவா காரும், அவரது ஆடம்பர வீடும், செலவுகளும் இடிக்கிறதே என்று அவர் மீது சந்தேகப்படுவோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். அதுதொடர்பாக தாண்டனுக்கும், அலுவலக செயலாளர் ஷியாம் ஜாஜுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையெல்லாம் மனதில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: