அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள்!!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின், ரகசிய அறைகளில் இருக்கும் விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள், சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கணக்கெடுக்கும் பணி நேற்றும் தொடர்ந்தது. நேற்றைய கணக்கெடுப்பின் போது, தங்க விஷ்ணு சிலை ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த விஷ்ணு சிலையில், விலை மதிப்புமிக்க கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களின் மதிப்பு, 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு, முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு எடுத்துக் கொள்ள தடை விதித்தது.சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி, அறைகளை திறக்க துவங்கியது. மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நான்காவது அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த அறை இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. இதில், தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள், விளக்குகள், தங்கத்தாலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்கள் இருந்தன. பிரமிக்கத்தக்க வகையில், விலைமதிப்பில்லாத வைர, வைடூரிய, தங்க, வெள்ளி பொருட்களும் இருந்தன.

இந்நிலையில், ரகசிய அறைகளில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் பணி ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அப்போது, அற்புதமான கலைவண்ணத்தில் உருவான தங்க விஷ்ணு சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த விஷ்ணு சிலையில், விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மரகத கற்கள், பலவிதமான தங்க செயின்கள், ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் போன்றவையும் இருந்தன. கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்களின் மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என, கூறப்படுகிறது.பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் வைக்கப்பட்டிருந்த, பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி, 1932ம் ஆண்டிலும் நடந்ததாக, அப்போதே மலையாள மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக சித்திரை திருநாள் பொறுப்பேற்ற பின், இந்த ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. அப்போது, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் இருந்தாக கணக்கிடப்பட்டுள்ளது. இருந்தாலும், நகைகளின் மதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

பாதுகாப்பு அதிகரிப்பு: கோவிலில் தங்கம், வைரம், விலை மதிப்புமிக்க சிலைகள் என, ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதால், நேற்று முதல் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை நிரந்தரமாக்குவது குறித்து நேற்று பேட்டியளித்த கேரள டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ், ""இப்புதிய பாதுகாப்புப் பணியில், விரைவில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள், நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபடுவர். அதற்கான பணிகள் விரைவாக நடக்கும்,'' என்றார்.

No comments: