அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 9, 2011

காவ‌ல் நிலைய‌த்திலிருந்து இளைஞ‌ர் ஓட்ட‌ம்: சினிமாவை மிஞ்சிய துர‌த்த‌ல் காட்சிக‌ள்!

காவல்நிலையத்திலிருந்து தப்பியோடிய இளைஞரைப் பிடிப்பதற்காக துரத்திய காவல்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 8 மணி நேரம் நீண்ட இந்தத் துரத்தல் படலம் திரைப்படத்தை மிஞ்சும் வகையில்அமைந்தது.

நாகர்கோவில் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்பவருடைய மகள் சகாயசந்தியா. இவர் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பிளஸ் 1  நர்சிங் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, சந்தியா பின்னர் வீடு திரும்பி வரவில்லை. இதற்கிடையே பள்ளியில் விசாரித்த போது, அவர் அன்றைய தினம் பள்ளிக்கே வரவில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த சுஜின் என்பவருக்கும் மாணவிக்குமிடையிலான தொடர்பும் அவருடன் மாணவி சென்ற விவரமும் தெரியவந்தது. இது தொடர்பாக மாணவியின் தந்தை வடசேரி காவல்துறையில் புகார் செய்தார். மாணவி மைனர் என்பதால் காவல்துறையினர் சுஜின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். நேற்று  கீரிப்பாறை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்த சுஜினையும், சம்பந்தப் பட்ட மாணவியையும் காவல்துறையினர் மீட்டனர்.

ஏற்கனவே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால், நீதிமன்றத்தில் தான் அவர்களை ஆஜர்படுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மாணவியை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், வாலிபர் சுஜினை வடசேரி காவல் நிலையத்திலும் வைத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென வடசேரி காவல் நிலையத்திலிருந்து, சுஜின் தப்பி ஓடினார். அப்போது காவல் நிலையத்தில் 2 காவல்துறையினர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் துரத்தியும் சுஜினைப் பிடிக்க முடியவில்லை. இரவு நேரமாக இருந்ததால் அவர் சென்ற இடம் குறித்தும் தெரியவில்லை. இது தொடர்பாக ரோந்து பணியில் இருந்த காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதிகாலை 2 மணியிலிருந்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.
இதற்கிடையே மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்த சுஜின், மாணவியைச் சந்திப்பதற்காக மகளிர் காவல் நிலையம் வந்தார். அங்கிருந்த மகளிர் காவலரிடம், "மாணவியைப் பார்க்க வேண்டும். நான் அவளின் காதலன். என்னை சந்திக்க விடுங்கள்" என கூறி இருக்கிறார். இது குறித்து வடசேரி காவல்துறைக்கு மகளிர் காவலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஆய்வாளர் சார்லஸ், துணை ஆய்வாளர்கள் முருகேசன், சுஜித் ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விரைந்தனர்.
தப்பி ஓடிய வாலிபரே வந்து வலையில் சிக்கி விட்டார் என்ற மன மகிழ்ச்சியில் காவல்துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தனர். தன்னைப் பிடிக்க காவல்துறையினர் வந்து கொண்டிருக்கும் தகவல் சுஜினுக்குத் தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்தார். அவர் வெளியே ஓடவும், வடசேரி காவல்துறையினர் வரவும் சரியாக இருந்தது. உடனடியாக அவர்கள் சுஜினைத் துரத்தினர். அருகிலுள்ள வேளாண் விரிவாக்க அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், டாஸ்மாக்கடை, காம்பவுண்ட் சுவர் என மாறி, மாறி சுஜின் துள்ளி குதித்து ஓடினார்.
காவல்துறையினரும் விடாமல் துரத்தினர். சுமார் 2 மணி நேரம் அந்த இடமே களேபரம் ஆனது. "அங்கு இருக்கிறான்.. இங்கு இருக்கிறான்..." என கூச்சலிட்டு காவல்துறையினர் துரத்தியது வேடிக்கையாக இருந்தது. சிறிது நேரத்தில் இந்தத் துரத்தலை வேடிக்கை பார்க்க பொதுமக்களும் பெருமளவில் திரண்டனர். எங்கு தேடியும் சுஜின் கிடைக்க வில்லை.
இதற்கிடையே வடசேரி தங்கம் தியேட்டர் சாலையில் வாலிபர் ஒருவர் ஓடி கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அங்குள்ள புதர் ஒன்றில் மறைந்திருந்த சுஜினைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அதிகாலை 2 மணிக்கு தப்பி ஓடிய சுஜின், காலை 10 மணியளவில் பிடிபட்டார். அவரை வடசேரி காவல்= நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். காதல் பிரச்சினையில் தான் மாணவியை அழைத்து சென்றதாக வாலிபர் சுஜின் கூறி இருக்கிறார். இதன் பேரில் காவல்துறயினர் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதற்கிடையே மாணவி கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சிலர் சுஜினின் சகோதரி சுஜியிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுஜி அளித்த புகாரின் பேரில், மாணவியின் உறவினர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

No comments: