அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

லோக்பால் மசோதா; அனைத்துக்கட்சி கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படுமா என்பது சந்தேகம் ...

புதுடில்லி: அரசு தரப்பில் ஒரு வரைவு மசோதாவும், சமூகஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சியினர் தரப்பில் ஒரு வரைவு மசோதாவும் என நிலவிவரும் பிரச்னையை முன்நிறுத்தி இன்று முடிவு ஏற்படுத்துவதற்காக ஆளும் காங்கிரஸ் அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டியுள்ளது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே , பாபா ராம்தேவ் மற்றும் எதிர்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனையடுத்து இந்த மசோதாவில் பிரதமர், நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொண்டுவரப்பட வேண்டும் என ஒரு சாராரும், மற்றொரு சாரர் ( ஆளும்கட்சி) ஒரு நிலையாக நிற்பதுவுமாக உள்ளது. இந்த மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.,தலைவர் அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பான இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்தை வலியுறுத்துவோம் என்றார்.

இந்த கூட்டத்தில் தனது கருத்திற்கு ஆதரவு தருமாறு தியாகி அன்னா ஹசாரே அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். நேற்று காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசிய அவர் செய்தியாளர்களிடம் ஹசாரே, மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனான சந்திப்பு, பயன் உள்ள வகையில் இருந்தது. எங்கள் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதா குறித்தும், அரசு பிரதிநிதிகள் தயாரித்த வரைவு மசோதா குறித்தும், அவரிடம் விளக்கினோம். இரண்டு மசோதாக்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் விளக்கினோம்.

குறிப்பாக, 15 முக்கியமான பிரச்னைகள் குறித்து, அவரிடம் எடுத்துக் கூறினோம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியபின், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, சோனியா உறுதி அளித்தார்.கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, சரியான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது நடக்கவில்லை என்றால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் ஆகஸ்ட் 16 முதல், திட்டமிட்டபடி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தை சிவசேனா புறக்கணித்துள்ளது.

No comments: