அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்த திஹார் கண்காணிப்பாளர் அந்தமான் சிறைக்கு மாற்றம்!!!

டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து தனது அறையில் உட்கார வைத்து ஹாயாக பேசிக் கொண்டிருந்த சிக்கிய திஹார் சிறை கண்காணிப்பாளர் பரத்வாஜ் அந்தமான் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

திஹார் சிறையில் பெருமளவில் குளறுபடிகள், கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி சலுகை காட்டுவது நிலவுவது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை என்ற பெயரைப் பெற்றது திஹார் சிறை. இங்கு கைதிகள் மனித நேயத்துடன் நடத்தப்படுவதாலும், சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கையாலும் பலராலும், பல அமைப்புகளாலும் பாராட்டப்பட்டதாகும்.

இந்த நிலையில் சிறையில் விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு வரம்பு மீறி சலுகைகள் காட்டப்படுவதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சமீபத்தில் சிறைக்கு அதிரடியாக வருகை தந்து சோதனை மேற்கொண்டார் மாஜிஸ்திரேட் பிரிஜேஷ் குமார் கார்க். அப்போது பல கைதிகளின் அறைகள் திறந்து கிடந்ததையும், கைதிகள் சுதந்திரமாக நடமாடி வருவதையும் கண்டு அவர் திடுக்கிட்டார். அதற்கு உச்சமாக, சுரேஷ் கல்மாடி, சிறைக் கண்காணிப்பாளர் பரத்வாஜின் அறையில் உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டபடி அவருடன் ஹாயாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது என்ன என்று பரத்வாஜிடம் அவர் கேட்டபோது, மருத்துவப் பரிசோதனைக்காக செல்ல காத்திருக்கிறார் கல்மாடி என்று பதிலளித்துள்ளார் பரத்வாஜ். சரி, அதற்காக ஒரு கைதியுடன் இப்படி உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு பரத்வாஜிடமிருந்து பதில் வரவில்லை.

சிறையில் கல்மாடியின் அறை மூடப்படுவதே இல்லையாம். அவர் சுதந்திரமாக இருக்கிறாராம். எப்போது நினைத்தாலும் அவர் வெளியில் வந்து கண்காணிப்பாளர் அறையில் அமர்ந்து பேசுவாராம். சிறைக்குள் சுதந்திரமாக நடமாடி வந்துள்ளார் கல்மாடி என்று நீதிபதி கார்க்குக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறையில் நடந்து வரும் விதி மீறல்கள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக மேல் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பியுள்ளார் கார்க்.

இந்த விவகாரத்தையடுத்து தற்போது பரத்வாஜ் அந்தமானில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார். அவர் வருகிற 8ம் தேதி அங்கு போய் பணியில் சேர வேண்டும்.

மேலும் பரத்வாஜ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறையின் கண்காணிப்பு அதிகாரி திணேஷ் காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐசி ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையின் அனைத்துக் கண்காணிப்பாளர்களையும் அழைத்துப் பேசிய சர்மா, கைதி யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் பாரபட்சம் காட்டக் கூடாது, சலுகை காட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

No comments: