அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 14, 2011

பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம்; ஆறுதல் கூறிய அத்வானி பேட்டி

மும்பை: மும்பையில் நடந்த சதிகாரச்செயலில் சிக்கி பலியானவர்களின் உறவினர்கள் ள் மற்றும் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், குண்டுவெடிப்பு நடந்தது குறித்தும் நேரில் கேட்டறியவும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி புறப்பட்டு சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நபர்களை சந்தித்து நடந்த விவரம் ‌கேட்டறிந்தார்.

கொள்கை மாற்றாவிட்டால் பயங்கரவாதம் நீடிக்கும் அத்வானி : அத்வானி ஜாவேரி பஜார், ஓபேரா ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர் நிருபர்களிடம் அத்வானி பேசுகையில்; மும்பை பயங்கரவாதிகளின் முதன்மைக்குறியாக இருக்கிறது. நுண்ணறிவு பிரிவினரின் கையாலாகத்தனத்தை இது காட்டுகிறது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் தொடர்பு உள்ளது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானில்தான் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு பாக்., உதவி செய்கிறது. மும்பையில் தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு , பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம். இந்த கொள்கையை நீடிக்கும் பட்சத்தில் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மாற்றம் கொண்டு வரவேண்டும்.

இதற்கிடையில் நாட்டில் எழுந்துள்ள நிலை குறித்து பாதுகாப்பு துறை , உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படை உயர் செயலர்கள் ஆலோசிக்கும் கூட்டமும் இன்று நடந்தது.



அம்மோனியம் நைட்ரேட் : ப.சிதம்பரம் சொல்கிறார்:நேற்று ( புதன்கிழமை ) நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் ‌நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றும், பல கோணங்களில் துப்பறியும் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்றைய பேட்டியின்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குண்டுவெடிப்பு தொடர்பாக முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை இந்த சதிச்செயல் ரிமோட்குண்டு எதுவும் பயன்படுத்தப்படவி‌ல்லை, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றார்.

மும்பையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த மூன்று இடங்களில், நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், 21 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய முகாஜுதீன் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது: மும்பையின் தென்பகுதியில், புகழ்பெற்ற மும்பா தேவி கோவில் அருகேயுள்ள ஜாவேரி பஜாரில், நேற்று மாலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர். இந்த ஜாவேரி பஜார் பகுதி, தங்க நகை மற்றும் வைர நகைக் கடைகள் நிறைந்த பகுதி. மாலை நேரம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மும்பை தாதர் பகுதியில், அனுமன் கோவில் அருகே, கபுதார் கானா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த இடம், தாதர் ரயில் நிலையம் அருகேயுள்ளது. மூன்றாவதாக சார்னி ரோட்டில், ஓபேரா ஹவுஸ் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இந்த குண்டும் காரில் வைக்கப்பட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில்,21 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குண்டு வெடிப்புகளும், மாலை 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் நிகழ்ந்தன.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விரைந்து சென்று, குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டனர்; தடயங்களை சேகரித்தனர். எப்படிப்பட்ட தன்மை கொண்ட குண்டு வெடித்துள்ளது என்பதை முதலில் கண்டறிய முடியாவிட்டாலும், பின்னர் தெரிய வரும்.இவ்வாறு போலீசார் கூறினர்.

மும்பையில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பை அடுத்து, மும்பை நகரத்தின் மற்ற பகுதிகளில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், தலைநகர் டில்லியிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நடந்த விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன், தேசிய பாதுகாப்புப் படையினர், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவும் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் ஒன்றில், டில்லியில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்த குண்டு வெடிப்பில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த 2008ம் ஆண்டில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட சோகத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், ""முதலில் கிடைத்த தகவலின்படி, மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ், நாயர் மற்றும் கே.இ.எம். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்ய, பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்,'' என்றார். இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும் 10 பேர் பலியானதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், டில்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அவர்களுடன் விவாதித்தார்.

முக்கிய குண்டுவெடிப்புகள் : மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 20 ஆண்டுகளாக தொடர்கிறது. இங்கு நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்.
1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப். 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி. 
2002 டிச. 2: மேற்கு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலி, 31 பேர் காயம்.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம். 
ஆக. 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம். 
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயமடைந்தனர். 
2008 நவ. 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 
2011 ஜூலை 13: ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. 2008 பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி கசாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், முக்கிய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, மாவட்டந்தோறும் எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, வெடிகுண்டு நிபுணர்கள் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயல்: சிதம்பரம் : ""மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி நேற்றிரவு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் டில்லியில் உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: 6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் அதிபர், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் யுசுப் ராஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டெக்மினாஜான்ஜூவா வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை‌யில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் மற்றும்‌ அதிபர் , பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர் என்றார்

No comments: