அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 28, 2009

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 46 -50


பகுதி - 46 எட்டுவயதைத் தாண்டி, பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா... மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?... இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.

அதோடு நின்றால் பரவாயில்லை. கூடவே... நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே... இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா?... என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்.

அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை? “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்...
அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.


ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.


பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?...
எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?...

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?... அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா... எங்கு போய் எங்கு வருகிறார் மநு என்று?

அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?

கொடுமையான தண்டனை... அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி.. கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.

அடுத்த ஒருவருஷம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்?

அக்னி காரியம்/ தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை... அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்... கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்... ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது?... அந்த ஒரு வருஷம்... 6 மாசங்களானது... அப்போதும் கஷ்டம்... என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று... கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.

பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து... இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி கல்யாணம்.

நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.
சரி... மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?... (சர்ச்சைகள் தொடரும்)

பகுதி - 47
மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்துகொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா? என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.
அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா?

சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு... கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.

“ராமரை சீதை பார்த்தபோது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.

சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து,கீழே உருண்டோடுகின்றன. ராமனை... இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.
கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,

தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா
என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.

விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.

வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்யவேண்டியதாயிற்று.
எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”
ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?

குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை... என்கிறான். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது.

கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
“மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்”
என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?


“அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் - உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்.

நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை - தால் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.
அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.

மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?....

வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது.

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.
(தொடரும்)

பகுதி - 48
இத்தொடரில் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதா? வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.
அப்படிப்பட்ட நிலையில்...

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு.இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.

உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.
அதாவது...
``ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’
அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.
அப்புறம்...?
``ஸ்த்ரீதாம் உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத்...’’

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.

உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.]

உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள். இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.

பிறகு... இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்... பெண்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப்பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது...

உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே மநு சொல்வதை புரிந்துகொள்ள முடியும். சரி! உபநயனம் என்றால் என்ன?

இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆண் மகனுக்கு முதல் கல்யாணம்போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.

உண்மையில் உபநயனம் என்றால்... பிராமணப்பையனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது...?

இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சாரியர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம்.

அதாவது ஆசிரியர் மாணவனை கையைப்பிடித்து அழைத்துச் செல்வதுதான்.
இந்த சமயத்தில் அந்தக் குழந்தைப் பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் `பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.

அப்போது அவனது அப்பா... ``பயலே... இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சாரியரோடு போ...’’ என்று பையனை வழியனுப்பி வைப்பார்.

அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான்.
இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற பையனை லீவு போடச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகிறார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப் பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்... நடைமுறையில் அப்படியே முரண்பாடாகி விட்டது.
காரணம்...? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகிறேன் பாருங்கள். உபநயனம் உள்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்குக் கிடையாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே?

ஆனால்... இன்று எல்லா ஜாதி பையன்களும், பெண்களும் உபநயனம் பண்ணிக் கொள்கிறார்கள். ஆமாம்... பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறார்களே!
பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டமாய்...
(தொடரும்)

பகுதி - 49
கல்வியும் கிடையாது... மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.

“இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே... வேதமே அப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா?... வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கிறது.

“சிதா வாரோஹணம்
பிரம்மச்சர்யம்...”
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.
மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.
தவிர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.

இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.

ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.

விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?

பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.

அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.

அது இருக்கட்டும்... மநு மணம் முடித்த பெண்கள், விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா?... பிடி அவளை... அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ... அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும் என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக்கட்டைகளை கொண்டு வருகிறார்.

வேதம் பெண்களை எப்படிப்பார்த்தது... மநு பெண்களை எப்படிப் பார்த்தது?... என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.
சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.

கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.

கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.

முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.
ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?... (தொடரும்)
பகுதி - 50
ஆமாம். ஆண் தெய்வமான பெருமாள்... வாகனங்களில் ஏறி, ஊர் சுற்றுவார். ஆதிசேஷ வாகனத்தின் மீதேறி கம்பீரமாக வருவார். பின் அனுமார் வாகனம்... அடுத்தது யானை வாகனம். அம்பாரியில் ஜம்மென உட்கார்ந்து வீதிகளை மேளதாள வாத்தியங்களை ஜோராக ரசித்தபடி ஆடியபடி... சுற்றி வருவார் பெருமாள்.

அப்படியென்றால் பெண் தெய்வமான பிராட்டி?

அதற்குமுன் பெண் தெய்வம் வந்த கதையைப்பார்ப்போம்...
வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம்.
ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது.

அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ‘அம்மன்’ என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.

இதுபற்றி பிறகு பார்ப்போம்.
ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள்.
அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள்.

இதன் பிறகு...
உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

அதில் ஒன்று சொல்கிறேன் பாருங்கள். இந்த உற்சவத்துக்கு பேர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

அப்படி என்ன உற்சவம்?
வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம்.

குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள்.
மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரை வாகனம் ஆடிஆடி சென்று கொண்டிருக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல்... ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள்.


கொஞ்சதூரம் போன பிறகு... மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்?

அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் வாத்தியத்தையும் நிறுத்திவிட்டனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள். இரவு அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் தங்குகிறார்.
இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்?


பெருமாளுக்குப் பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகிறது. அதனால் என்ன நினைக்கிறார் என்றால்... கொஞ்ச நேரம் வெளியே போய் சுற்றிவிட்டு வரலாமே என்றுதான்.

குதிரைமேல் ஏறுகிறார். கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை.
இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்துவிட்டு... மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.


இதன்பிறகு மறுபடியும் அந்த உற்சவக் காட்சிகளை சொல்கிறேன் பாருங்கள்.காலையில் அதே குதிரையில் ஏறி... கோயிலுக்கு வருகிறார்.
ஆடிவரும் குதிரையோடு அப்படியே விடுவிடுவென கோயிலுக்குள் பெருமாள் நுழைவதற்காக வர... கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய... மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க.... இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க... அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே ஒரு தூதுவர்.

அப்படியும் பிராட்டியார் சொல்கிறார்.
“கற்பூரம் காட்டும்போது பார்த்தேன். இன்னமும் காயாத ஈர சந்தனம் அவர் மார்பிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே... அந்த சந்தன வாசனை வேறு ஏதோ ஒரு அந்நிய வாசனைபோல் உள்ளது. அவர் எங்கே போய்விட்டு வந்தார்? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவரை உள்ளேவிட முடியாது...” - பெருமாள் மீது சந்தன வாசனை. இதனால் பிராட்டிக்கு சந்தேக வாசனை. ரொம்ப நேரத்துக்குப் பிறகு... நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி.இது உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து சேவிக்கிறார்கள். இதில் சேவிக்க என்ன இருக்கிறது? ஆனால், இங்கு ஞாபகப்படுத்த ஒன்று இருக்கிறது.

வேதத்தில் ஒரு வாக்கியம் வருகிறது என்று கூறியிருந்தேனே...
கணவன் - மனைவியிடம் சொல்கிறான்... “நீ உன்னை எப்போதும் அழகானவளாக உன்னை வைத்துக் கொண்டிருந்தால் நான் வெளியே ஏன் போகப்போகிறேன்?” என்று. இதேபோல்தான் பெருமாள்... இந்த உற்சவத்தில் பிராட்டியாரிடம் சொல்கிறார். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த உற்சவத்தை குடும்பத்தோடு வந்து சேவிக்கிறார்கள்.

இந்த உற்சவத்திலே இன்னொரு விசேடம் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால்... பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டும். தெய்வங்களிடையிலேயே இப்படித்தான் நடக்கிறது. தொடரும்)

-------------------------------------
இந்து மதம் எங்கே போகிறது ?

No comments: