அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் ...

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் ...

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம், ஒன்று மட்டும் செய்யாதிருந்தால். அது என்ன அந்த ஒன்று? அதற்கு பிறகு வருகிறேன்.

ஜியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் தியோடர் ஹெர்ட்ஸல் எழுதிய Der Judenstaat (யூத நாடு) புத்தகத்துக்கு முதலில் யூதர்களிடமே அதிக வரவேற்பு இல்லை. அப்போதைய யூத பொது புத்தி எப்படியிருந்ததென்றால், தத்தம் நாடுகளிலேயே நிலைத்து இருந்து மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து நாட்டின் நலத்துக்காக பாடுபடுவது. ஆனால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் போராடியும் அவர்களுக்கு இந்த ஆதர்சநிலை கிட்டவில்லை என்பது கசப்பான சரித்திர உண்மை.

இப்போது ஜெர்மனிக்கே வருவோம். முதல் உலக மகாயுத்தத்தில் ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனிக்காக அபாரமாக பணி புரிந்தனர். பல கண்டுபிடிப்புகள் ஜெர்மனியின் யுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் என்னவாயிற்று? யூதர்கள் விரும்பினாலும் அவர்கள் பங்களிப்பை ஏற்கும் மனநிலையில் ஜெர்மனி இல்லை. ஏன், 1939-ல் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னாலேயே நாஜிகளின் முதல் ஆறாண்டு கால ஆட்சியில் யூதர்கள் பொது வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில் யூதர்கள் இழப்பு மிக அதிகமே என்றாலும், ஒரு மாறுதலுக்கு ஜெர்மனியின் இழப்புகளைப் பார்ப்போம். முதற்கண் யூத விஞ்ஞானிகளின் பங்களிப்பு இல்லை. இரண்டாவதாக யூத தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் இல்லை. யூத மத்திய வர்க்கத்தினர் இல்லை. பல யூத விஞ்ஞானிகள் வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்த நாடுகளின் ஜெர்மனிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அழகில் எல்லாமே பற்றாக்குறையாக, முக்கியமாக ரயில் போக்குவரத்து சாதனங்கள், இருந்தபோது, யூதர்களை வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லும் ரயில்வண்டிகளுக்கே முன்னுரிமை கொடுத்ததில் ஜெர்மனியின் சீரழிவு இன்னும் வேகப்படுத்தப்பட்டது. எல்லாமே ஒரு பைத்தியக்கார தலைவனின் ஆசைக்கு உட்பட்டு நடந்தன. கடைசியில் சாகும் தருவாயில் ஹிட்லர் எழுதிய உயிலில் கூட தனது யூத வெறுப்பை கக்கிவிட்டுத்தான் செத்தான்.

யூதர்கள் இம்மாதிரி ஒடுக்கபடாமல் இருந்திருந்தால் ஜெர்மனி இந்த யுத்தத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருந்திருக்கும். இஸ்ரேலும் உருவாகியிருக்காது. நரகத்தில் இதற்காகவே எண்ணெய் கொப்பரையில் உட்கார்ந்து கொண்டு ஹிட்லர் மனம் புழுங்கி கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரையும் அணைத்து செல்வதே புத்திசாலித்தனம். ஒரு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆதரவு திரட்டுவது புத்திசாலித்தனம். அதன்றி சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அந்த பிரச்சினையை தீர்ப்பதில் உதவக்கூடிய சிலரை தாக்கினால் அவர்களுக்கு என்னவாயிற்று? போடா ஜாட்டான் என போய்விடுவார்கள்.

உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?

அன்புடன்,
AZAR.J

No comments: