அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

ராஜு மோசடி : புதிய தகவல்கள்

ராஜு மோசடி : புதிய தகவல்கள்
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு செய்த மோசடி குறித்த புதிய தகவல்களை நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.

ராமலிங்க ராஜு கூறியது போல் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபம் செயற்கையாக உயர்த்தப்பட வில்லை என்றும், லாபமாக கிடைத்த தொகை அனைத்தையும் ராஜு சுருட்டிவிட்டார் என்றும் அது கூறியுள்ளது.

இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக திகழ்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு கடந்த 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நிறுவனத்தின் லாபத்தை கடந்த சில ஆண்டுகளாகவே தாம் செயற்கையாக உயர்த்தி வந்ததாகவும், இதனால் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரொக்க கையிருப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தனது மோசடியை ஒப்புக் கொண்டு பதவி விலகிய ராஜு தற்போது கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜு கூறியது போல் லாபம் செயற்கையாக உயர்த்தப்படவில்லை என்றும், லாபமாக கிடைத்த ரொக்கம் அனைத்தையும் ராஜு சுருட்டிக் கொண்டு வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டதாகவும், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சத்யம் இயக்குனர் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் ராஜு கூறியிருந்ததற்கும் தற்போது விசாரணையில் தெரியவரும் தகவல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

சத்யம் நிறுவனத்திலிருந்து தாமோ தனது சகோதரர் ராம ராஜுவோ ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று ராமலிங்க ராஜு கூறியிருப்பதும் உண்மைக்கு மாறானது என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க சத்யம் கம்ப்யூட்டர்ஸ் செய்திதொடர்பாளர் மறுத்துள்ளார். மேலும் ராஜுவின் வழக்கறிஞரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: