அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

குழந்தைகளின் பார்வையில் இலங்கைத் துயரங்கள்

மனிதம்
குழந்தைகளின் பார்வையில் இலங்கைத் துயரங்கள்


Saturday, 17 January 2009 21:47

(ஜனவரி 17,2009 தேதியிட்ட தினமணி நாளிதழின் 5-வது பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக்கட்டுரை. கட்டுரையாளர் : ஆ.ரகுராமன்)

கண்ணீர்த்துளி தேசமான இலங்கையில் பட்ட துயரங்கள், தமிழ்க் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதைக் காட்டுவதாக அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த ஓவியங்கள், இலங்கையில் போர்ச்சூழல் ஓய்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதை ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.

இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகள் வரைந்த இந்த ஓவியங்களின் நேர்த்தியிலும், அழகிலும் குறைவிருக்கலாம்; ஆனால், இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களும், போர்ச்சூழலும், தாய்நாட்டுக்குப் போகவேண்டும் என்ற அகதிகளின் மனநிலையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் உள்ள குழந்தைகளின் மனநிலையை அறிந்துகொள்ளும் வகையில் ஓவியப்போட்டியை அண்மையில் நடத்தியது.

5 முதல் 15 வயது வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதில் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவியங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, சென்னை ராயப்பேட்டை ஸ்ரீபுரம் 2-வது தெருவில் உள்ள "தி மெட்ராஸ் டெர்ரஸ் ஹவுஸி"-ல் "கண்ணீர்த் துளியுள் சூரிய ஒளி" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 18-ம் தேதி வரை காலை 11-ம் தேதி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த நிரஞ்சன் ஓர் ஓவியம் வரைந்துள்ளார். இலங்கையில் குண்டு வெடிப்பு, காரணமில்லாமல் கைது, பெண்களிடம் தவறான நடத்தை போன்றவற்றை வரைந்து விட்டு, கல்லறையை வரைந்து அதில் அமைதி குடிகொண்டுள்ளதாக எழுதியுள்ளார்.

பல குழந்தைகள் தாங்கள் டாக்டராக, கம்ப்யூட்டர் பொறியாளராக வர வேண்டும் என்ற விருப்பத்தையும் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். சில குழந்தைகள் தாங்கள் பள்ளிகளுக்குச் சென்று கல்வி பயில்வதைப் போல், இலங்கையில் உள்ள தங்களது சகோதரர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

இலங்கை ராணுவத்தினர் அப்பாவிகளைக் கொல்வது போலவும், பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போலவும் பல ஓவியங்களில் குழந்தைகள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

செட்டிமேடு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயகாந்த் என்ற மாணவர், "வெளியில் எந்த ஒரு தவறு நேர்ந்தாலும் முகாமில் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். அகதிகள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நடுக்கடலில் அப்பாவி ஈழத் தமிழர்கள் தத்தளிப்பது போல் ஓர் ஓவியம் நெஞ்சத்தைத் தொடுவதாக உள்ளது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வர அகதிகள் நிகழ்த்தும் உயிர்ப் போராட்டம் இதில் உறைந்து நிற்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் அகதிகளின் மனசாட்சியைப் பிரதிபலிப்பது போல் எப்போது ஈழம் திரும்புவோம் என்று அந்த ஓவியத்தின் மூலம் 6 வயது கிறிஸ்டி கேட்கிறார்.

'ஷெல்' வெடிச் சத்தமும், கண்ணிவெடிச் சத்தமும் இல்லாத அமைதி நிறைந்த விடியலை எம்நாடு காண வேண்டும் என்று வி.சண்முகப்பிரியன் என்ற மாணவர் தமது ஓவியத்துக்குப் பின்னால் கவிதை தீட்டியுள்ளார்.

துப்பாக்கிகள், பீரங்கிகள், கண்ணீர்த் துளிகள் என ரத்தமயமான இலங்கையை இ.திலீப் ராஜு என்ற மாணவர் வரைந்துள்ளார். சமாதானப் புறா இலங்கையை விட்டுப் பறப்பது போல் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிங்களர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து வாழ்வது போலவும், இருகரம் நீட்டி அமைதியை வேண்டுவது போலவும் சில ஓவியங்கள் உள்ளன.

ஓர் ஓவியத்தில் சூரியன் மலை முகடுகளில் மறைவது போலவும், ஒரு வீட்டுக்குப் பாதை செல்வது போலவும் வரையப்பட்டுள்ளது. மாலையில் சூரியன் தனது வீட்டுக்குப் போகிறது. நாங்கள் எப்போது வீடு திரும்புவோம்? என்ற 7 வயது சரிகாவின் கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை.

படங்கள், கட்டுரை - நன்றி : தினமணி

No comments: