அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

ஐடி துறையில் சறுக்கல்: பி.இ. மாணவர்கள் கலக்கம்

ஐடி துறையில் சறுக்கல்: பி.இ. மாணவர்கள் கலக்கம்


சென்னை, ஜன. 16: தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சறுக்கலையடுத்து, தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள் 8 சதவீதத்துக்கும் குறைவே.

பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1.20 லட்சம் மாணவர்கள் பி.இ. பட்டத்துடன் வெளியேறுகின்றனர்.

இவர்களில் 75,000 முதல் 80,000 பேர் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த 3 படிப்புகளுக்கும் அதிக முதலீடு தேவை இல்லை என்பதால் 90 சதவீத பொறியியல் கல்லூரிகளில் இப்படிப்புகள் மட்டுமே உள்ளன. இப் படிப்புகளின் மீது மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் இருந்த மோகத்தால் பெரும்பாலான மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்ந்தனர். இந் நிலையில், உலக அளவில், ஐடி உள்ளிட்ட துறைகள் சார்ந்த "நீர்க்குமிழி' பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் வல்லரசுகளாக இருந்த நாடுகள் கூட தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

சென்னையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: சென்னையில் மட்டும் ஓரிரு ஆண்டுகளில் ஐடி, கம்ப்யூட்டர் துறை சார்ந்த நிறுவனங்களை நம்பியிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கல்வித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் சர்வதேச அளவில் இந்திய தொழில் நிறுவனங்களின் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும் பெருமளவு பாதித்துள்ளது.

இது, ஐடி சார்ந்த தொழில் நிறுவனங்களையும் நேரடியாகப் பாதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஐடி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் உளிட்ட படிப்புகளைப் படிக்கும் ஆயிரக்கணக்கான பி.இ. மாணவர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

கிடப்பில் போடப்படுமா, ஐடி பூங்கா திட்டங்கள்? மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கும் அரசின் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து டெக்னோகிராஃப்ட் இந்தியா காலேஜ் ஃபைண்டர் என்ற கல்வி ஆலோடனை நிறுவனத்தின் தலைவர் டி. நெடுஞ்செழியன் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்நிலையில், தற்போது ஐ.டி. மற்றும் கம்ப்யூட்டர் துறையில், விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்று கோலோச்சுகின்றன. இதர பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. அதற்கான சூழலும் தற்போது இல்லை.

இத்துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளோ அல்லது ஆராய்ச்சித் திட்டங்களும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளன.

வெளிநாடுகளில் எந்த மாதிரியான தொழில்நுட்பப் பணியாளர்கள், நிபுணர்கள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பாடத் திட்டங்களை வகுப்பதில் நமது கல்வி, தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது இல்லை.

நாட்டில் 200 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், செல் போன் உதிரிபாகங்கள் பெரும்பாலும் சீனா, கொரியா, தைவான் ஆகிய நாடுதளில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இதனால், நாட்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி, வணிக இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை தமிழகத்தில் போதிய அளவில் தொடங்க வேண்டும். இதற்கேற்ப பொறியாளர்களை உருவாக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு, மருத்துவம், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய பொறியியல் படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார் நெடுஞ்செழியன்.

No comments: