அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

சந்த்ராயன் விண்கலமும் மதநம்பிக்கைகளும்!!!

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தும் நிலவில் மனிதன் இறங்கவேயில்லை என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் இன்றும் நம்புகிறார்கள். Apollo Hoax என்று கூகிலிட்டால் சுவாரஸ்யமான பல விடயங்கள் கிடைக்கும். நிலவில் மனிதன் வாழமுடியுமா என்ற நெடுநாளைய ஆசையின் தொடர்ச்சியால் நிலவு குறித்த மனித ஆய்வுகள் தொடர்கின்றன.

இயற்கையை வணங்கி வந்த பண்டைய மனிதர்கள் நிலவைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். கிரேக்கர்களின் வழிபாடுகளில் நிலவுக்கு முக்கிய இடமுண்டு. கிரேக்கர்கள் தவிர்த்து இந்துக்களில் சிலர் நிலவை "சந்திர பகவான்" என்று நம்பி வழிபடுகிறார்கள்.இவை தவிர்த்து ஏனைய மதங்களில் நிலவு குறித்த நம்பிக்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய வரலாற்றிலும் நிலவு குறித்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றத் தொடக்கத்தில் சந்திரன் பிளக்கப்பட்டதாக குர்ஆன் அறிவிக்கிறது.சமகாலத்தில் நம் இந்தியப் பகுதியான கேரளாவை ஆண்ட சேரமான் இரும்பொறை இந்நிகழ்வைப் பார்த்ததாகவும் கேரளக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலவுக்கு விண்கலம் அனுப்புமளவுக்கு விஞ்ஞான தொழில்நுட்ப மேன்மை அடைந்துள்ள நமது விஞ்ஞானிகள் சந்த்ராயன் விண்கலம், சரியாக இலக்கை சென்றடைய திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன! விஞ்ஞானத்தையும் மீறிய ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயர் திருப்பதியில் விசேச பூசை செய்திருக்க வேண்டும்.!

இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பதால் திருப்பதிவெங்கடாசலபதியை வேண்டி இருக்கக் கூடும்! இவருக்கு முன்பு இந்திய அணுசக்தித்துறையின் தலைமை விஞ்ஞானியாகவும் பின்னர் இந்திய ஜனாதிபதியாகவும் இருந்த A.P.J.அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு மதச்சார்பு அடையாளத்துடன் நடந்ததாக அறிய முடியவில்லை! அப்படி நடந்திருந்தாலும் பழமைவாதி, அடிப்படைவாதி என்ற முத்திரைகளுடன் எங்காவது ஒரு சிறிய ஆய்வுக்கூடத்திலேயே அவரின் ஆய்வுகள் முடக்கப் பட்டிருக்கும்!

சேதுக்கால்வாய் திட்டத்தை ராமர் பாலம், இந்துக்களின் மதஉணர்வு என்றெல்லாம் காரணம் சொல்லித் தடைபோட்டுவரும் சங்பரிவாரங்கள் நிலவுக்கு விண்கலம் அனுப்புவது சந்திரபகவானை அவமதிக்கும் செயல் அல்லது இந்துக்களின் மதநம்பிக்கையைச் சீண்டும் செயல் என்று வாய் திறக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. ராமர் பாலம் குறித்து அமெரிக்காவின் நாஸா ஆய்வு மையம் சொன்னதை, ராமர் பாலம் இருந்ததற்கான விஞ்ஞானச் சான்றாகச் சொல்லி பரிவாரங்களின் ஊதுகுழல்கள் செய்திகளில் பரவவிட்டார்கள். அதே நாஸாதான் சந்திரனை பூமியின் துணைக்கோல் என்றும் சொல்கிறது! பரிவாரங்களுக்கு எது அரசியல் லாபமோ அதை மட்டுமே பற்றிப் பிடித்துக் கொள்வார்கள் என்பதற்கு இதுவும் சான்று.

திருக்குர்ஆனையும் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் பொய்ப்படுத்த முனைந்த எத்தனையோ முயற்சிகளில் தோல்வியுற்ற பலரைப் பற்றி வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அறிவியல் அறியப்படாத காலத்தில் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட இவ்வரிய வானியல் நிகழ்வைக் குறித்து எவரும் ஆராயாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.வானியல்/நிலவியல் ரகசியங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் உலக விஞ்ஞானிகள் இந்நிகழ்வு குறித்த ஆய்வைச் செய்துள்ளார்களா அல்லது திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளார்களா என்று தெரியவில்லை. விஞ்ஞானிகளை வியக்க வைத்த குர்ஆன் கூறும் இந்நிகழ்வை இனியாவது விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து வெளியிட வேண்டும்.

சந்த்ராயன் விண்கலம் வெற்றிகரமாக இலக்கைச் சென்றடைந்து, நம் இந்தியர்களின் அறிவாற்றலை உலகிற்கு மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று மனதார விரும்பும் இந்தியர்களும் அடியேனும் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்க மதசார்பற்ற பாரதம்!

No comments: