அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

மும்பை தாக்குதல் - கேட்கக்கூடாதக் கேள்விகள்!

மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு வகையான யூகங்கள் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் உலாவி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலைக்காட்சியாக "Mumbai Under Attack" "Mumbai in Fire" "Mumbai 26/11" எனத்தலைப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒளிபரப்பி ஊடகக் கடமையை நிறைவு செய்தனர்.

அடுத்ததாக இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான், லஷ்கரே தோய்பா etc காரணம் என்று அத்வானிமுதல் தினமலர்வரை சொன்னதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா முதல் மேற்கத்திய நாடுகள் 'அல்காயிதா' முத்திரைகுத்தி 9/11 இன் இந்தியப் பதிப்பாக கருதி உள்ளார்கள். மாலேகான் நிகழ்வில் முகத்திரை கிழிக்கப்பட்ட பிறகு மறந்து போயிருந்த 'இஸ்லாமிய தீவிரவாதம்' ஒருவழியாக தூசுதட்டப்பட்டுள்ளது!

இத்தாக்குதலை நடத்தியது டெக்கான் முஜாஹிதீன்கள் என்று முதற்கட்டச் செய்திகள் வெளியாயின. பிடிபட்டத் தீவிரவாதியின்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியதாகவும், திசைதிருப்ப டெக்கான் முஜாஹிதீன் என்றபெயரில் ஈமெயில் அனுப்பியதாக ஒப்புக் கொண்டதாகச் செய்திகள் வெளியாயின. (http://thatstamil.oneindia.in/news/2008/11/27/india-terrorists-came-from-pakistan-by-sea.html)

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் மரண விளையாட்டு விளையாடிய தீவிரவாதிக்கு, email@deccanmujahideen.com குறித்தும், அது திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்டதென்றும் எப்படி தெரிந்திருக்கும்? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

முதலில் இருபது தீவிரவாதிகள் வந்தனர். ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். ஐவர் பிடிபட்டனர். இருவர் போலீஸ்வேனில் தப்பியோடி விட்டனர். மீதிபேர் ஹோட்டலில் உள்ளனர் என்று செய்தி வந்தது. அடுத்து பத்துபேர், அஜ்மல் எனும் பாகிஸ்தானி பிடிபட்டான் என்றும்.பிறகு பதினாறு பேர், பிடிபட்டவன் ஆஸம் என்றனர்.இடையே, வியாபாரச் சண்டையால் தாவூத் இப்ராஹீமின் கை இதிலுள்ளது என்றும் சொல்லப்பட்டது.சிறைகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும்.பிறகு, பாகிஸ்தான் மாரியட் ஹோட்டலைப்போல் மும்பை தாஜ் ஹோட்டலையும் தகர்க்கவே வந்தோம். என்றும் சொன்னதாகச் செய்திகள் வந்தன. பிறகு, ஐயாயிரம் பேரைக் கொல்லவே வந்தோம்.என்றனர். இவற்றில் எது உண்மை என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

ஐயாயிரம் பேரைக் கொல்வதே நோக்கமென்றால் வடமாநிலங்களில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டிருக்கலாம்.அங்குதான் மோடி, அத்வானி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தார்கள். மும்பையிலிருந்து அடித்து விரட்டப் பட்ட பிகாரிகள் சிலரை சேர்த்துக்கொண்டு தாக்கரேயை தாக்கியிருக்கலாம். அனாயசயமாக இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பாதுகாப்பு நிறைத்த நட்சத்திர ஹோட்டலில் அறையறையாகச் சென்று ஐயாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிட்டது எவ்வளவு முட்டாள்தனமாகப் போய்விட்டது? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

கர்கரேயைக் கொன்றுவிட்டு போலீஸ் காரில் தப்பிய தீவிரவாதிகள் எங்கு சென்றனர்? அவர்களை ஏன் எந்தப்போலீஸ்காரரும் பின்தொடர்ந்து விரட்டிப் பிடிக்கவில்லை? என்று யாரும் கேட்கவில்லை! காமா மருத்துவமனையைத் தாக்கியவர்கள் மராட்டியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. தீவிரவாதிகள் உர்தூ பேசினால் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களென நம்பலாம்! மராட்டி பேசியதால் மராட்டியத் தீவிரவாதிகளோ? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

பாகிஸ்தானிலிருந்து அதிவேகப் படகில் கடல்வழியாக ஊடுறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது. மும்பையை விடக் குஜராத் கடல்பகுதி மிகவும் வசதியாக இருக்கும்போது குஜராத்தை ஏன் தவிர்த்தார்கள்? துறைமுக வர்த்தகத் தலைநகரான மும்பைக்குள் எல்லைதாண்டி தாக்குமளவு மும்பை கடல்பகுதி கேட்பாரற்றுக் கிடக்கவில்லை. சர்வதேசங்களிலிருந்து சரக்குக் கப்பல்கள் வந்துசெல்லும் பிஸியான கடல்பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடிக்க வந்தாலே பிடிபடும்போது ஆயுதங்களுடன் வந்தார்னார்கள் என்பது நம்பும்படியாக இல்லையே? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

சமீப குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் சொல்லப்பட்டது.சொல்லி வைத்தாற்போல் அனைத்து ஊடகங்களிலும் ஒரேயொரு தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் கொலைவெறியுடன் நிற்கும் புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.வேறு தீவிரவாதிகள் எவனும் எந்தக்காமிராவிலும் படம்பிடிக்கப் படவில்லையா? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

சர்வதேசப் பிரமுகர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிகளிலும் அத்தகைய கேமராக்கள் செயல்பட வில்லையா? செப்டம்பர்-11 தாக்குதலுக்குப் பின்னர் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும் அமெரிக்க, பிரிட்டானியர்களும்கூட அத்தகைய பாதுகாப்பற்ற விடுதிகளிலா தங்கினர்? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

மாலேகான் மற்றும்பிற குண்டு வெடிப்புகளில் 'இந்துத்துவா தீவிரவாதம்' சந்திசிரிச்சு, மன்மோகன்சிங் தலைமையிலான அரசு போகிற போக்கில் முஸ்லிம்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்ய வாய்ப்பிருந்தச் சூழலில், மும்பை தாக்குதலின்மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு என்ன பயன்? வெண்ணை திரண்டுவரும்போது தாழியை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'

No comments: