அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

அமர்நாத் முதல் சேதுக் கால்வாய் வரை!

காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் மதஉணர்வுகளை மதித்து, அரசியல் இலாப நட்டங்களைப் பாராமல் நேர்மையாக நிலம் ஒதுக்க முன்வந்து,கூட்டணியினரின் எதிர்ப்பால் ஆட்சி கவிழும் நிலையில், ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்று, சுற்றுலாத் துறையே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் என்று அறிவித்த பிறகும் பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை துறந்துள்ள முதல்வர் குலாம்நபி ஆசாத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மஸ்ஜிதை வன்முறையாக இடித்துக் கற்பனைக்காவியப் பாத்திரமான ராமர் பிறந்ததாக சாமானியர்களை நம்ப வைத்து முஸ்லிம்களைக் கொன்று,இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும்,இயற்கையாய் தோன்றிய மணற்திட்டுக்களை ராமர் பாலம் என்றும் நம்பச்சொல்லி தமிழகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும் சிலருக்குள்ள தேசபக்தி அல்லது பெரும்பான்மை உரிமையைப் போல், காஷ்மீர் கூட்டணிக் கட்சி அரசியல்வாதிகளும், யாத்ரிகர்களால் காஷ்மீர் மாசடையக்கூடும் என்று நம்பி மதஉணர்வுகளைத் தூண்டியிருக்கக் கூடும்! (அதிர்ஷ்டவசமாக அமர்நாத் குகையிலிருக்கும் பனிலிங்கம் காஷ்மீரின் அவமானச்சின்னம் என்றோ அல்லது அமர்நாத் காஷ்மீரிகளின் ஜென்மபூமி என்றோ நம்பி உரிமை கோரவில்லை!)

மதஉணர்வுகளைத் தூண்டி அரசியல் சுகங்காணும் சங்பரிவார, பாஜகவுக்கு இணையாக காஷ்மீர் உதிரிக்கட்சித் தலைவர்களும் நடந்து கொண்டது அப்பட்டமான மதவாத அரசியல்.இஸ்லாமிய ஆட்சியாகவே இருந்தாலும்கூட மாற்று மதத்தவரின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்ற பண்பாடு தெரியாதவர்கள்.

"காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்து விட்டு, காஷ்மீரையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது" என்று அரசியல் சாசன ஆர்ட்டிக்கில் # 370 ஆசைகாட்டி இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட வரலாறு தெரியாமல் சந்தடிச் சாக்கில் சிலர் முணுமுணுத்துள்ளனர்.

அமர்நாத் யாத்ரிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யக்கூடாதென்று காஷ்மீரிகள் தவிர, இந்தியாவின் எப்பகுதியிலும் முஸ்லிம்கள் வாய்திறக்காத நிலையில் ஒரு மாநில அரசியலுடன் தொடர்புடையப் பிரச்சினையுடன் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களையும் இணைத்துப்பேசுவது கடைந்தெடுத்த மதவெறி!

மேலும், முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை அரசு கண்காணிப்பில் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் வாரியத்தைக் அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டதன் நோக்கமும் புலப்படவில்லை.(முஸ்லிம்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டு, அவற்றையும் முஸ்லிம்களே நிர்வகிக்கிறார்கள் என்றும் சொல்லக் கூடும் ;-) வக்ப் வாரியத்தை முஸ்லிம்கள் நிர்வகிப்பதுபோல் அறநிலையத் துறை, தேவசம் போர்டு ஆகியவை இந்துக்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.

முஸ்லிம்களால் வழங்கப்பட்ட எண்ணற்ற வக்ப் சொத்துக்களை தொல்லியல் ஆய்வுத்துறை கையகப்படுத்தி, முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது. வேலூர் கோட்டையிலிருருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதையும்,அதே வளாகத்திலுள்ள கோவிலில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை என்பதையும் சற்று நினைவில் கொண்டு,ஹஜ்மானியம் என்றபெயரில் திரும்ப வழங்கப்படும் தொகை, ஹாஜிகள் செலுத்திய முன்பணத்திலிருந்து கிடைத்த இலாபத்தின் சிறுபகுதியே என்பதை "ஹஜ் மானியமும் வெட்கமும்" என்ற பதிவில் சுட்டியிருந்தை வாசிக்குமாறு திரு.பத்ரியை பரிந்துரைக்கிறேன்.

நாட்டின் சமயசார்பின்மை சீர்குலையும்போதெல்லாம் அரசியல் சாக்கடையைக் கலக்கி மதவெறி மீன்பிடிக்கும் அசைவ சங்பரிவாரங்களை தேசிய அரசியலை விட்டே துடைத்தெறிவது, ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிவதைவிட மிக அவசியம்!

No comments: